இப்போதெல்லாம் ஐ.பி.எல் போட்டிகளுக்கு முன்னர் இதயம் பலவீனமானவர்கள் இந்த போட்டியை பார்க்காதீர்கள் என்று போர்டு வைக்கலாம் போலுள்ளது. நேற்று 223 ஓட்டங்களை ராஜஸ்தான் அணி துரத்தி அடித்த அதிர்ச்சியில் இருந்தே மீளாத ரசிகர்கள் இன்று ஒரு High Scoring த்ரில்லர் பார்த்து வாயடைத்து போயிருந்தாலும் வியப்பில்லை.
டுபாயில் நேற்று நடந்த ஐ.பி.எல்லின் 10 ஆவது போட்டியில் விராட் கோலியின் ரோயல் சாலஞ்சர்ஸ் அணியும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
எங்களுக்கு எதற்கு ரோஹித்தும் கோலியும் என்று இருந்துவிடலாம் என்றால் கூட மும்பை அணியின் பயிற்றுவிப்பாளராக மஹேல இருப்பதால் அத்தனை இலகுவில் மும்பையை தள்ளி வைக்க முடியவில்லை. சரி பெங்களூரில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்டால் இலங்கை சார்பில் இம்முறை ஐ.பி.எல்லில் விளையாடும் ஒரே வீரர் இசுறு உதான அங்கே தான் விளையாடுகிறார்.
ஒவ்வொரு இலங்கை ரசிகருக்கும் இந்த போட்டி முக்கியமாய் மாறிவிட இந்த இரு காரணங்களே போதும். இதைத் தாண்டி ஒரு கிரிக்கட் ரசிகராக பார்த்தல் பின்ஞ், டிவிலியர்ஸ், கோலி, படிக்கால் என்று திடமான துடுப்பாட்ட வரிசையில் மிகச்சிறந்த வீரர்களைக்கொண்ட பெங்களூருக்கும் பும்ரா, போல்ட், பட்டின்சன், ஹார்திக், சஹர், குருனால் என்று மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்ட அணிக்கும் இடையிலான ஒரு சவாலான போட்டி. இந்தியாவை பொறுத்தவரை இந்திய தலைவராக கோலியே நிலைக்க வேண்டுமா இல்லாவிட்டால் ரோஹித் தலைமை வகிக்க வேண்டுமா என்கிற கேள்விக்கான விடையை தேடிய போட்டியாக அமைந்திருந்தது.
நாணயச்சுழற்சியில் வென்ற ரோஹித் ஷர்மா முதலில் பெங்களூர் அணியை துடுப்பெடுத்தாட பணித்திருந்தார். ஆரம்பம் முதலே இணைப்பட்டதை கட்டியெழுப்பிய பின்ஞ் படிக்கால் ஜோடி 81 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற நிலையில் அரைச்சதமடித்த பின்ஞ் ஆட்டமிழக்க தொடர்ந்து வந்த கோலியும் 3 ஓட்டங்களுடன் வெளியேறி ஏமாற்றினார்.
அடுத்ததாக மிஸ்டர் 360 ஏ.பி.டிவிலியர்ஸ் களமிறங்க மறுபுறம் படிக்கால் தன் அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். தன் பங்குக்கு டிவிலியர்ஸும் 24 பந்துகளில் அரைசதம் விளாச 20 ஓவர்களின் நிறைவில் 201 என்கிற மிகச்சிறந்த எண்ணிக்கையை தன்வசப்படுத்தியது பெங்களூர்.
20 ஓவர்களில் 202 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்று களமிறங்கிய மும்பை அணிக்கு தலைவர் ரோஹித்தும் விக்கெட் காப்பாளர் டி காக்கும் துடுப்பெடுத்தாட வந்தனர். இதுவரை காலமும் எங்கள் வீரர்கள் விளையாட மாட்டார்களா என்று ஏங்கியிருந்த இலங்கை ரசிகர்களுக்கு தன் அறிமுகப்போட்டியிலேயே முதல் ஓவர் வீசி குஷியாக்கினார் இசுறு.
ஆனால் விளையாடுகிறார் என்று சந்தோஷப்பட்டவர்கள் இனி இலங்கையில் இருந்து யாருமே விளையாட மாட்டார்களோ என்று பயப்படும் வகையில் முதல் ஓவரிலேயே 14 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஏமாற்றம் கொடுத்தார்.
அடுத்த ஓவரை வீச தமிழ் நாட்டின் மிகச்சிறந்த சகலதுறை வீரர் என்ற பெயரை தமிழ் நாடு பிரீமியர் லீக்கில் உறுதிப்படுத்தும் வொஷிங்டன் சுந்தர் அழைக்கப்பட்டார். கோலியின் கனவுகளை நிறைவேற்ற வந்த கடவுள் போல ரோஹித்தின் விக்கட்டை படிக்காலிற்கு பதிலாக களத்தடுப்பில் இருந்த 12 ஆம் வீரர் நெகியின் கைகளுக்கு சொந்தமாக்கினார்.
ஸ்டெய்ன் உமேஷ் யாதவ் இருவருமே இல்லாமல் களமிறங்கிய பெங்களூர் அணியின் ஆரம்ப பந்துவீச்சை இசுருவும் சுந்தரும் பொறுப்பெடுத்தனர்.
சுந்தர் வெறுமனே ரோஹித்தின் விக்கட்டை எடுத்ததோடு நின்றுவிடாது பவர்பிளேயில் வீசிய மூன்று ஓவர்களில் வெறுமனே 7 ஓட்டங்களையே வழங்கியிருந்தார். 202 என்ற இலக்கை துரத்தும் போது இந்த பவர் பிளே மும்பைக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே இருந்தது.
அடுத்தடுத்து டி கொக், ஹார்திக் ஆகியோர் ஆட்டமிழக்க இஷான் கிஷான், கைரன் பொல்லார்ட் ஜோடி ஆடுகளத்தில் எஞ்சியிருந்தது. வெற்றிக்கு வாய்ப்பே இல்லை என்று எல்லோரும் முடிவு செய்து இருந்த நேரம் ஆடம் சம்பா வீசிய 17 ஆவது ஓவர் போட்டியையே திருப்பி போட்டது.
சம்பாவின் ஓவருக்கு 27 ஓட்டங்களை பொல்லார்ட் விளாச கடைசி மூன்று ஓவர்களில் 53 ஓட்டங்கள் தேவையாய் இருந்தது. ஏற்கனவே ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கு அவ்வளவு ஓட்டங்கள் போன பின்னரும் சிவம் டுபே போன்ற ஒரு வேகப்பந்து வீச்சாளர் இருக்க மீண்டும் சஹாலிற்கு ஓவரை வழங்கினார் கோலி. 22 ஓட்டங்களை அப்படியே தாரை வார்க்கும் நிலை பெங்களூர் அணிக்கு உருவானது.
பொல்லார்ட் 20 பந்துகளில் அரைச்சததை பூர்த்தி செய்தார். கடைசி 2 ஓவர்களில் 31 ஓட்டங்கள் தேவை. பெங்களூரின் வருங்கால நட்சத்திரம் நவ்தீப் சைனி பந்து வீசுகிறார். எதிர்பார்த்ததுபோல் பௌண்டரிகள் கிடைக்கவில்லை. ஒரே ஒரு சிக்ஸர். மொத்தமாக 11 ஓட்டங்கள் கிடைத்திருந்தாலும் மும்பையால் மீண்டும் வெற்றியை அண்ணாந்து பார்க்க மட்டுமே முடியும் போல் இருந்தது.
கடைசி ஓவர். மீண்டும் இசுரு உதான. இஸ்ஹாக்கிஷானும் பொல்லார்டும் ஒரு ஓட்டத்தை முதல் இரு பந்துகளிலும் முறையே பெற்றார்கள். மூன்றாவது பந்து மீண்டும் இஷான் கிஷான் சிக்ஸராக மாற்றினார்.
3 பந்துகளில் 11 தேவை.
அடுத்த பந்து... மீண்டும் சிக்ஸர்.
இரண்டு பந்துகளில் 5 தேவை. இஷான் கிஷான் 99 ஓட்டங்களோடு ஆடிக்கொண்டிருக்கிறார்.
அடுத்த பந்தையும் உயர்த்தி அடிக்க நேராக படிக்காலின் கைகளை சென்றடைந்தது பந்து. ஒன்றரை மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. கையில் இருந்த சத்தத்தை ஒரு ஓட்டத்தால் தவற விட்டார் இஷான் கிஷான்.
கடைசி பந்து. 5 ஓட்டங்கள் தேவை.
உதான வீசுகிறார். பொல்லார்ட் அதனை லெக் திசையில் அடிக்க 4 ஓட்டங்களாக மாறி போட்டி சம நிலையானது.
இஷான் கிஷான் கண் கலங்கி உட்கார்ந்திருப்பதை கமராக்கள் வட்டமிட தொடங்கின.
சூப்பர் ஓவருக்கு யாரை துடுப்பெடுத்தாட அனுப்புவது என்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் பொல்லார்டும் ஹார்திக்கும் களமிறங்கினார்கள்.
19 ஆவது ஓவரில் மும்பையை திணற வாய்த்த சைனி மீண்டும் பந்துவீசினார். எல்லா பந்துகளையும் அடித்தாட முயன்றும் 7 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. பொல்லார்ட் ஆட்டமிழந்தும் இருந்தார்.
தொடர்ந்து 8 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட கிரிக்கெட்டின் ரொனால்டோ மெஸ்ஸி என்று வர்ணிக்கப்படும் டிவிலியர்ஸும் கோலியும் களம் புகுந்தனர்.
பந்து வீச சூப்பர் ஓவரில் இதுவரை தோல்வியே தழுவாத பும்ரா.
முதல் இரு பந்துகளும் ஒரு ஓட்டங்கள். மூன்றாவது பந்திற்கு விக்கெட் காப்பாளர் பிடியெடுத்ததாக கேட்கப்பட்ட அப்பீலிற்கு நடுவர் ஆமோதிக்க டிவில்லியர்ஸ் அதனை மீள் பரிசீலனை செய்தார். 3ம் நடுவரால் அது ஆட்டமிழப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட 3 பந்துகளிற்கு 6 ஓட்டங்கள் தேவை.
நான்காம் பந்து எட்ஜ் முறையில் உயரமாக சென்று 4 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தது. அடுத்த பந்தில் ஒரு ஓட்டம். கடை பந்தில் ஒரு ஓட்டம் எடுத்தால் வெற்றி என்று இருந்த நிலையில் கோலி அதனை 4 ஓட்டங்களாக்கி வெற்றியை மீண்டும் இருக்க அணைத்துக்கொண்டார்.
பும்ரா பந்து வீசி தோற்ற முதல் சூப்பர் ஓவர் போட்டியாக இது பதிவானதுடன் 99 ஓட்டங்களில் ஐ.பி.எல் போட்டிகளில் ஆட்டமிழந்த 3வது வீரராக இஷான் கிஷான் பதிவானார்.
மேலும் சமநிலையில் முடிந்த போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகவும் இது பதியப்பட்டது.
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பெங்களூர் அணியின் டிவிலியர்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM