(எம்.மனோசித்ரா)
இலங்கையின் அரசாங்கம் கடந்த காலத்தில் கடுமையான துஷ்பிரயோகங்கள் செய்த அதிகாரிகளின் பொறுப்புக்கூறல் சம்பந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை உக்கிரமாக எதிர்த்து தடுத்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில், இலங்கையில் கடுமையான சர்வதேச குற்றங்களுக்கு நீதியை நிலைநாட்டும் தீர்மானத்தை நிறைவேற்றுவதுடன் தொடர்ச்சியான துஷ்பிரயோகங்களை கண்டிக்கப்பட வேண்டும் என ஜெனிவாவிற்கான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் ஜோன் ஃபிஷெர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை அரசாங்கத்தின் நீதி மீதான தாக்குதல் இன்றும் எதிர்காலத்திலும் மனித உரிமை மீறல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது, 'ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும்.'
2020 ஆம் ஆண்டில் பொறுப்புக்கூறலை வழங்குவதற்கான முயற்சிகள் கணிசமாகக் குறைந்துவிட்டன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்க்ஷ நிர்வாகத்தின் போது நடந்த கொலைகள் மற்றும் வலிந்து காணாமல் போனவர்கள் குறித்து விசாரிக்கும் மூத்த காவல்துறை அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் அல்லது வெளிப்படையாக இட்டுக்கட்டப்பட்ட குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணையம் அவரது நண்பர்களின் மற்றும் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகளில் தலையிட முயன்றுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் சோதனைகள் தாமதமாகி சீர்குலைக்கப்பட்டுள்ளன.
ராஜபக்ஷ ஆதிக்கம் கொண்ட பாராளுமன்றம் அரசியலமைப்பில் ஒரு திருத்தத்தை நிறைவேற்றியது, இது ஜனாதிபதி அதிகாரத்தின் முக்கிய கட்டுப்பாடுகளை இரத்து செய்து, நீதித்துறை மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணையம் போன்ற நிறுவனங்களின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது.
2009 ல் முடிவடைந்த இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது அரசாங்க பாதுகாப்புப் படைகள் மற்றும் விடுதலைப் புலிகள் நடத்திய அட்டூழியங்களை ஐ.நா சபை, பொது ஊடகங்கள் மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் நன்கு ஆவணப்படுத்தப்படுத்தியுள்ளன.
இந்த நடவடிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் அடங்கியுள்ளது. ஐ.நாவின் உள்ளக அறிக்கையில் யுத்தத்தின் இறுதி மாதங்களில் பொதுமக்களைப் பாதுகாக்க உதவும் ஐ.நா.வின் முறையான தோல்விகளை அம்பலப்படுத்தியது.
2005 மற்றும் 2015 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கண்மூடித்தனமான தாக்குதல்கள், சுருக்கமான மரணதண்டனைகள் மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட ஏராளமான போர்க்குற்றங்கள் பதிவாகியுள்ளன.
நவம்பர் 2019 இல் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, போர்க்குற்றங்கள் மற்றும் பிற கடுமையான மீறல்களில் சிக்கியுள்ளவர்களை மூத்த நிர்வாக பதவிகளுக்கு நியமித்துள்ளார்.
நாட்டின் 'போர்வீரர்கள்' மீதான தாக்குதலாக அறிவித்து, மனித உரிமைகள் பேரவையின் 2015ம் ஆண்டின் தீர்மானத்தின் கீழ் உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளை தவிர்த்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான இலங்கையின் கடமைகளை அவர் மறுத்தார். துஷ்பிரயோகத்திற்கு தண்டனை பெற்ற மிகச் சில வீரர்களில் ஒருவரை அவர் மன்னித்தார்.
2015-2019 வரை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அரசாங்கத்தின் போது, மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல பொலிஸ் விசாரணைகள் முன்னேற்றம் கண்டன.
இவை கொலைகள் மற்றும் வலிந்து காணாமல் போனவர்களுக்குரிய உத்தியோகபூர்வ பொறுப்புக்கான ஆதாரங்களை வெளிப்படுத்தின. எவ்வாறாயினும் 2009 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் லசந்தா விக்ரமதுங்க கொலை உட்பட 2010ல் பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார். 2008-2009ல் இளைஞர்கள் கடற்படை புலனாய்வு அதிகாரிகளால், பணம் அறவிடுவதற்காக, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது போன்ற முக்கியமான விசாரணைகள் தற்போது கைவிடப்பட்டுள்ளன..
2006 ஆம் ஆண்டு திருகோணமலை படுகொலை, அதில் ஐந்து தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்டனர், மற்றும் ஒரு பிரான்ஸ் தொண்டு நிறுவனத்தின் 17 உறுப்பினர்களை படுகொலை செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிற முக்கிய விசாரணைகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.
மீண்டும் சுய தணிக்கை இலங்கை ஊடகங்களுக்கு திரும்பியுள்ளது, அதே நேரத்தில் , காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்றறிய போராடும், பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது கடுமையான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்களை மேற்கொண்டுள்ளனர். அச்சத்தின் காரணமாக மக்கள் சுய தணிக்கை நிலைமைக்கு சென்றுள்ளனர்.
எனவே பாதிக்கப்பட்டவர்களின் பல குடும்பங்கள் அரசாங்கத்தின் விரோதப் போக்கை எதிர்கொண்டு மனித உரிமைகளுக்கான மரியாதையை நிலைநிறுத்த மனித உரிமைகள் பேரவையை நோக்கி திரும்பியுள்ளன. 2020 ஆம் ஆண்டில், ஜெனிவாவில் ஐ.நா செயல்பாட்டில் ஈடுபடும் ஆர்வலர்களை அரசாங்கம் துன்புறுத்தியது.
ஜனவரி 21 ம் திகதி ஜனாதிபதி மற்றுமொரு ஒரு புதிய உள்நாட்டு விசாரணை ஆணையத்தை அறிவித்தார், இது முந்தைய பல விசாரணை ஆணையங்களின் கண்டுபிடிப்புகளை மறுஆய்வு செய்யவென நியமித்தார் அவை பொறுப்புக்கூறலுக்கு வழிவகுக்கவில்லை அல்லது காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிப்படுத்தவில்லை.
இந்த செயல்முறையின் முடிவை அரசாங்கம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது, அதாவது, செப்டம்பர் மாதம் மனித உரிமைகள் பேரவையில் மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் 'ஏற்றுக்கொள்ள முடியாதவை' மற்றும் 'கணிசமான ஆதாரங்கள்' இல்லை என்று அறிவித்துள்ளது.
மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண சர்வதேச அழுத்தத்தை திசைதிருப்ப முந்தைய இலங்கை அரசாங்கங்கள் விசாரணைக் ஆணைக்குழுக்களை பயன்படுத்தின, அந்த ஆணைக்குழுக்கள் ஒருபோதும் அடிப்படை சர்வதேச தரங்களை பூர்த்தி செய்யவில்லை. இந்த தந்திரோபாயத்தை ராஜபக்ஷ அரசாங்கம் பயன்படுத்துவதால் மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்கள் திசை திருப்ப முயற்சிக்க கூடாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் பல ஆண்டுகால தட்டிக்கழிக்கும் வகையிலான தாமதத்தையும், முன்னறிவிப்பு மற்றும் எதிர்ப்பையும் ஏற்கெனவே எடுத்துள்ள நடவடிக்கைகளையும் கருத்திற்கொண்டு புதிதாகவும் வலுவாகவும் கட்டமைக்க வேண்டும்.
சபை உறுப்பினர்கள் மிக மோசமான சர்வதேச குற்றங்களுக்கான சர்வதேச சட்டத்தின் கோட்பாடுகளை ஆதரிக்க வேண்டும், அதிகாரம் வழங்கப்பட்ட ஐ.நா. பொறிமுறையையோ அல்லது செயல்முறை ஒன்றின் ஊடாக ஆதாரங்களை சேகரிக்கவும், பாதுகாக்கவும், பகுப்பாய்வு செய்யவும் கட்டாயப்படுத்த வேண்டும்.
மேலும் ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் பொறுப்புக்கூறலுக்கான வழிகள் குறித்து சபைக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இலங்கைக்குள் நிலைமை குறித்து அறிக்கை அளிக்க மனித உரிமைகள் ஆணையாளருக்கு புதுப்பிக்கப்பட்ட ஆணையும் வழங்கப்பட வேண்டும். கடுமையான முறைகேடுகளுக்கு உட்பட்ட நபர்கள் மீது வெளிநாட்டு அரசாங்கங்கள் தடைகளை விதிக்க வேண்டும்.
'உயர் ஸ்தானிகர் அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள சூழ்நிலைக்கு ஒரு புதிய தீர்மானம் பதிலளிப்பதை உறுதிசெய்து, சபையின் பொறுப்புகளை நிலைநிறுத்துவதை மனித உரிமைகள் பேரவை உறுதி செய்ய வேண்டும். சர்வதேச அழுத்தத்தைத் தக்கவைக்க ஒரு அர்த்தமுள்ள புதிய தீர்மானம் முக்கியமானது.
அல்லாவிடில் உலகெங்கிலும் உள்ள துஷ்பிரயோகக்காரர்களுக்கு ஒரு பயங்கரமான செய்தியை தந்துவிடும். அதாவது நாடுகளின் சமூகம் மிகக் கொடூரமான குற்றங்களைக் கூட கவனிக்காமல் இருக்க தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM