- இலங்கையில் ஏற்பட்ட 33 ஆவது கொத்தனி பரவல்
- தொற்று பரவல் மூலம் கண்டுபிடிக்கப்படவில்லை
- முதலாவது தொற்று ஏற்பட்டவர் யார் என்பதில் சிக்கல்
- மக்கள் அறிவுறுத்தல்களை பேணாவிடின் நிலைமை மோசமடையும்
- உலகநிலை மாறும்வரை இலங்கை கவனமாக இருக்கவேண்டும்
- கொரோனாவை மறந்துவிட்ட மக்களின் செயற்பாடுகள்
- நாடு அபாயகரமான கட்டத்தை தாண்டவில்லை
- மறக்கப்பட்ட கை கழுவுதல் , சமூக இடைவெளி
-ரொபட் அன்டனி
குறுகியகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. சுமார் இரண்டு மாத காலத்திற்கு பின்னர் சமூக மட்டத்தில் கொத்தணி பரவல் கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடை பகுதியில் பதிவாகியிருக்கிறது.
தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 39 வயதான பெண் ஒருவரே முதலாவதாக அடையாளம் காணப்பட்டார். இந்நிலையில் தற்போது மொத்தமாக 69 பேர் இவ்வாறு தொற்று வைரஸ் ஏற்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திவுலப்பட்டிய ஆடைத் தொழிற்சாலையிலேயே குறித்த பெண் கொரோனா வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதுடன் கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கோட திவுலப்பிட்டிய மற்றும் வெயங்கோட பொலீஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் குறித்த 69 தொற்றாளர்களுடைய முதல் தொடர்பாளர்கள் குடும்ப உறவினர்கள் மற்றும் குறித்த பெண்ணுடன் பணிபுரிந்த அனைவரும் பல்வேறு வழிகளில் தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக குறித்த இருவரினதும் நெருங்கிய உறவினர்கள் தொடர்பாளர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கம்பஹா மாவட்டத்தின் இந்த மூன்று பொலீஸ் பிரிவுகளுக்கும் கடுமையான பாதுகாப்பும் இடப்பட்டுள்ளதுடன் மக்களின் நடமாட்டம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
அதுமட்டுமன்றி கம்பஹா மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த புதிய கொரோனா தொற்று நிலை காரணமாக நாடு முழுவதிலும் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளதுடன் கம்பஹா மாவட்டத்தில் பல்கலைக்கழக மற்றும் ஏனைய செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மீண்டும் பல்வேறு எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதை காணமுடிகிறது.
குறிப்பாக சகல மக்களும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்புமுறை தொடர்பான சுகாதார அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்ற அறிவிப்பு அரசாங்கத்தினால் கடுமையாக விடுக்கப்பட்டிருக்கிறது. கம்பஹா மாவட்டத்தின் இந்த புதிய நிலைமை ஊடாக மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சுறுத்தல் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் சகலரும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்று அரசாங்கத்தினால் வலியுறுத்தப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் நாட்டு மக்கள் மத்தியில் ஒரு விதமான அச்ச நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் மீண்டும் தமது அன்றாட செயற்பாடுகளின் போது வைரஸ் பரவலை தடுப்பதற்கான சுகாதார அறிவுறுத்தல்களை படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் ஒரு குறுகிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஒரு அபாய வலயத்துக்குள் அல்லது வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்குள் நாடு என்று இருப்பதை காண முடிகிறது.
இங்கு அனைவரும் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமானது இந்த வைரஸ் தொற்றாளர்கள் 69 பேருக்கு எவ்வாறு தொற்று பரவியது என்பதற்கான மூலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவிலலை. இவ்வாறு தொற்று ஏற்பட்டமைக்கான மூலம் கண்டுபிடிக்கப் படாமலிருப்பது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமையாகும்.
இது தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். காரணம் மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் ஏற்பட்ட 32 கொத்தனி பரவல்களின்போது பரவல் ஏற்பட்ட மூலம் கண்டறியப்பட்டதால் அவை தடுக்கப்பட்டன. எனினும் 33 ஆவது கொத்தனி பரவலாக இருக்கும் மினுவங்கொட தொற்று பரவலின் தொற்று மூலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனை சமூக பரவல் என்று அரசாங்கமோ அல்லது சுகாதார துறையோ இப்போது வரை அறிவிக்கவில்லை. எனினும் நாம் இந்த விடயத்தை பார்க்கும்போது ஒரு அபாயகரமான கட்டத்தை தாண்டாமல் இருக்கின்றோம் என்பது தெளிவாகின்றது. அதனால் தொற்று ஏற்பட்டமைக்கான மூலம் கண்டுபிடிக்கப்படும்வரை நாட்டு மக்கள் அனைவரும் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில் சகாதார துறையினரும் பாதுகாப்பு துறையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் முதலில் மினுவங்கொடவில் 39 வயதான பெண்ணுக்கு தொற்று ஏற்பட்டதாகவே அடையாளம் காணப்பட்டது. பின்னர் அவரது மகளுக்கும் அதனையடுத்து நேற்று மேலும் 67 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் முதலில் யாருக்கு தொற்று ஏற்பட்டிருக்கும் என்பது இதுவரை உறுதி செய்யப்படாமல் இருக்கின்றது. குறித்த பெண் முதலாவது அடையாளம் காணப்பட்டார் என்பதற்காக அவருக்கு முதலில் தொற்று பரவியிருக்கும் என்று கருத முடியாது என்பதே சுகாதார நிபுணர்களின் கருத்தாகவுள்ளது. தற்போது ஆடை தொழிற்சாலையில் இருந்த அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அப்படியானால் அங்கு என்ன நடந்திருக்கும் என்பது உடன் ஆராயப்படவேண்டும். உடனடியாக தொற்றின் மூலம் கண்டுபிடிக்கப்படவேண்டும். அதுவரை நிலைமை மிகவும் அபாயகரமாக இருக்கும்.
மே மாதம் நடுப்பகுதியில் நாடு ஊரடங்கு சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப ஆரம்பித்தது. ஆனால் சுகாதாரத்துறையினர் தொடர்ச்சியாக மக்களுக்கு விழிப்புணர்வையும் அறிவுறுத்தல்களையும் விடுத்து வந்தனர்.
அதாவது மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் மறந்தது போன்று செயல்படக்கூடாது என்றும் தொடர்ச்சியாக சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வந்தனர். எனினும் ஜூன் ஜூலை மாதங்களுக்குப் பின்னர் நாட்டு மக்கள் முற்றுமுழுதாகவே இவ்வாறான ஒரு வைரஸ் அச்சுறுத்தல் இந்த நாட்டில் இருந்ததையே மறைந்து விட்டதைப் போன்று செயற்பட ஆரம்பித்தனர்.
போக்குவரத்துக்களின்போதும் அலுவலகங்களிலும் பொதுஇடங்களிலும் வர்த்தக மற்றும் சந்தை நிலையங்களிலும் அரசு அலுவலகங்களிலும் என சகல பகுதிகளிலும் மக்கள் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி செயல்படடதை காண முடிந்தது.
இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள கடந்த 2 மாத காலத்தில் அடையாளம் காணப்படாவிடினும்கூட வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை கண்டுபிடிக்கப்படுகின்றமையினால் நாட்டு மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதே சுகாதாரத்துறையின் எச்சரிக்கையாக இருந்து வருகிறது.
எனினும் அந்த நிலைமையை சகலரும் மறந்து செய்யப்பட்டதாகவே கடந்த காலங்களில் உணர முடிந்தது. அதாவது இலங்கையில் வைரஸ் பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டாலும்கூட அயல் நாடான இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் மிகவும் ஒரு பயங்கரமான நிலைமையே கொரோனா வைரஸ் தொற்று பரவலில் காணப்படுகிறது. எனவே இந்த விடயத்தை கருத்தில் கொண்டாவது மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் விழிப்புடனும் சமூக பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் மக்கள் தமது பொறுப்பை உணர்ந்து கடந்த காலங்களில் செய்யப்பட்டதாக தெரியவில்லை. முக்கியமாக முக கவசத்தை அணிவதில் கூட எவ்விதமான ஒரு விஞ்ஞான ரீதியான அறிவுறுத்தலையோ அல்லது தெளிவையோ மக்கள் பெற்றிருக்கவில்லை, அணிந்திருக்கின்ற முக கவசத்தை எக்காரணம் கொண்டும் கைகளால் கூடாது என்பது மிக முக்கியமான சுகாதார அறிவுறுத்தலாகும். பெரும்பாலான மக்கள் முகக்கவசத்தை கைகளால் தொட்டு பின்னர் அதனை அகற்றிவிட்டு அந்த கையை கொண்டு மூக்கை வாயை தொடுகின்றனர்.
இவ்வாறு முகக் கவசம் அணிவது மிகவும் அபாயகரமான நிலைமையைத் தோற்றுவிக்கும். அதுமட்டுமன்றி இருவர் உரையாடும் போது ஒரு மீட்டர் இடைவெளியை பேண வேண்டும் என்ற சுகாதார அறிவுறுத்தல் எந்த பகுதியிலும் பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை. மேலும் கை கழுவுதல் என்ற விடயம் முழுமையாக மறக்கப்பட்டு விட்டதாகவே தெரிகிறது.
கடந்த பெப்ரவரி மாதம் முதலாவது கொரோனா தொற்றளரராக சீன பெண் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் நாடு திரும்பினார். எனினும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி அளவில் முதலாவது இலங்கையர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தார். அதன் பின்னரே இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான அச்சுறுத்தல் நிலை அதிகரிக்க ஆரம்பித்தது.
அந்த வகையில் சுகாதாரத் துறையினரும் பாதுகாப்பு துறையினரும் இணைந்து வைரஸ் தடுப்பு தொடர்பான ஒரு செயலணியை நியமித்து பரந்துபட்ட மட்டத்தில் ஒரு பொறிமுறை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் 32 கொத்தனி பரவல் சம்பவங்கள் இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் பதிவாகின. எனினும் அனைத்து கொத்தனி பரவல்களும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதுடன் அதிலிருந்து மேலதிக பரவல் நிலை இடம்பெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அரசாங்கம் ஒருபுறம் இவ்வாறு ஒரு பொறிமுறையை முன்னெடுத்தபட்சத்தில் மக்கள் மிகவும் கட்டுப்பாடாக சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொண்டனர். முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வதற்கும் உணவு பழக்க வழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும் மக்கள் தம்மை இசைவாக்கமடைய செய்து இருந்தனர். மேலும் இரண்டு மாதகாலம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன் மிகவும் ஒரு கட்டுப்பாடான நிலைமை நாட்டில் காணப்பட்டது. மக்களின் ஒத்துழைப்பே குறுகிய மீட்சிக்கு காரணமாக அமைந்தது.
இவ்வாறு வெற்றிகரமாக இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல்நிலைமை மேற்கொள்ளப்பட்டதுடன் மே மாதம் நடுப்பகுதியில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு நாடு இயல்பு நிலைமைக்கு திரும்பியது. அதன்பின்னரும் கந்தக்காடு கொத்தனி பரவல் பதிவாகியது. எனினும் அதன் பரவல் நிலையும் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையிலேயே தற்போது இந்த புதிய ஒரு பரவல் நிலை கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியிருக்கின்றது. மிக முக்கியமாக கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான எச்சரிக்கை அல்லது விழிப்புணர்வு அல்லது அறிவுறுத்தல்களை பின்பற்றும் நிலைமை வீழ்ச்சி அடைந்ததைக் காண முடிந்தது. ரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சுறுத்தல் என்பதை மக்கள் முற்றுமுழுதாக மறந்துவிட்டு தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
இந்த அலட்சியம் காரணமாக தற்போது அபாயகரமான நிலைமையை நாடு எதிர்கொண்டிருக்கிறது. எனவே தற்போதாவது மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளில் சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றவும் சுகாதார அறிவுறுத்தல்கள் ஆலோசனைகளை தொடர்ச்சியாக பின்பற்றவும் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
முக்கியமாக இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாம் நாட்டின் உற்பத்தி செயற்பாடுகளை அல்லது அன்றாட வர்த்தக செயற்பாடுகளை அன்றாட அடிப்படை விடயங்களை கைவிட முடியாது. எனினும் கட்டுப்பாடுகள் அவசியமாகும். சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் ஊடாகவும் வைரஸ் பரவலை தடுப்பதற்கான ஆலோசனைகள் அறிவுரைகளைப் பின்பற்றுவதன் ஊடாகவும் நாம் இந்த அச்சுறுத்தலில் இருந்து மீண்டு வர முடியும்.
எனவே எக்காரணம் கொண்டும் விதிமுறைகளை மீறி ஒன்றுகூடல்களை நடத்துவதோ அல்லது ஒன்றுகூடல்களில் ஈடுபடுவதோ நிறுத்தப்பட வேண்டியது மிக அவசியமாகும். அத்தியாவசியமற்ற ஒன்றுகூடல்களை முழுமையாக தவிர்த்து விடுவதே பொருத்தமாக அமையும். அதேபோன்று கைகளை கழுவும் செயற்பாடு மிகவும் அத்தியாவசியமானதாகும். அடிக்கடி சவர்க்காரமிட்டு நன்றாக கைகளை கழுவிக் கொள்வதன் ஊடாக மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதே தம்முடன் இருக்கின்ற ஏனையவர்களையும் பாதுகாப்பதற்கு ஒரு மார்க்கமாக அமையும்.
முக கவசங்களை உரிய முறையில் அணிய வேண்டும். முகக் கவசங்களை எவ்வாறு அணிய வேண்டும் என்பது தொடர்பில் ஊடகங்கள் வாயிலாகவும் சுகாதார அதிகாரிகள் வாயிலாகவும் மிகவும் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே அதற்கேற்ற வகையில் மிகவும் வினைத்திறனான முறையிலும் அளிக்கப்பட்டுள்ள விளக்கங்களுக்கு அமைவாகவும் முகக் கவசங்கள் அணிவது மிக அவசியமாகும்.
போக்குவரத்துகளின்போது மக்கள் முகக் கவசங்களை அகற்றவே கூடாது, வர்த்தக நடவடிக்கைகளின் போதும் அரசு அலுவலகங்களிலும் தனியார் அலுவலகங்களில் செயற்படும்போதும் சுகாதார அறிவுறுத்தல்களை உரிய முறையில் பின்பற்றி அன்றாட செயல்பாடுகளில் மக்கள் ஈடுபட வேண்டும்.
தற்போது இலங்கைக்கு தினமும் வெளிநாடுகளில் இருந்து வந்து கொண்டிருக்கின்ற இலங்கையர்களுக்கு தொற்று ஏற்படுகின்றமை அடையாளப்படுத்தப்படுகிறது. எனவே நாட்டுக்குள் கொரொனா வைரஸ் தொற்று இல்லை என்ற ஒரு முடிவுக்கு மக்கள் வந்து விடக்கூடாது. அயல் நாடான இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் மிகவும் ஒரு அபாயகரமான பயங்கரமான நிலைமை வைரஸ் பரவல் விடயத்தில் நீடித்துக் கொண்டிருக்கிறது என்பதனையும் மறந்துவிடக்கூடாது.
இது தொடர்பில் வடமாகாண சமுதாய வைத்திய நிபுணர் டாக்டர் கேசவன் கருத்து வெளியிடுகையில்
தற்போது ஏற்பட்டுள்ள இந்த தொற்று தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்தவேண்டும். அதாவது இந்த விடயத்தில் எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதற்கான மூலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் ஊடாக இலங்கை இன்னும் கொவிட் அபாயத்திலிருந்து மீளவில்லை அல்லது வெளியே செல்லவில்லை என்பது மிகவும் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சகலரும் சுகாதார அமைச்சு விடுத்துள்ள சுகாதார அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டும்.
இம்முறை இலங்கைக்குள் ஒரு இலங்கையர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இதன்மூலம் அபாயம் இன்னும் இலங்கையில் நீடிக்கிறது என்பது சான்றாகிறது. எனவே மக்கள் அனைவரும் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் சுகாதார கட்டுப்படுத்தல் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். உலக நாடுகளில் கொரோனா அபாயம் நீங்கும் வரை இலங்கை அந்த அபாயத்திலிருந்து வெளியே வராது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். எனவே அந்த பாரதூர தன்மையை புரிந்து கொண்டு சகலரும் பொறுப்புடனும் சமூக அக்கறையுடனும் நடந்து கொள்வது மிக முக்கியமாகும். பொது போக்குவரத்தின் போது எக்காரணம் கொண்டும் ஒரு முகக் கவசத்தை அகற்றவே கூடாது என்றார்.
எனவே இந்தப் அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு பாரதூரமான நிலைமையைப் புரிந்து கொண்டு மிகவும் கவனமாக செயல்படுவது மிகவும் அவசியமாகும்.
அரசாங்கம் என்னதான் தடுப்பு நடவடிக்கைகளையும் பொறிமுறைகளையும் முன்னெடுத்தாலும் மக்கள் ஒத்துழைப்பு வழங்கும் தன்மையிலேயே இந்த வைரஸில் இருந்து மீண்டு வருவதற்கான வெற்றி தங்கியிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM