20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிட்டினால் மாத்திரமே இதனை நிறைவேற்றிக் கொள்ளமுடியும்.
அரசாங்கம் ஏதோ ஒரு வகையில் அதனை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவற்றுக்கு மத்தியில் தமிழ் மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் சிந்திக்கக் கூடியவை.
தமிழ் மக்களின் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டம் இவற்றின் பின்னால் இருக்கின்றது.
அதனால் மனித உரிமைகள், ஜனநாயகம், நல்லாட்சி, சமாதானம் ஆகியவற்றை நேசிக்கும் அனைவரும் இந்த இருபதை நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் நேற்று நீண்ட நேரம் உரையாற்றிய விக்னேஸ்வரன் நாட்டு நலன் குறித்து சிந்திக்காது, தங்கள் நலன்களை முதன்மைப்படுத்தி சட்டங்களை இயற்றுவது இந்த நாட்டின் வரலாறு என்றும் கூறியுள்ளார்.
ஜனநாயகத்துக்கு சாவு மணி அடித்து நல்லாட்சிக்குரிய பண்புகளை குழிதோண்டிப் புதைக்கும் விசித்திரம் இந்த நாட்டிலேயே நடக்கிறது என்று கூறியுள்ள சி.வி.விக்னேஸ்வரன், ஜனநாயக ரீதியான ஒரு சிறு இடைவெளியையும் அடைத்து இரும்புக்கரம் கொண்டு எமது போராட்டங்களை நசுக்குவதற்கு ஒரு நிகழ்ச்சி நிரலும் இதன் பின்னால் இருப்பதாக கூறுகிறார் .
ஜனாதிபதிக்கு கட்டுப்பாடற்ற அரசியல் அதிகாரங்கள் எதற்கு? ஒரு கள்வனை, குண்டுதாரியை கண்டுபிடிக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அதிகாரம் அவசியமா? என்று கேள்வி எழுப்பியுள்ள விக்னேஸ்வரன் இது முட்டாள் தனமாகவே இருக்கின்றது என்றும் கூறியுள்ளார்.
இவை அனைத்துக்கும் மேலாக யாரெல்லாம் இந்த 20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு பாடுபடுகிறார்கள்; யாரெல்லாம் இதற்கு ஆதரிக்கின்றார்கள்; அவர்கள் எதிர்காலத்தில் இதே சட்டத்தை நீக்க வேண்டும் என வீதியில் இறங்கி போராடும் நாள் வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று நீங்கள் கொண்டுவரும் இந்த திருத்தச்சட்டம் உங்கள் மீதும் உங்கள் பிள்ளைகள் மீதும் ஏன் எதிர்கால உங்கள் சந்ததியினர் மீதும் ஒரு பூமராங் போல மாறும். உங்கள் கண்களை உங்கள் விரல்களால் குத்த வேண்டாம் என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் நிறைவேற்று அதிகார முறைமையை முற்றாக ஒழிப்பதாக தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி ஜனாதிபதியாக வந்தவர்கள் எவருமே அதனை இல்லாது ஒழிக்கவில்லை.
இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதில் சில மாற்றங்களை கொண்டு வந்தார்.
தற்போது மீண்டும் முன்னைய சகல அதிகாரங்களையும் கொண்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை வேண்டுமென்றே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வலியுறுத்தியுள்ளது.
இதன் சாதக, பாதக தன்மைகளை பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி மக்களும் சரி உணர்ந்தே வைத்துள்ளனர்.
ஆளும் தரப்பில் பெரும்பாலான உறுப்பினர்கள் மத்தியில் குறித்த 20 ஆவது திருத்தம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் இருந்த போதிலும் அவர்கள் தங்கள் பிரதிபலிப்பை வாக்கெடுப்பின்போது பாதகமாக காட்டுவார்களா? என்பது தெரியாது.
அரசு எந்த வகையிலும் இந்தப் பிரேரணையை வெற்றி கொள்ளவே முயலும் என்பதில் சந்தேகமில்லை.
20 ஆவது திருத்தப் பிரேரணையை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம். அதாவது 151 வாக்குகள் சாதகமாக அமைய வேண்டும்.
எனினும், 20 ஆம் திருத்தச் சட்டத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதில் அரசாங்கம் நெருக்கடியை சந்தித்து வருவதாக கூறப்படுகின்றது.
இரட்டை பிரஜாவுரிமை விடயத்தில் ஆளும் தரப்பில் 22 உறுப்பினர்கள் எதிர்ப்பதுடன் முழு திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்து மூவர்விலகும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சியில் சிலரது ஆதரவைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது.
இன்றைய பலப்பரீட்சையில் அரசு ஜெயிக்குமா? இல்லையா? என்பதை அடுத்த சில மணி நேரங்கள் கூறிவிடும்.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM