சீனாவின் சாங்கே-5 என்ற விண்கலம் சந்திரனில் இருந்து கல், மண் போன்ற மாதிரிகளை எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக பூமியில் தரையிறங்கியுள்ளது.
இந்த விண்கலம், நெய் மங்கோல் எனப்படும் சீனாவின் தன்னாட்சிப் பகுதியில் அந் நாட்டு நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் தரையிறங்கியது.
விண்கலம் வந்தடைந்த இடத்தை, அகச்சிவப்புக் கதிர்களைப் பயன்படுத்தி, விண்கலத்தின் வெப்பத்தை வைத்து ஹெலிகாப்டரில் சென்று மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் அப்பல்லோ மற்றும் சோவியத் ரஷ்யாவின் லூனா திட்டங்கள் மூலம் 40 ஆண்டுகளுக்கு முன் சந்திரனில் இருந்து மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்பட்டன.
அதற்குப் பின் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சீனா, நிலவில் இருந்து மாதிரிகளைக் கொண்டு வந்துள்ளது.
இந்த மாதிரிகள் சந்திரன் மண்ணியல் மற்றும் ஆரம்ப கால வரலாறு குறித்து அறிந்துகொள்ள உதவக்கூடும்.
கடந்த நவம்பர் 27 ஆம் திகதி சங்கே - 5 விண்கலம் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தில் பல பகுதிகள் இருந்தன. சந்திரனை சுற்றிவரும் சுற்றுவட்டக் கலனில் இருந்து ஒரு பகுதி சந்திரனில் தரையிறங்கியது.
அதன் பின்னர் சந்திரனின் மேற்பரப்பில் துளையிடும், அள்ளும் கருவிகள் உதவியோடு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. எவ்வளவு மாதிரிகளை அது சேகரித்தது என தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் இது 2 முதல் 4 கிலோ வரையில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த கலன் மொத்தம் இரண்டு நாட்கள் மட்டுமே சந்திரனில் செலவழித்தது.
பிறகு அந்த மாதிரிகளை எடுத்துக்கொண்டு ஒரு வாகனம் சுற்றுவட்டக் கலனுக்குத் திரும்பியது. அங்கிருந்து புவிக்குத் திரும்பும் ஒரு சிறுகலன் மூலம் இந்த மாதிரிகள் புவிக்கு அனுப்பப்பட்டன.
அமெரிக்கா, ரஷ்யா இரு நாடுகளும் இதுவரை மொத்தம் சுமார் 400 கிலோ அளவுக்கு சந்திரனில் மாதிரிகளைச் சேகரித்துள்ளன.
இந்த மாதிரிகள் அனைத்துமே மிகவும் பழமையானவை. அதாவது சுமாராக 3 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை. ஆனால் சாங்கே - 5 கொண்டு வந்திருக்கும் சந்திரனின் பாறை மற்றும் மண் மாதிரிகள் மாறுபட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
சாங்கே-5, சந்திரனின் வடமேற்குப் பகுதியில், மூன்ஸ் ரூம்கெர் (Mons Rumker) என்கிற எரிமலைப் பகுதியைத் தான் குறி வைத்தது.
இந்த பகுதியைச் சேர்ந்த நிலவின் மாதிரிகள் 1.2 அல்லது 1.3 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
அத்தோடு இந்த மாதிரிகள், சந்திரன் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான கூடுதல் விவரங்களை வழங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் சாங்கே - 5 வெற்றி, விண்வெளித் துறையில் அதிகரித்து வரும் சீனாவின் திறனை பறைசாற்றுவதாகப் பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில், அமெரிக்காவும் நிலவுக்குத் தன் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு முன் நிலவில், இயந்திரங்களைக் களமிறக்க இருக்கிறது அமெரிக்கா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM