நேர்காணல் : குமார் சுகுணா
தான் என்ற சுயநலத்தில் வாழ்பவன் வெறும் மனிதன் என்ற அடையாளம் மட்டுமே கொண்டவன். ஆனால் தனது சமூகம் என்ற சுயநலத்துடன் வாழும் மனிதன் வரலாற்றை மாற்றுகின்றான். வரலாறாகவும் மாறுகின்றான். ஆட்டுமந்தைகள் போல சக மனிதனை பார்க்கும் ஒரு சாபக்கேடான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்த மனநிலை மாற வேண்டும். குப்பத்தில் பிறந்தாலும் கோடி பணம் நிறைந்த மாடியில் பிறந்தாலும் மனிதம் ஒன்றே என்பதை அம்பேத்கார் நகரிலிருந்து வந்து இந்த நூற்றாண்டின் மிக பெரிய ஊடகமான சினிமாவில் தன் கமரா மூலம் பேசிக்கொண்டிருக்கும் இளம் இயக்குநர் பா.இரஞ்சித், இதுவரை தமிழ் சினிமாவில் இருந்த மரபுகளை உடைத்து எந்த கமாரவும் பேசத்துணியாத விளிம்புநிலை மக்களின் குரலை தன் படைப்புகளாக வெளிப்படுத்தி வருவதோடு தனது மூன்றாவது திரைப்படமான கபாலி திரைக்கு வரும் முன்னரே உலகத்தை தன் பக்கம் திசை திருப்பியுள்ளார். எதிர்வரும் 22ஆம் திகதி நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள கபாலி திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் திரையிடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு இயக்குநர் பா.இரஞ்சித் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.....
திருவள்ளூர் மாவட்டத்தில் களம்பாக்கம் எனும் சிற்றூரில் பிறந்த நீங்கள் எப்படி சினிமாவுக்குள் ஈர்க்கப்பட்டீர்கள் ?
பதில் : எனது தாய்மாமன்மார்கள் இருவர் ஓவிய கல்லூரியில் கல்வி பயின்றனர். அப்போதே எனக்கும் ஓவியம் மீது ஈர்ப்பும் ஆர்வமும் ஏற்பட்டது. நான் ஒடுக்கு முறைகளுக்கு உள்ளான ஒரு சமூகத்திலிருந்து வந்தவன். இதன்போது ஓவியத்தின் மூலமாக சமூக பிரச்சினைகளை தட்டிக் கேட்கமுடியும் என உணர்ந்தேன். நானும் ஓவியக் கல்லூரியில் இணைந்தேன். 1 ஆம் ஆண்டிலிருந்து 4 ஆம் ஆண்டுவரை ஆர்ட் டைரக்டராக வரவேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருந்தது. அப்போது ஓவியர் சந்துரு மிகப் பெரிய கலைநுணுக்கங்களை எனக்கு கற்றுத்தந்தார். நான் கல்லூரியில் கல்வி பயின்றபோது எமது கல்லூரியில் பிலிம் பெஸ்டிவேல்ஸ் நடைபெறும். இதன்போது உலக தரம் வாய்ந்த பாரம்பரியமிக்கதும் சமூக பிரச்சிகைளை வெளிப்படுத்தும் திரைப்படங்களும் திரையிடப்பட்டன. இதனை பார்த்தபோது இது போன்ற திரைப்படங்களை ஏன் நமது சமூகத்திற்காக நாம் எடுக்க கூடாது. சினிமா என்பது ஓவியத்தை விட பெரிய ஊடகம் இதன் மூலம் நமது சமூக பிரச்சினையை தட்டிக்கேட்ட முடியும். நமது மக்களின் பிரச்சினைகளையும் தெளிவாக வெளிப்படுத்த முடியும் என நினைத்தேன். அதன் வெளிப்பாடே என்னை இயக்குநராக்கியது.
உங்களின் மூன்றாவது திரைப்படத்திலேயே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு எப்படி இவ்வளவு எளிதில் கிடைத்தது?
பதில் : என்னுடைய அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் திரைப்படங்கள் வெளியாகியபோது ரஜினி சேர் எனக்கு போன் பண்ணி வாழ்த்து தெரிவித்தார். மெட்ராஸ்ஸ பாத்துட்டு ''சூப்பர் கண்ணா நல்லா பண்ணிருக்கனு'' சொன்னார். அது ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஒரு நாள் அவர் மகள் சௌந்தர்யா எனக்கு போன் பண்ணி ரஜினி சேர் படம் பன்றது பத்தி கேட்டாங்க. நான் அத எதிர்பார்க்கவே இல்ல. அதிர்ச்சி ஆகிட்டேன். நான் கோவா படத்துல அசிஸ்டெண்ட் டயரெக்டரா வேர்க் பண்ணும் போதே செளந்தர்யா அந்த படத்தோட தயாரிப்பாளரா இருந்தாங்க. அப்போ என் அட்டகத்திய அவங்கத்தான் தயாரிப்பதாக முதல்ல இருந்தது.
கபாலி திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே இதுவரை ரஜினியின் எந்த திரைப்படத்துக்கும் கிடைக்காத ஒரு வரவேற்பு உலக ரசிகர்களிடம் கிடைத்துள்ளது, டீசர் 2 கோடி பார்வையாளர்களை தாண்டியுள்ளது. உங்களது மனநிலை எப்படி இருந்தது? இதை எதிர்பார்த்தீர்களா? இதற்கு பிறகு படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்ததுள்ளது. இது தொடர்பில்....
பதில் : இவ்வளவு பெரிய வரவேற்பை நான் எதிர்பார்க்கல. ஆனால் ஒருவருட உழைப்புக்கான பெறுமதியை திரைப்படத்தில் பெஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது உணர்ந்தேன். நாற்காலியில் ரஜினி அமர்ந்திருக்கும். அந்த போஸ்டருக்கு மிகப் பெரிய வரவேற்ப்பு கிடைச்சது. அப்போதான் நாம சரியாதான் வேலை பண்றோம் என்ற நம்பிக்கை வந்துச்சி. ஆனால் டீசர் வெளியிடும் போது பயமா இருந்துச்சு. ரஜினி சேர் படம்னா ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கும். என்னோட திரைப்படங்கள் சமூகம், அரசியல் பத்தி பேசும். ஆனால் ரஜினி சேரின் வழமையான திரைப்படங்கள் கொமர்ஷியலா இருக்கும். மக்கள் இத ஏத்துபாங்களானு பயமா இருந்துச்சி. மிக சவாலாக இருந்தது. இளம் இயக்குநர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கும்னு ரஜினி சேரே சொன்னாங்க. ஆனால் என் திரைக்கதையில் ரஜினியை கபாலியாக இயக்க வேண்டும் என்று நினைத்தேன். அது முடிஞ்சுது. டீசர் வெளியாகும் போது பயமா இருந்தது. ஆனால் இவ்வளவு பெரிய வரவேற்பை நானும் எதிர்பார்க்கல. ரஜினி சேரும் எதிர்பார்க்கல.
ரஜினியை இயக்கிய அனுபவம் தொடர்பில்...
பதில் : மிகவும் இயல்பானவர். முதல்ல அவர் பெரிய ஸ்டாராக இருந்தாலும் இயக்குநர் சொல்றத கேட்டு நடிச்சார். எந்த பிரச்சினையும் இல்ல. அவருடன் பணி புரிந்தமை ரொம்ப ரொம்ப சந்தோஷமா சூப்பரா இருந்துச்சி.
அட்டகத்தியில் தமிழ் சினிமாவில் இருந்த காதல் மரபையும் மெட்ராஸ்ல இதுவரை நாம் பார்த்த சென்னை என்பதையும் உடைத்து விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை படமாக்கியிருந்தீர்கள். கபாலியில் இதுவரை ரஜினி என்று இருந்த ஒரு மரபு உடைக்கப்படுமா?
பதில் : நிச்சயமாக இது ஏனைய ரஜினியின் திரைப்படங்கள் போல இருக்காது. ஆனால் எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும். இது மக்களின் படமாகவே இருக்கும். மக்கள் என்பது இங்கு ரஜினி. மக்களின் ஒட்டுமொத்த குரலாக ஒருவர் அதுதான் கபாலி.
"கபாலி" தமிழ் சினிமாவில் கொலைகாரர்களையும் கொள்ளையர்களையும் குறிக்கும் பெயராகத்தானே இருக்கும் .நீங்கள் எப்படி அதை ஹீரோவாக மாற்றினீர்கள்?
பதில் : இதுவரை தமிழ் சமூகம் அப்படி நினைச்சிட்டு இருந்தது. அந்த மரபை உடைத்தேன். பெரும்பாலான மக்களின் வலியும் எழுச்சியுமே கபாலி. கபாலினா கொலைகாரர் என்ற மரபை உடைத்தேன்.
ரஜினி படம் என்றாலே பிரபல கலைஞர்களே பணியாற்றுவர். அறிமுகப்பாடல் எஸ்.பி.பி தான் பாடுவது வழமை, ஆனால், கபாலியில் அந்தளவு பிரபல்யம் இல்லாத உங்களின் முன்னைய திரைப்படத்தில் உள்ளவர்களே பணியாற்றியுள்ளனரே...?
பதில் : நாம் சந்தர்ப்பம் தேடும் போது நமக்கு முன் உச்சத்தில் இருக்கவங்க நமக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை என்றால் குறை கூறுவோம். ஆனால், அந்த சந்தர்ப்பத்தை வழங்க கூடிய சூழ்நிலையில் நாம் இருக்கும் போது அதனை வழங்கனும். என்னுடைய படைப்பு காத்திரமானதாக இருக்கும். மத்தவங்க எதிர்பார்ப்புக்கு பண்ணமுடியாது. கடினமாக உழைப்பவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும். இறங்கி வேலை பண்றாங்க. அவர்கள் தமது பணிகளை சிறப்பாகவே செய்துள்ளனர்.
உலகின் மிக பிரமாண்ட திரையரங்கான பிரான்ஸில் உள்ள ரெக்ஸ் சினிமாஸ் கபாலி வெளியீடு தொடர்பில்....
பதில் : மகிழ்ச்சி, சந்தோஷமாக உள்ளது.
இந்த நூற்றாண்டிலும் கூட சாதிக்காக கொலை செய்யும் அளவுக்கு ஏன் தமிழக மக்களின் மனநிலை கொடூரமாக உள்ளது...?
பதில் : பிரிப்பு வாத அரசியல் என்பதனை நோக்காக கொண்டவர்கள் ஏழைகளையும் சாதி உணர்வு கொண்ட மக்களையும் பயன்படுத்துகின்றனர். சமூகத்தில் உயர் சமூகம் என்ற இருப்பை காப்பாற்ற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கு. இதற்காக தனது இனத்தவன் சாதி மற்றும் ஏழைசாதி என பிரித்து சாதியால் உணர்ச்சிவசப்படுகின்ற தன்மை உடைய மக்களின் உணர்வுகளை வெடித்தெழ செய்ய வைக்கின்றனர். தமது நோக்கத்துக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் கொல்லப்படுவர். சாதி மிக பெரிய விஷச்செடி போன்றது. உயர் சமூகம் என்ற இருப்பை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சி மனிதனையும் மனிதத்தையும் அழிக்க வைக்கின்றது.
சமூகத்தில் கொலை, கொள்ளைகள் இடம்பெறுவதற்கு சினிமாவின் தாக்கமே காரணம் என வெளிப்படையான குற்றச்சாட்டுகள் வருகின்றனவே...?
பதில் : நன்மை, தீமை என்ற இரண்டுமே சினிமாவில் இருக்கின்றது. உண்மையான படைப்பாளி சமூகத்துக்கு பொறுப்பு கூறலுடன் நடக்க வேண்டும். இந்திய தமிழ் சமூகத்தில் வாழ்க்கையை தீர்மானிப்பதாக சினிமா உள்ளது. ஒருவன் தனக்கு பிடிச்ச நடிகர் மாதிரி தன்னை பாவணைசெய்து அந்த கதாபாத்திரமாக தன்னை மாற்றிக்கொள்கிறான்.
சினிமா காதலை தன் காதலாக தன்னுடன் இணைத்து கொள்கிறான். சினிமாவில் பேசப்படுவது வாழ்க்கையாக மாறுகின்றது. சராசரி சினிமா 80 களின் பின் மாற்றம் அடைந்துள்ளது. இளைஞர்கள் தவறு செய்து வாழலாம் போன்ற திரைப்படங்கள் வெளியாகி அவை மக்களின் வரவேற்பை பெற்று மிகப் பெரிய வெற்றி திரைப்படங்களாக மாறியுள்ளன. எனவே, திரைப்படம் எடுக்கும் போது எதனை சொல்ல வேண்டும் என்ற சமூக பொறுப்பு படைப்பாளிக்கு உள்ளது.
சமூக ஏற்றத்தாழ்வை சினிமா சரிசெய்யாதா...?
பதில் : சினிமாவால் சமூக ஏற்றத்தாழ்வை மாற்ற முடியாது. ஆனால் அவனது உணர்வை தூண்டி கேள்வியை ஏற்படுத்த முடியும்.
அறிமுக நடிகர்களை வைத்துக்கொண்டு எப்படி அட்டகத்தியில் வெற்றிபெற முடிந்தது...?
பதில் : நம்பிக்கை, தன்னம்பிக்கை.
உதவி இயக்குநராக யாரிடம் பணியாற்றினீர்கள்?
பதில் : முதலாவதாக தகப்பன் சாமியில் சிவஷண்முகத்திடமும் பின்னர் கோவா உள்ளிட்ட 3 திரைப்படங்களில் வெங்கட் பிரபுவிடமும் பணியாற்றினேன்.
இன்று குருவை மிஞ்சிய சிஷ்யனாகிவிட்டீர்களே? அவர்கள் உங்களை வாழ்த்தினார்களா...?
பதில் : ஆம், கபாலி டீசர் பார்த்துட்டு வெங்கட் சேர் போன் பண்ணி விஷ் பண்ணுனாங்க..
வெற்றிமாறனுக்கும் பாலாவுக்கும் ஒரு பாலு மகேந்திரா மாதிரி உங்களுக்கு யார்...?
பதில் : எனக்கு குரு ஓவியர் சந்துரு தான்.. சினிமாவில் இயக்குநர் மகேந்திரன் பிடிக்கும்.
பிடித்த திரைப்படம் என்ன?
பதில் : உதிரிப்பூக்கள், பராசக்தி
பாலசந்தர் மத்திய வர்க்க மக்களையும் பாரதிராஜா கிராமத்தையும் சினிமாவுக்குள் கொண்டு வந்தது போல உங்கள் கமரா சாதி ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளான தலித் மக்கள பத்தி பேசுது.. இது உங்களின் அடையாளமா?
பதில் : எல்லாவற்றுக்கும் பின்னால் சமூகத்தில் மிக பெரிய அளவில் மனித உறவுகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு உள்ளது. ஆனால் எல்லோருமே சமம். சாதி, மதம், ஏழை – முதலாளி, திருநங்கை, ஒடுக்கப்பட்ட சமூகம் என்ற எல்லாமே சமம். இதைத்தான் இவர்களுடைய பிரச்சினையை நான் பேசுறேன்.
உங்களுக்கு இதற்குமேல் ஏதாவது இலட்சியம் இருக்கின்றதா...?
பதில் : கடைசிவரை மனிதனாக இருக்க வேண்டும்.
ராஜீவ் கொலை பேரறிவாளன் உள்ளிட்டோருக்காக குரல் கொடுத்தீர்கள்.. தொடர்ந்து அவர்களது விடுதலைக்காக உங்கள் குரல் ஒலிக்குமா?
பதில் : தமிழர்களின் சமூக பிரச்சினை, சாதிய ரீதியான அடைக்குமுறை அனைத்திலும் கலந்துகொள்வேன். குரல் கொடுப்பேன்.
கொமர்ஷியல் திரைப்படங்களின் வருகையால் நல்ல கதையும் வளரும் இயக்குநர்கள் சந்தர்ப்பம் இன்றி தங்களது கனவுகளையும் தொலைப்பதாக வெளிவரும் விமர்சனம்?
பதில் : மாவோ ''கலை என்பது மக்களுக்கானது. மக்களுக்காக உருவாக வேண்டும்'' என்கிறார். ஆகவே திரைக்கதை என்பது மக்களிடம் இருந்து மட்டுமே உருவாகக்கூடியது. அது என்டர்டைமன்ட்டாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நல்ல படமா இருந்தால் மக்களுக்கு இரண்டுமே ஒன்றுதான். நல்ல படமாக இருந்தால் பாணி ஒரு பிரச்சினை இல்லை. அது ரசிகர்களுக்கு பிடிச்சதா மாறினால் சந்தோஷமாக திரைப்படம் முடிந்து திரையரங்கை விட்டு வெளியேறுவான்.
"கபாலி" நெருப்புடா பாடலை புதிய திரைப்படம் ஒன்றின் பெயராக வைத்துள்ளனரே...?
பதில் : சந்தோஷம் தான்
சூர்யாவுடன் உங்களது அடுத்த படம் எப்போது....?
பதில் : மெட்ராஸூக்கு பிறகு சூர்யாவோட இணைய இருந்தேன். கபாலியால் அது பிற்போடப்பட்டது. இந்த வருட இறுயில் சூர்யாவுடனான புதிய திரைப்படம் ஆரம்பமாகும்
இலங்கை ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?
பதில் : சாதியை மறந்து மனிதனை நினைங்க...
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM