(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
அதிகாரங்கள் ஓர் இடத்தில் குவிக்கப்படுவதால் தமிழர்களின் இருப்புக்கும் இறைமைக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இலங்கை வரலாற்றில் இன்று இருண்டநாள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறதரன் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
20ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவருவதன் மூலம் இந்த நாடு ஓர் இருண்ட யுகத்தை நோக்கி நகர்கிறது. முசோலினி, ஹிட்லர் அல்லது ஒரு இடியமீன் யுகத்தை நோக்கியே நாடு நகரப்போகிறது. 1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன புதிய அரசிலமைப்பொன்றை கொண்டுவந்திருந்த சந்தர்ப்பதில் அதன் ஆபத்தை கொல்வின் ஆர்.டி.சில்வா விளக்கியிருந்தார்.
எந்தவொரு நபருடைய கருத்தையுத் செவி சாய்க்காது ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள சூழலில் மீண்டும் 42 வருடங்களின் பின்னர் ஒரு தனிநபரிடம் அதிகாரத்தை குவிக்கும் முகமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நாடு மிகப்பெரிய ஆபத்தை நோக்கிதான் நகரும்.
1948 ஆம் ஆண்டு இலங்கையின் தலா தேசிய வருமானமும் ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளின் தலா தேசிய வருமானமும் சமமாக காணப்பட்ட நிலையில் இன்று அந்த நாடுகள் அடைந்துள்ள நிலையை பார்க்க வேண்டும். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் இந்த நாட்டை அதலபாதாளத்துக்கு தள்ளியள்ளது. ஜனாதிபதியிடம் இன்று குவிக்கப்படும் அதிகாரங்கள் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்கள்மீதான அதிகார துஷ்பிரயோகத்திற்கு அல்லது அவர்களுடைய வாழ்வுக்கு பாதகமாக இருக்கும்.
42 வருடங்கள் இராணுவச் சிந்தையில் உள்ள ஒருவர்தான் ஜனாதிபதியாகியுள்ளார். அவர் பதவியேற்ற நாள்முதல் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை தொடர்பில் எந்தவொரு வார்த்தையும் பேசவில்லை. அநுராதபுரத்தில் நடைபெற்ற அவரது பதவியேற்பு உரையில் தமிழர்கள் இந்த நாட்டில் வாழ்கிறார்கள், அவர்களுக்கு பிரச்சினை உள்ளதென்பதைக் கூட அவர் கூறவில்லை. இந்தியாவுக்கு சென்ற போது அங்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலும் கூட இனப்பிரச்சினை பற்றி அவர் பேசவில்லை. அதேபோன்று பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய கொள்கை விளக்க உரையிலும் இனப்பிரச்சினை பற்றி ஒருவார்த்தை பேசவில்லை.
இவ்வாறான ஒருவரிடம் தான் அதிகாரங்கள் குவிக்கப்படுகிறது. ஏனைய இனங்களை மதித்து பல்லினங்கள் வாழும் இந்த நாட்டில் ஜனநாயகத்தை மதித்து அவர் ஆட்சி செய்வார் என்ற உத்தரவாதம் இந்தச் சட்டத்தினால் கொடுக்கப்படுமா? இதனை சிந்திக்க வேண்டும். சிங்கள மக்களை நினைத்து கவலையடைகிறேன். இந்த நாள் ஓர் ஆபத்தான இருண்ட நாள். இன்னும் 20 வருடங்களுக் பின்னர் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக இது இருக்கும். நாம் பாதிக்கப்பட்ட இனம். 70 வருடங்களாக இந்த மண்ணில் இருப்புக்காகவும் இழந்துபோன இறைமையை மீட்கவும் போராடுகிறோம்.
எமக்கு இந்த நாட்டில் வாழும் உரிமை இருப்பது என்றால் இவ்வாறு அதிகாரம் குவிக்கப்படுவது ஆபத்தானது. அதன்hல் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். சிங்கள மக்கள் வழங்கியுள்ள அதிகாரத்தை நேர் வழியில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் சிறந்த எதிர்காலம் அமையும். வரலாற்றின் கறுப்புநாளை வாக்களிக்கும் உறுப்பினர்கள் பதிவுசெய்து வைத்துக்கொள்ளுங்கள் நாளை இந்த அதிகாரங்கள் உங்களுக்கு எதிராகவே திரும்பும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM