(எம்.ஆர்.எம்.வஸீம்)
கொவிட் 19 வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை பெப்ரவரி இரண்டாம் வாரத்துக்குள் கொண்டுவர தேவையான நடவடிகைகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது என மருந்து உற்பத்தி மற்றும் விநியோக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

உலக நாடுகள் கொவிட்டுக்கு எதிரான தடுப்பூசிகளை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்ற நிலையில் எமது நாட்டுக்கு தடுப்பூசியை கொண்டுவருவதற்காக அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொவிட் 19 வைரஸுக்கு எதிராக பல தடுப்பூசிகள் தற்போது அறிமுகமாகி வருகின்றன. அந்தவகையில் மொடர்னா, பய்சர் சீனா மற்றும் ரஷ்ய நாட்டு தடுப்பூசிகளை எமது நாட்டுக்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.
அதுதொடர்பான ராஜதந்திர கலந்துரையாடல்கள் சீன அரசாங்கம் மற்றும் ரஷ்ய அரசாங்கங்களுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
அத்துடன் கொவிட் 19 தடுப்பூசி தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை ஆராய்ந்து பார்த்து, பெற்றுக்கொள்ள முடியுமாகிய முதலாவது சந்தர்ப்பத்திலேயே சீனா அல்லது ரஷ்யா உற்பத்தி தடுப்பூசி ஒன்றை நாட்டுக்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.
மேலும் பய்சர் தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்துவதற்காக விசேட குளிர்சாதன வசதி தேவைப்படுகின்றது. அந்த வசதிகளை அதிகரிப்பதற்கு தேவயான உதவிகளை வழங்குவதற்கு உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன தங்களது விருப்பத்தை தெரிவித்திருக்கின்றன என்றார்.