Published by R. Kalaichelvan on 2020-11-21 17:10:07
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு அதனை வெற்றிகொண்ட வரலாறு எமக்கு இருக்கின்றது. அதனால் வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனைகளை எமக்கு நடைமுறைப்படுத்தி நாட்டை முன்னுக்குகொண்டுசெல்லலாம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஒருவருடத்துக்கு பின்னரே வரவு செலவு திட்டத்தின் பிரதிபலன்களை கண்டுகொள்ள முடியும். எதிர்க்கட்சியினர் வரவு செலவு திட்ட யோசனைகளை இலக்கங்களாலும் கணக்கறிக்கைகளினாலும் விமர்சித்துவருகின்றனர்.
ஆனால் இவர்களின் வாதம் ஒருவருடத்துக்கு பின்னரே மேற்கொள்ளவேண்டும். ஏனெனில் ஒருவருடத்துக்கு பின்னரேஇந்த வரவு செலவு திட்ட யோசனைகள் வெற்றியடைந்துள்ளதா அல்லது தோல்வியுற்றுள்ளதா என தெரிந்துகொள்ள முடியும்.
மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் 2005இல் ஆட்சியை பெற்றுக்கொள்ளும்போது உலக பொருளாதார நெருக்கடி, சுனாமி பேரழிவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு என பிரதான மூன்று நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்தார். அன்று எமது நாட்டின் மொத்த உள்நாட்டு பெறுமதி 24.4 டொலர் மில்லியனாக இருந்தது. 98.2 கடன் சுமையை 9வருடத்தில் 72.3க்கு குறைக்க முடியுமாகியது. நாட்டின் பெறுமதியை 79.4டொலர் மில்லியன்வரை அதிகரிக்க முடியுமாகியது.
இந்த விடயங்கள் அன்று கனவாகவே இருந்தது. இன்றைக்கும் வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனைனளை எதிர்க்கட்சியில் சிலர் கனவு என்றே தெரிவிக்கின்றனர். ஆனால் கனவுகளை நனவாக்கும் குழுவே இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. 2005 இல் தனிநபர் வருமானம் 1242ஆகவே இருந்தது. 9வருடத்தில் அது 3819வரை அதிகரிக்க முடியுமாகியது. 2005இல் கடன் சுமை 2.2ட்ரில்லியன். அது 7.4வரை அதிகரித்தது.
கடந்த அரசாங்கம் கடன் அடைப்பதற்கு என 5ட்ரில்லியன் கடன் பெற்றுக்கொண்டதாக தெரிவித்தனர். அப்படியானால் கடன் குறைவடைந்திருக்கவேண்டும். அதனால் கடன் அடைப்பதற்கு கடன் எடுப்பது என்பது பொய்யான தர்க்கம். என்றாலும் நாட்டின் எதிர்காலம் மிகவும் சவால்மிக்கது என்பனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். பல பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டிவரும். அந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய சக்தி எமக்கு இருக்கின்றது.
அதனால் கடந்த காலங்களில் நாங்கள் சவால்களை வெற்றிகொண்டதுபோல் எதிர்காலத்தில் வரும் சவால்களை வெற்றிகொள்ளக்கூடிய சக்தி எமக்கு இருக்கின்றது என்பதை உறுதியாக தெரிவிக்கின்றோம் என்றார்.