தெற்காசிய ஊடகவியலாளர்களுக்கு பத்திரிகை சுதந்திரம் தொடர்பான உறுதிப்பாடுகள் பாரிய அளவில் குறைந்து வருகின்றன. அதற்காக தெற்காசியாவில் சுய தணிக்கை, தந்திரோபாயங்கள் மூலம் கையாளுதல் புதிதல்ல. ஆனால் பத்திரிகையாளர்களுக்கு எதிராக வன்முறை உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை எடுப்பதில் பாகிஸ்தான் முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.
1992 முதல் 2020 வரையிலான காலத்தில் பாகிஸ்தானில் 61 ஊடகவியலாளர்கள் இறந்தனர். இதே காலகட்டத்தில், இந்தியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் தலா 51 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர், பங்களாதேஷில் 22 பேரும், இலங்கையில் 19 பேரும், நேபாளத்தில் 8 பேரும், மற்றும் மாலைத்தீவில் 2 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழுவின் (சி.பி.ஜே) தரவுகள் மற்றும் தகவல்களின் பிரகாரம், பாகிஸ்தானில் உள்ள ஊடகவியலாளர்கள், ''ஆபத்தான சூழலில்'' பணிபுரியும் போது கொல்லப்பட்டுள்ளமையை வெளிப்படுத்தியுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் அதிகமானவர்கள் பத்திரிகைள் மற்றும் தொலைக்காட்சிக்காக செய்தி சேகரிப்பவர்களாக இருக்கின்றார்கள். அதற்கு அடுத்த இடத்தில் இணையம் மற்றும் சமூக ஊடகங்களுடன் தொடர்புடையவர்களும் உள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகவியலாளரான ராஸா ரூமி என்பவர் தற்போது அமெரிக்காவின் நியூயோர்க்கில் வசித்து வருகின்றார். இவர் பாகிஸ்தானில் வைத்து அவருடைய வாகன சாரதி மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் மயிரிழையில் தப்பித்தவராக உள்ளார்.
இவர், ''பாகிஸ்தானியராக இருப்பது: சமூகம், கலாசாரம் மற்றும் கலை'' என்ற கட்டுரையை எழுத்தியுள்ளார். அத்துடன் இவர் பாகிஸ்தான் பற்றி மூன்று நூல்களும் எழுதியுள்ளார். அத்துடன் நியூயோர்க்கில் உள்ள இத்தாக்க கல்லூரியில் ஊடகவியல் கல்வியை போதிக்கும் ஆசிரியராகவும் உள்ளார்.
அத்தகையவர், பாகிஸ்தானின் ஊடக சுதந்திரம் தொடர்பாக பேசும்போது, பாகிஸ்தானில் ஊடகவியலாளர்கள் பெரும் நெருக்கடியில் இருந்தார்கள். அரசாங்கம் பின்பற்றிய தணிக்கைக் கொள்கைகள் காரணமாக அந்த நிலைமைகள் வரலாறு முழுவதும் நீடித்துக்கொண்டிருந்தன. தகவல் கட்டுப்பாடு அதிகார கருவியாகவும், ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்கத்தினை அப்படியே வைத்திருக்கவும் வழிசமைத்தது என்று குறிப்பிடுகின்றார்.
அத்துடன் சி.பி.ஜே.இன் தகவல்களின் பிரகாரம், நாடளாவிய ரீதியில் கொலை செய்யப்பட்ட 56 ஊடகவியலாளர்கள் உருது மற்றும் ஆங்கில மொழியில் பத்திரிகைகள், மற்றும் தொலைக்காட்சிகள் ஆகியவற்றுக்காக கடமையாற்றிக் கொண்டிருந்தவர்களே என்றும் கூறினார்.
மேலும், பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஏனென்றால் கடந்த காலங்களில் அரசு தணிக்கை செய்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தது. தற்போது நாட்டில் இராணுவ மயமாக்கல் அதிகரித்து வருகின்றது என்பதாலாகும் என்றும் கூறினார்.
இந்த நிலைமையானது அண்மைய காலங்களில் மேலும் மோசமடைந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். ஏனென்றால், பேராளிகள் மற்றும் ஆயுதக்குழுக்கள் ஆகியவற்றின் எழுச்சி அதிகமாகியுள்ளது. அரசு சாராதர்வகளும், பிரதேசங்களில் ஊடகவியலாளர்களுக்கான எதிரான வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றார்கள். தற்போதைய ஆட்சியில் உத்தியோக பூர்வமான கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் செய்திக்கதைகளை கட்டுப்படுத்த வேண்டியது மேலும் அவசியமாகின்றது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
மேலும், பாகிஸ்தானில் உயிரிழந்த ஊடகவியலாளர்களில் 35பேர் அரசியல் விவகாரங்களை அறிக்கை இடுபவர்களாக இருக்கின்றார்கள். ஆறுபேர் குற்றவியல் தொடர்பான செய்திகளை அறிக்கை இடுபவர்கள். ஆறுபேர் அமைச்சுகள், திணைக்களங்கள் தொடர்பிலும், மூவர் அரச துறைகள் சம்பந்தமாகவும், மேலும் பலர் போர் மற்றும் மனித உரிமைகள் சம்பந்தமாகவும் அறிக்கை இடுபவர்களாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், பாக்கிஸ்தானின் பத்திரிகைகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும் உறுதியான சுய தணிக்கைகளை பின்பற்றி வரும் அதேநேரம், டிஜிட்டல் ஊடகங்கள் பரந்துபட்ட தன்மையைக் கொண்டிருக்கின்றன. அதாவது பத்திரிகைள் மற்றும் தொலைக்காட்சிகளை விடவும் ஒப்பீட்டளவில் சுதந்திரத்தினைக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலைமையானது, அரசாங்கத்திற்கு பெரும் சவாலான விடயமாகவே உள்ளது. பாகிஸ்தானில் 2017ஆம் ஆண்டு இலத்திரனியல் குற்றத்தடுப்புச் சட்டம் (PECA-பெகா) இயற்றப்பட்டது. இதற்கு மேலதிகமாக அண்மையில் பாராளுமன்றத்தின் கருத்துக்கள் பெறமுடியாது சில சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. இது மேலும் மோசடிகள் மற்றும் வன்முறைகளுக்கு வித்திடுவதாக இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.
அத்துடன், இந்தச் சட்டம் அமுலாக்கப்பட்டதன் பின்னரான சூழலில் அரசாங்கத்திற்கு எதிரான பதிவுகளைச் செய்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உதாரணமாக கூறுவதாயின் 2017ஆம் ஆண்டு அரசுக்கு எதிரான பதிவுகளைச் செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக காவலில் வைக்கப்பட்டமை காணப்படுகின்றது. இவர்களில் சிலர் சொற்ப காலங்களிலேயே பாகிஸ்தானை விட்டு வெளியேறியிருந்தனர்.
பாகிஸ்தானில் ஊடகவியலாளர் சங்கங்கள், தொழிற்சங்கள் என்பன ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கு முயற்சிகளைச் செய்து வருகின்றன. ஆனாலும், அவை தீர்மானங்களை எடுத்தல், போராட்டங்கள், பேரணிகளில் ஈடுபடல் போன்றவற்றுக்கு அப்பால் ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கு எவ்விதமான செயற்பாடுகளை மேற்கொள்கின்றன என்ற கேள்வி காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, டிஜிட்டல் ஊடகங்களின் அரச எதிர்ப்புக் குரல்களை கட்டுப்படுவதற்காக, இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுதல்கள் ஆணைக்குழுவினை கடந்த ஒக்டோபரில் பாகிஸ்தான் நிறுவியுள்ளதாக கூறும் அவர், பேச்சாளர்களின் உரைகள், பொது முகவரி ஒளிபரப்புக்கள், நேர்காணல்கள் ஆகியவற்றை ஒளிபரப்புவதற்கு தடைகள் விதிக்கப்பட்டன.
குறிப்பாக, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப் தற்போதைய அரசாங்கத்தினை கடுமையாக விமர்சித்து உரையாற்றினார். இந்த உரையானது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் ஒளிபரப்பட்டன. இந்த ஒளிபரப்பு இடம்பெற்று சில மணி நேரத்திலேயே இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுதல்கள் ஆணைக்குழு உடனயடியாக மட்டுப்படுத்தல் சட்டங்களை அறிவித்து நடவடிக்கைகளை எடுத்தது.
இதற்கு எதிராக பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையகம், 16 ஊடகவியலாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை கூட்டிணைத்து இஸ்லாமபாத் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே ஊடவியலாளர் ராஸா, டசின் கணக்கானவர்கள் உயிரிழந்து விட்டார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் ஊடகங்களால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விடயங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்காகவும், நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் ஊடகவியலாளர்கள் கூட்டு முன்னணியொன்றை ஏற்படுத்த வேண்டும். ஆனால் பல ஊடகவியலாளர்கள் அவ்வாறான செயற்பாட்டிற்கு பதிலாக சுய தணிக்கையை கடைப்பிடித்து கூட்டு முயற்சியை தள்ளி விடுகின்றார்கள் என்று கூறுகின்றார்.
பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றதிலிருந்து, சர்வாதிகார மற்றும் சிவில் அரசாங்கங்களின் ஆட்சிக்காலங்களில் ஊடகங்கள் வெவ்வேறு வடிவங்களிலான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளன. எவ்வாறாயினும், சர்வாதிகாரத்தின் போது தணிக்கை மற்றும் ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் நேரடியாக இருந்தன என்பதை ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
அரசாங்கத்தின் அழுத்தங்களின் தந்திரோபாயங்கள் மற்றும் தணிக்கை முறைகள் சமீபத்திய ஆண்டுகளில் வெகுவாக மாறிவிட்டன. சமூக, கலாசார மற்றும் பொருளாதார பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்வதற்கும் சிவில் அரசாங்கங்களையும் அரசியல் தலைவர்களையும் விமர்சிக்க ஊடகங்கள் பொதுவான தகுதிகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் விமர்சிக்க முடியாத பகுதிகளும் இல்லாமலில்லை.
குறிப்பாக விமர்சனங்களை, சர்வாதிகார அரசாங்கம் மதம் மற்றும் மதத் தலைவர்கள், போர்க்குணமிக்க குழுக்கள், மத அமைப்புகள் பொதுவாக ஏற்பதில்லை. மறுபுறம், சிறுபான்மை மதங்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் மீதான விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இது எழுத்தப்படாத விதியாக பாகிஸ்தானில் இருக்கின்றது.
பாகிஸ்தானில் தணிக்கையின் தன்மையானது, ஊடகங்களின் வகை மற்றும் அவை மக்கள் தொகையை பெருமளவில் சென்றடைதல் ஆகியவற்றால் வேறுபடுகின்றன. உருது மற்றும் பிராந்திய மொழிகளில் அச்சு ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகள் பரந்த பார்வையாளர்களைக் கொண்டிருப்பதால், அவை ஆங்கில செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளை விட கடுமையாக ஆராயப்படுகின்றன.
இதனால், பொருளாதார அழுத்தங்கள் மற்றும் வன்முறைகளின் விளைவாக, பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக அமைப்புகள் எதை மறைக்க வேண்டும் என்பது குறித்து எழுதப்படாத விதிகளை உருவாக்கியுள்ளன. இந்த சுய தணிக்கை அளவுருக்கள் சமூகத்தின் குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் குறித்த தகவல்களின் மீதான ஆரோக்கியமான விவாதங்களையும் ஆபத்தான முறையில் தடுக்கின்றன.
இந்தப் பின்னணியில், பாகிஸ்தானின் ஊடகவியலாளர்கள் நாட்டில் பத்திரிகை சுதந்திரத்திற்கான அவர்களின் உறுதிப்பாட்டிற்கு பெரும் விலை கொடுத்து வருவதாகத் தெரிகிறது. எழுதும் சுதந்திரத்திற்கான நம்பிக்கையுடன், ஜனநாயகத்தின் நான்காவது தூண் பாகிஸ்தானில் மோசமான நிலையில் இருப்பதை வெளிக்காட்டுகிறது.
(இப்பதியின் எழுத்தாளர், அண்மையில் வெளியிடப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து தொலைக்காட்சி: டைனமிக்ஸ் ஆஃப் மீடியா, ஸ்டேட் அண்ட் சொசைட்டி ஆஃப் பாகிஸ்தான் என்ற நூலின் இணை ஆசிரியரும் அமெரிக்காவில் வசிக்கும் சுதந்திர ஊடகவியலாளரும், எழுத்தாளருமாவார்)
ரி.என்.எஸ்ஸிற்காக, குவைஸர் அப்பாஸ்
தமிழில் ராம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM