நாட்டின் ஒருமைப்பாட்டை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், தமிழர்களாகிய எமது தனித்துவமானது பாதுகாக்கப்படவேண்டும் என்பதையே நாங்கள் வலியுறுத்துகின்றோம் என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டெபன் டைனிற்கு தெளிவுபடுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகின்ற போது வடமாகாணத்தில் அபிவிருத்தி உத்வேகம் குறைந்தே காணப்படுகின்றது என்பதையும் அவரிடம் எடுத்துரைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள கனேடிய நாட்டின் வெளிவிகார அமைச்சர் ஸ்டீபன் டையோன் நேற்றைய தினம் வடக்கிற்கு விஜயம் செய்திருந்தார். இதன் போது வடமாகாண முதலமைச்சரை கைதடியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
இக் கலந்துரையாடல் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடல் தொடர்பாக முதலமைச்சர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கலந்துரையாடலின்போது நாட்டில் தற்போதைய அரசியல் நிலை எவ்வாறுள்ளது என்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் என்னிடம் வினவியிருந்தார். அரசியல் நிலைமை ஓரளவு ஆதரவளிக்கக் கூடியதாக இருந்தாலும் நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் வடமாகாணத்தின் அபிவிருத்தியை ஒப்பிடுகையில் உத்வேகம் குறைந்ததாகவே காணப்படுகின்றது.
இராணுவத்தினர் தற்போதும் அதிகளவான காணிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் அக்காணிகளுக்கான உரிமையாளர்கள் இடம்பெயர்ந்த நிலையில் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற முடியாமல் உள்ளனர். இதனால் அவர்கள் தற்போதும் தற்காலிக முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்த மக்கள் கடந்த 26 வருடங்களாக சொந்த இடங்களிற்கு செல்ல முடியாது நெருக்கடிகளுக்குள் வாழ்ந்து வருகின்றனர் என்பதை அவரிடம் எடுத்துக்கூறியிருந்தேன்.
இதன்போது கனேடிய வெளிவிவகார அமைச்சர்இ தமது நாடும் இலங்கையை போன்று பிரிவினைவாத பிரச்சினைக்குள் அகப்பட்டிருந்ததாகவும் அதில் இருந்து மீண்டு தற்போது கூடிய வலுவுடன் முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் இவ்வாறான நிலையை இலங்கை அடையுமா? எனவும் அதற்கான தடைகள் எவ்வாறுள்ளன? எனவும் அவர் என்னிடம் கேட்டிருந்தார்.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் அவ்வாறான நிலை தான் இங்கே இருந்தது. நாடுபூராகவும் தமிழ் மக்கள் தமது தொழில்களை மேற்கொண்டு சுதந்திரமாக சென்று வந்திருந்தார்கள். இருந்தபோதிலும் 1956ஆம் ஆண்டு ஆட்சி மொழியாக சிங்களம் மட்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டதையடுத்தே தமிழ் மக்களுக்கு பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்பட்டதை எடுத்துகூறியிருந்தேன்.
மேலும் நாட்டின் ஒருமைப்பாட்டை நாங்கள் எதிர்க்கவில்லை. இத்தகைய விடயத்தை எங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தோம். அந்தவகையில் நாங்கள் பிரிவினைவாதத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் எங்களது தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையே நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
இங்கே தனித்துவம் எனும் போது தமிழ் மக்கள் மொழி, மதம், கலாச்சாரம், பாரம்பரியம், வாழ்க்கை முறைகள் என்பன உள்ளடங்குகின்றன. இவை நாட்டிலுள்ள ஏனைய பிரதேசங்களை விடவும் வித்தியாசமாக உள்ளமையினால் அவை பேணப்பட வேண்டியதன் அவசியத்தை வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துகூறியிருந்ததுடன் அவற்றை எம் மக்கள் முற்றுமுழுதாக அனுபவிக்க முடியாதுள்ளமையையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.
இதனை உள்வாங்கிக்கொண்ட அவர் என்னிடம் நீங்கள் தமிழர் எனக் கூறுவதிலா? இலங்கையர் எனக் கூறுவதிலா? பெருமைப்படுகின்றீர்கள் என என்னிடம் கேட்டிருந்தார். அதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. ஆனால் எமது தனித்துவமானது பாதுகாக்கப்படவேண்டும் என அவரிடம் குறிப்பிட்டேன்.
தற்போது வடமாகணத்திற்கு வெளியில் இருந்து சிறிது சிறிதாக இரகசிய உத்திகளின் மூலம் வெளிமாவட்டத்தினரை இங்கு கொண்டு வந்து குடியேற்றுவதற்கு முனைப்புகாட்டிவருகின்றனர். இவ்வாறான நடவடிக்கையானது எமது தனித்துவத்தை அழிப்பதற்கு ஒப்பான செயற்பாடாகவே அமையும் என்பதை குறிப்பிட்டிருந்தேன்.
மேலும் இச் சந்திப்பில் பல விடயங்கள் தொடர்பாகவும் பேசியிருந்தோம். அத்துடன் அவர் குறிப்பிட்டிருந்தார், கனடாவானது இலங்கை ஐக்கியத்துடனும் ஒருமைப்பாட்டுடனும் முன்னேற்றம் காண வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது. இந்நிலையில் இலங்கையின் இருமொழிப் புலமைக்கு உதவிகள் வழங்கப்படும். அத்துடன் நல்லிணக்க நல்லாட்சி செயற்பாடுகளுக்கு எமது நாடு என்றும் உதவும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM