கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் பெரிதும் குழம்பிப்போய் உள்ளனர். இந்த சூழலில் மக்களை மேலும் அச்சமடையச் செய்யும் வகையில் போலியான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதன் மூலம் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துவது சமூகவிரோத செயல்களாகவே பார்க்கப்படும்.
அந்த வகையில் இலங்கையில் கொரோனா காரணமாக பொது மக்கள் வீதிகளில் செத்து மடிவதாக புகைப்படங்கள் சிலவற்றை சமூக வலைதளங்களில் பதிவேற்றிப் பரபரப்பை ஏற்படுத்திய நபர் ஒருவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
கண்டி கடுகண்ணாவை கடவத்த பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதே போலியான பதிவை மீண்டும் பதிவிட்டு சமூகத்தில் பீதியை ஏற்படுத்திய மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டவுடன், அவரது பதிவை தொடர்ந்த மேலும் நால்வரை கைது செய்ய பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொறுப்பற்ற வகையில் செய்திகள் தகவல்களை வெளியிடுவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவது போன்ற செயற்பாடுகள் எந்தளவு தூரம் ஆபத்தானவை என்று தெரிந்திருந்தும் அவ்வாறான செய்திகளை வெளியிடுவது பாரதூரமான குற்றமாகும்.
இது தொடர்பான அறிவித்தலை அரசாங்கம் தேசிய ஊடகங்கள் வாயிலாக வழங்கியுள்ள போதிலும் ஒரு சிலர் அதன் பாரதூரத்தை உணர்வதாக தெரியவில்லை.
சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் உடனடியாக மக்களை சென்றடைவதன் காரணமாக அதன் தாக்கம் அதிகம் என்பதால் அது தொடர்பில் அரசாங்கம் எச்சரிக்கையாக உள்ளது.
இத்தகைய செயல்கள் காரணமாகவே கடந்த காலங்களில் அவ்வப்போது சமூக ஊடகங்களை முடக்க வேண்டிய நிலைமை கடந்த அரசுக்கு ஏற்பட்டது.
குறிப்பாக பேஸ்புக், யுடியூப் போன்ற சமூக ஊடகங்களின் செயற்பாடுகள் நல்ல நோக்கங்களின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, பிறரின் அந்தரங்கங்களை துருவி ஆராய்ந்து வெளிப்படுத்துவதாகவும் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதாகவும் அமையக்கூடாது.
ஒரு சிலர் அதனை உணராது தம் மனம் போன போக்கில் சமூகத்திற்கு பயன் தராத தவறான பதிவுகளை பதிவேற்றம் செய்து தாமும் குழம்பி மக்களையும் குழப்புகின்றனர்.
இதனால் மக்கள் மத்தியில் அநாவசியமான பதற்றங்கள் ஏற்படுகின்றன.
அனைத்துக்கும் மேலாக போலியான செய்திகளை பரப்பினால் எத்தகைய தண்டனைக்கு ஆளாக வேண்டி ஏற்படும் என்பதையும் மனதில் கொள்வது அவசியம்.
சமூக ஊடகங்கள் தொடக்கம் அனைத்து ஊடகங்களையும் அரசாங்கம் உன்னிப்பாக கண்காணித்து வருவது, அவை எந்தச் சந்தர்ப்பத்திலும் மக்களை தவறாக வழிநடத்திவிடக் கூடாது என்பதற்கே ஆகும்.
எனவே அதனை உணர்ந்து அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள முன்வர வேண்டும். அன்றேல் சட்டத்தின் கடுமையான பிடிக்குள் சிக்க வேண்டி வரும் என்பதையும் மறந்து போகக்கூடாது.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM