கொடிய அரக்கனை ஒழித்துக் கட்டுவோம் 

Published By: Gayathri

14 Nov, 2020 | 01:39 PM
image

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் இன்று தீபாவளி பண்டிகையை மிகவும் எளிமையாகவும் அமைதியாகவும் தத்தமது வீடுகளில் கொண்டாடுகின்றனர். 

தீபாவளி பண்டிகையானது வெற்றி விழாவாகவே கொண்டாடப்படுகின்றது. அதாவது தேவர்களுக்கு சதா கொடுமை செய்து வந்த நரகாசுரனை வதம் செய்த நாள் தீபாவளி என்பது ஐதீகம்.

அந்தவகையில் உலகையே அச்சுறுத்தி இலட்சக்கணக்கான மரணங்களுக்கும் துயரங்களுக்கும் காரணமான கொரோனா எனப்படும் இந்தக் கொடிய வைரஸை உலகில் இருந்தும் ஒழித்துக்கட்ட நாம் அனைவருமே திட சங்கற்பம் பூண வேண்டும்.  

அதற்கு ஒரே வழி நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதும் பிறருக்கு அது பரவாது கவனமாக இருப்பதுமேயாகும்.

பொதுவாக தீபாவளி  பண்டிகை என்றால் நாம் வீடுகளில் இனிப்புப் பண்டங்கள் செய்தும், புத்தாடை அணிந்தும் கோயிலுக்கு சென்றும், உற்றார் உறவினர்களை வரவேற்றும் உற்சாகமாகக் கொண்டாடுவது உண்டு.

ஆனால் முன்னொருபோதும் இல்லாத வகையில் இந்த தீபாவளியை தமிழ் மக்கள் கொண்டாட முடியாத நிலையில் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் ஊரடங்குச் சட்டம் மற்றும் ஊர் முடக்கம் என மக்கள் வீட்டை விட்டு வெளியேறவோ சுதந்திரமாகப் பயணிக்கவோ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அனைத்துக்கும் மேலாக மக்கள் பொருட்களை கொள்வனவு செய்ய இயலாத நிலையில் பொருளாதார ரீதியாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொழில் வாய்ப்பற்ற நிலையிலும் வருமானம் இல்லாத சூழலிலும் அடுத்த வேளைக்கு என்ன செய்வது? என்று தெரியாது பலரும் கண்ணீர் வடித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

தமது சேமிப்பில் இருந்த பணம், கையில் இருந்த பணம் என அனைத்துமே கரைந்து விட்ட நிலையில் உலகெங்கும் பல கோடிக்கணக்கான குடும்பங்கள் அண்ணாந்து வானத்தை பார்த்தவாறே வாழும் சூழல் இன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கண்ணுக்குத் தெரியாத இந்தக் கொடிய கிருமியை ஒழித்துக் கட்டுவது எவ்வாறு என உலக நாடுகள் பலவும் திண்டாடி வருகின்றன.

இதேவேளை அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா என பலதரப்பட்ட நாடுகளும் நோய்க்கு எதிரான மருந்துகளை கண்டுபிடித்து விட்டதாகவும் விரைவில் அது மக்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறி வருகின்றன.

எனினும், குறித்த மருந்து சோதிக்கப்பட்டு உலகநாடுகளுக்கு அதனை வழங்கும் முன்னர் உயிர் அழிவுகள் மேலும் பல்கிப் பெருகி விடும் என்ற அச்சமே இன்று காணப்படுகின்றது.  

இலங்கையைப் பொறுத்தமட்டில் இதுவரை 53 மரணங்கள் பதிவாகியுள்ளன. 

இந்த நிலைமை மேலும் அதிகரிக்கா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் முற்றுமுழுதாக ஒழிக்கப்படும் நாளே உண்மையான வெற்றித் திருநாளாக அனைவருக்கும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.  

அதற்கேற்ப நாம் பாதுகாப்பு நடைமுறைகளை பேணி சீரான முறையில் பயணிப்போம்.

சுகாதார நெறிமுறைகளை பேணுமாறு ஏனையோருக்கும் அறிவுரை வழங்குவோம் வீட்டிலிருந்தும் வேலைத்தளங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லும் நாம் எங்கிருந்தும் இந்த கொடிய அரக்கனை வீட்டுக்குள் கொண்டுவராதிருக்க மிகவும் எச்சரிக்கையாக இருப்போம்.

அடுத்த தீபாவளியையேனும் நாம் உற்றார், உறவினர்களுடன் அன்பாகவும் இன்பமாகவும் வெற்றித் திருநாளாக கொண்டாட இன்றே இந்த கொடிய அரக்கனை ஒழித்துக்கட்ட திடசங்கற்பம் பூணுவோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right