அரசின் வடக்கிற்கான நிதி ஒதுக்கீடு ''யானைப்பசிக்கு சோளப்பொரி'' என்கிறார் செல்வராசா கஜேந்திரன்  

Published By: J.G.Stephan

25 Nov, 2020 | 01:38 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)


மாகாண சபையினூடாக முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகளை கச்சேரிகள் மூலம் முகவர்களினூடாக முன்னெடுக்க இணைக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறான திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் அரசாங்கம்  மாகாண சபைகளை பலவீனப்படுத்துகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்  சபையில் குற்றம் சாட்டினார்.



அவர் மேலும் கூறுகையில்,

யுத்தத்தால் அழிந்துபோன பகுதிகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு  தேவையான  எந்தவித நிதி ஒதுக்கீடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் பெருமளவான அபிவிருத்திப்பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. வடக்கில் மட்டும் 60 ஆயிரம்  விதவைக் குடும்பங்கள் உள்ளன.

இக் குடும்பங்கள், மாணவர்களின் வாழ்வாதாரங்களை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களும்  கிடையாது. வடக்கில் ''சி அன்ட் டி''  தர வீதிகள் 840 கிலோ மீற்றர் நீளமானவை திருத்தப்பட வேண்டியுள்ளது.

அதேபோன்று 8,567 கிலோ மீற்றர் நீளமான கிராமிய வீதிகள் புனரமைக்கப்பட்ட வேண்டியுள்ளது. அத்துடன் பல கைத்தொழிற்சாலைகளை புனரமைக்க வேண்டியுள்ளது. ஆனால் எதற்கும் நிதி ஒதுக்கப்படவில்லை. ''யானைப்பசிக்கு சோளப்பொரி'' போல் சிறிதளவு நிதியை ஒதுக்குவதனால் எதனையும் கட்டியெழுப்ப முடியாது.

மாகாண சபைகளை உருவாக்கிவிட்டு அதற்கான அமைச்சுக்களை அமைத்துவிட்டு மாகாண சபை  ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகளை கச்சேரிகள் மூலம் முகவர்களை வைத்துக்கொண்டு செய்யும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

 பாடசாலைகள், சுகாதாரத்துறைகள் மாகாண சபைக்களுக்குரியவை. ஆனால் அரசு இந்த துறைககளுக்கு கூட கச்சேரிகள் மூலமாகவே  நிதி ஒதுக்குகின்றது. இதனால் தேவையற்ற குழப்ப நிலைகள் ஏற்படுகின்றன. இவ்வாறான வேலைத்திட்டம் மூலம் அரசாங்கம் மாகாண சபைகளை திட்டமிட்ட முறையில் வினைத்திறனற்றவையாக்குகின்றது. எனவே இந்த வேலைத்திட்டத்தை அரசாங்கம்  உடனடியாக கைவிட்டு மாகாண சபைகள் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்.

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையை மத்திய அரசு தன்வசப்படுத்தப் பார்க்கின்றது. இது மாகாண சபைக்குரியது. எனவே இவ்வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட்டு அதனை உடனடியாக அபிவிருத்தி செய்ய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்