வீ.தனபாலசிங்கம்
கடந்த வாரம் இலங்கை வந்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் புதுடில்லி திரும்புவதற்கு முன்னதாக இறுதி நிமிடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இந்திய இல்லத்தில் சந்தித்து சுமார் அரைமணி மணிநேரம் பேசினார்.
இருவரும் தமிழர்களுக்கு ஓரளவு அதிகாரப்பரவலாக்கத்தை வழங்கும் மாகாணசபைகளின் எதிர்காலக்கதி குறித்தும் அதற்கு வழிவகுத்த அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் பற்றியும் பேசியதாகவும் அந்தப் பிரச்சினையின்கூருணர்ச்சித்தன்மையை மனதிற்கொணடு தாங்கள் பேசியதை இரகசியமாக வைத்திருப்பதற்கு இணங்கிக்கொண்டதாகவும் தெரியவருகிறது.
சம்பந்தனுடனான சம்பாசணையின்போது டோவால் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியில் கூடுதல் அக்கறை காட்டியதாகவும் பொருளாதார அபிவிருத்தியில் கூட்டமைப்பு அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று சம்பந்தனுக்கு ஆலோசனை கூறியதாகவும் அறிவிக்கப்பட்டது.
அரசியலமைப்பு மற்றும் அதிகாரப்பரவலாக்கல் போன்ற உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளில் தற்போதைய சூழ்நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்க இந்தியா விரும்பவில்லை அல்லது இந்தியாவினால் இயலவில்லை என்பதே உண்மையாகும்.
அதேவேளை, சீனாவின் செல்வாக்கு இந்து சமுத்திர பிராந்தியத்தில் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியா மூலோபாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற ஒரு நேரத்தில் கொழும்பை அந்நியப்படுத்துவதற்கு அல்லது அதனுடன் முரண்படுவதற்கு இந்தியா தயாராயில்லை. அதனால் ராஜபக்ச அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் இந்தியா இறங்காது. அது தான் இன்றைய புவிசார் யதார்த்த நிலை.
அதனால்,வடக்கு, கிழக்கு தமிழரின் அரசியல் பிரச்சினைகளில் அக்கை காட்டி அரசாங்கத்துடன் முரண்படுவதை விடவும் பொருளாதார அபிவிருத்தியில் அக்கறை காட்டுவது இந்தியாவைப் பொறுத்தவரை சமயோசிதமாக அமைகிறது. அது விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் ஒத்துழைக்க முன்வந்தால் தமிழர் பிரதேசங்களின் அபிவிருத்திச் செயற்திட்டங்களுக்கு உதவிகளை வழங்க தயாராயிருக்கிறது. தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் தற்போதைய அணுகுமுறை இது தான். இதற்கு ஒத்துழைக்க முன்வராவிட்டால் இந்தியாவிடம் வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கமுடியாது.
இந்தியா தனக்கு வசதியானது என்று கருதுகின்ற இந்த அணுகுமுறைக்கு இசைவாக தங்களது அரசியல் செயற்பாடுகளையும் அணுகுமுறைகளையும் மாற்றியமைப்பதே கூட்டமைப்பின் தலைவர்களின் முன்னால் உள்ள முக்கிய தேவையாகிறது.அதை எவ்வாறு அவர்கள் நிறைவேற்றப்போகிறார்கள் என்பது இன்னொரு முக்கியமான கேள்வி.
கூட்டமைப்பை பொறுத்தவரை, அவர்கள் தங்களின் பகுதிகளின் பொருளாதார அபிவிருத்தியில் அறவே கவனம் செலுத்தவில்லை என்று கூறிவிடவும் மடியாது.கூடடைமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வருடாந்தம் ஒதுக்கப்படுகின்ற நிதியில் பொருளாதரச் செயற்திட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.
ஆனால் அந்த நிதி போதுமானதல்ல என்பது ஒரு புறமிருக்க, அவர்களின் கவனத்தின் பிரதான அழுத்தம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மீதே இருந்து வருகிறது.கட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் வெறுமனே உணர்ச்சிவசமாகப் பேசி கடந்த காலத்திலேயே வாழ்கிறார்கள். மாறிவிட்ட புவிசார் சூழ்நிலையில் அதுவும் உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான காலகட்டத்தில் தமிழ் மக்களை எவ்வாறு வழிநடத்துவது என்று தெரியாமல், புதிய அணகுமுறைகளை வகுக்கவும் இயலாதவர்களாக இருக்கிறார்கள்.
கொழும்பு அரசாங்கங்களுடன் ஒத்துழைத்துச் செயற்படுகின்ற ஒரு அரசியல் கலாசாரத்துக்கு தமிழர்கள் பழக்கப்பட்டவர்கள் அல்ல. சுதந்திரத்துக்குப் பதவியில் இருந்த அரசாங்கங்கள் சகலதுமே தமிழர்களை பாரபட்சமாக நடத்தியதால் தமிழ்க் கட்சிகள் எதிர்ப்பு அரசியலையே முன்னெடுத்து வந்திருக்கிறார்கள்.அதனால், அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுகின்ற அரசியல்வாதிகளை ' துரோகிகள் ' என்று அழைப்பது தமிழர்களின் வழக்ககமாகிப் போய்விட்டது.
அத்தகைய அரசியல் கலாசாரத்தில் இருந்து மாறுவது என்பது தமிழர்களையும் அவர்களின் அரசியல் பிரதிநிதிககளையும் பொறுத்தவரைஷ்டமானதாகும்.என்றாலும் போரின் முடிவுக்கு பின்னர் மாறிவிட்ட சூழ்நில அவர்களின் அரசியல் கலாசாரத்தில் மாற்றமொன்றை வேணடிநிற்கிகிறது.
மைத்திரி - ரணில் தலைமையிலான அரசாங்கம் புதிய அரசியலமைப்பு வரைவு செயன்முறைகளை முன்னெடுத்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை அந்த செயன்முறையின் மூலமாக பெறுவதற்கான ஒரு முயற்சியாக அந்த அரசாங்கத்துடன் ஒத்தழைத்துச் செயற்பட்டது.அந்த அரசாங்கத்தில் கூட்டமைபபு சேரவில்லையே தவிர, மற்றும்படி முழுமையாக ஒத்துழைத்தது. புதிய அரசியலமைப்பு வரைவு செயற்பாடுகள் வெற்றிபெறவில்லை என்பதால் தமிழர்கள் மத்தியில் கூட்டமைப்பின் செல்வாக்கு கணிசமானளவுக்கு குறையத்தொடங்கியது. கொழும்புடன் ஒத்துழைத்துச் செயற்பட்டும் கூட எந்தப்பலனும் கிட்டவில்லை.
அத்தகைய ஒரு சூழ்நிலையில், தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்தடன் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஒத்துழைத்து செயற்படுமாறு இந்தியா கேட்கும்போது கூட்டமைப்புக்கு ஒரு சங்கடமாக இருக்கிறது.
ராஜபக்ச அரசாங்கம் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கின்ற அபிவிருத்தித் திட்டங்களை அந்த பகுதிகளின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை நடத்தாமலேயே முன்னெடுக்கின்றது.தங்களுடன் பேசி மத்திய அரசாங்கம் தமிழ்ப் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்களை வகுக்கவேண்டும் என்பதையே கூட்டமைப்பு உட்பட சகல தமிழ்க் கட்சிகளும் விரும்புகின்றன. அரசாங்கம் அதன் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயற்பாடுகளில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்வாங்கும் ஒரு அணுகுமுறையை கடைப்பிடிக்க முன்வந்தால் இந்தியாவின் வலியுறுத்தலின் பிரகாரம் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஒத்துழைத்துச் செயற்படுவது அவர்களுக்கு சுலபமாக இருக்கும்.இந்தியா அதன் நல்லெண்ணங்களை பயன்படுத்தி ராஜபக்ச அரசாங்கத்தை இது விடயத்தில் இணங்கவைக்கவேண்டும்.
அதேவேளை, தமிழ் அரசியல் சமுதாயமும் இதுவரையான அதன் அரசியல் அணுகுமுறைகளில் இருந்து படிப்பிைனைகளைப் பெற்று இன்றைய நிலைவரம் வேண்டிநிற்பதன் பிரகாரம் புதிய வழிமுறையை கடைப்பிடிக்க தன்னை இசைவாக்கிக்கொள்ளவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM