5 இலட்சம் தடுப்பூசிகளை ஏற்றிய சிறப்பு விமானம் இன்று இலங்கை வருகிறது

Published By: Digital Desk 3

28 Jan, 2021 | 08:37 AM
image

(எம்.மனோசித்ரா)

இந்தியா வழங்கும் 5 இலட்சம் கொவிட்-19 தடுப்பூசிகளை ஏற்றிய சிறப்பு விமானம் இன்று வியாழக்கிழமை காலை 11 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக அவற்றை கையளிப்பார் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்க தெரிவித்தார்.

மேலும் பற்றாக்குறையாக உள்ள தடுப்பூசிகளை சீனா மற்றும் ரஷ்யாவிடமிருந்து பெற்றுகொள்வதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்படுகின்ற தடுப்பூசிகளையும் விரைவாக நாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து இன்று கொண்டு வரப்படவுள்ள கொவிட் தடுப்பூசி தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை இணையவழியூடாக நடைபெற்றது.

இதன் போது மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கொவிட் தடுப்பிற்கான தடுப்பூசி இது வரையில் சகலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவொரு விடயமாகும். இதற்கு சுகாதார அமைச்சு பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதோடு , கொவிட் தடுப்பிற்கான ஜனாதிபதி செயலணியும் 30 நாட்களில் பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இன்று காலை 11 மணிக்கு தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும்.

ஏனைய பல நாடுகள் இவ்வாறான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கு சுமார் 7 - 8 ஆண்டுகள் மதிப்பீட்டின் பின்னரே அனுமதியளிக்கும். ஆனால் கொவிட் விவகாரத்தில் அவ்வாறு செய்ய முடியாது. தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் தடுப்பூசியின் தேவை இன்றியமையாததாகும். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சுகாதார அமைச்சிலுள்ள களஞ்சியசாலைக்கு தடுப்பூசிகள் எடுத்துச் செல்லப்படும்.

பைஸர் என்ற தடுப்பூசியை களஞ்சியப்படுத்துவதற்கு அதிகூடிய குளிர்நிலைமை தேவைப்படும். ஆனால் இந்தியாவின் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை களஞ்சிப்படுத்துவதற்கு உகந்த குளிர் நிலைமை இலங்கையின் 25 மாவட்டங்களிலும் காணப்படுகிறது. எனவே அவற்றை களஞ்சியப்படுத்துவதில் எவ்வித சிக்கலும் கிடையாது.

வெள்ளிக்கிழமை (நாளை) முதல் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பமாகும். முதற்கட்டமாக நேரடியாக சுகாதாரத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கும் இரண்டாம் கட்டமாக பாதுகாப்பு பிரிவினருக்கும் தடுப்பூசியை வழங்க எதிர்பார்த்துள்ளோம்.

அதனடிப்படையில் சுகாதார தரப்பில் சுமார் 1,50,000 பேரும் , பாதுகாப்பு பிரிவில் 1,20,000 பேரும் உள்ளடங்குவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களைத் தொடர்ந்து 65 வயதுக்கு மேற்பட்ட தொற்றா நோயால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு வழங்கப்படும். இலங்கையில் மொத்த சனத்தொகையில் 65 வயதுக்கு மேற்பட்டோர் 34 இலட்சம் பேர் உள்ளனர். அவ்வாறெனில் எமக்கு 70 இலட்சம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட 3 இலட்சம் சைனாபாம் தடுப்பூசிகளை வழங்க அந்நாடு விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இதே போன்று ரஷ்யாவிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இவ்விரு நாடுகளிடமிருந்தும் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். எனினும் இவற்றுக்கும் தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அனுமதியளிக்க வேண்டும்.

தேசிய மருந்தாக்கல் கூட்டு தாபனத்தினூடாக 3 மில்லியன் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம். பெரும்பாலான தடுப்பூசிகள் ஆயுட்காலம் 6 மாதங்கள் மாத்திரமே. எனவே அளவுக்கதிகமாக அவற்றை பெற்று களஞ்சியப்படுத்துவதில் நெருக்கடிக்கு முகங்கொடுக்க முடியாது.

கேள்வி : கொண்டு வரப்படும் தடுப்பூசிகளால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமாயின் அதற்கு யார் பொறுப்பேற்பது? தயாரித்த நிறுவனமா? இந்திய அரசாங்கமா?

பதில் : கொவிட் தடுப்பூசி மாத்திரமல்ல. எந்தவொரு தடுப்பூசியையும் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக் கொள்வதாயின் ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும். அந்த ஒப்பந்தத்தின் படி பொறுப்புக்களை அந்தந்த அரசாங்கமே ஏற்க வேண்டும். எனவே கொவிட் தடுப்பூசி குறித்த சகல பொறுப்புக்களையும் இலங்கை அரசாங்கமே ஏற்கும்.

கேள்வி : இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படும் தடுப்பூசி இலங்கையின் ஆய்வுகூடங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதா?

இந்த கேள்விக்கு பதிலளித்த விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே ,

பதில் : இல்லை. தடுப்பூசிகளை தமது ஆய்வு கூடங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தக் கூடிய வசதிகளுடைய நாடுகள் மிகக் குறைவாகும். இலங்கையில் அந்த வசதிகள் கிடையாது. இவ்வாறான உறுதிப்படுத்தல்கள் உலக சுகாதார ஸ்தாபனத்தினூடாக முன்னெடுக்கப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46