(செ.தேன்மொழி)
நாட்டில் மாறுபட்ட ஆட்சியை முன்னெடுப்பதாக கூறிக் கொண்டு ஆட்சியமைத்துள்ள ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவின் அரசாங்கம் , 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட அரசாங்கத்தை போன்றுதான் அமையப்பெற்றுள்ளது. அமைச்சு பதவிகளில் அதே மோசடிக்காரர்களே உள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினல் முஜூபுர் ரஹூமான் தெரிவித்தார்.
1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க எவ்வாறு இனவாதத்தை பரப்பி தேர்தலில் பாரிய வெற்றிப்பெற்றாரோ , அதே போன்று தான் தற்போதைய அரசாங்கமும் வெற்றிப்பெற்றுள்ளது. இதனால் நாட்டிற்கு எவ்வித பலனை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி தேர்தலை போன்று பாரியதொரு வெற்றியை பொதுத் தேர்தலிலும் மக்கள் அரசாங்கத்திற்கு பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது மக்களுக்கு பல வாக்குறுதிகளை ஆளும் கட்சி வழங்கியிருந்தது.
1956 ஆம் ஆண்டு தேர்தலில் எஸ்.டப்லியூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க எவ்வாறு வெற்றிப் பெற்றுக் கொண்டாரோ அதனைப் போன்றே சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை பரப்பி ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவும் வெற்றிப் பெற்றுள்ளார். இதன் மூலம் நாட்டிற்கு வளர்ச்சியை பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கப் போகின்தா? அல்லது 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற அதே ஆட்சி முறையையே மீண்டும் முன்னெடுக்க போகின்றதா ? என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சியில் அமைச்சுப் பொறுப்புகளை பெற்றிருந்த அதே மோசடிகாரர்களுக்கே இம்முறையும் , பல அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்த அரசாங்கத்தில் இதுவரையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதேவேளை 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கே பொறுப்புவாய்ந்த அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் கல்வி அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரால் துடிப்பாக செயற்பட முடியுமா? மேலும் பத்திக் , மட்பாண்டம் தொடர்பில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தொழிநுட்பத்திற்கு ஒரு அமைச்சரும் நியமிக்கப்பட வில்லை. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ டிஜிட்டல் முறைமைப்படுத்தல் தொடர்பில் அதிகம் பேசிவந்திருந்தாலும் , அவரது ஆட்சியில் அது தொடர்பில் ஒரு அமைச்சினை ஸ்தாபிக்க முடியாமல் போனமை பெரும் குறைப்பாடாக காணப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேக்கர மாகாண சபைகளின் அதிகாரங்களை மீள் திருத்தம் செய்வது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். இதேவேளை இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் தங்களுக்கு பாரபட்சம் இடம்பெற்றதாக கவலை தெரிவித்துள்ளார். இந்நிலையில் மக்களுக்கு நலனைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் நாங்கள் எமது ஆதரவை பெற்றுக் கொடுப்பதுடன் , பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒரு போதும் இணக்கம் தெரிவிக்க மாட்டோம்.
கேள்வி : ஆளும் தரப்பினர் இனவாத கருத்துகளை பரப்புவதாக நீங்கள் குற்றஞ்சாட்டினாலும் , வடமேல் மாகாண ஆளுனர் மொஹம்மட் முஸாம்பில் எதிர்தரப்பினரும் இனவாத கருத்துகளை முன்வைத்தே அரசியலில் ஈடுபடுவதாக கூறியுள்ளாரே?
பதில் : ஆளுனர் மொஹம்மட் முஸாம்மிலின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அனைவரும் அறிவார்கள். அவர் தனது சுய இலாபத்திற்காக ஒவ்வொரு கட்சியுடனும் இணைந்து செயற்பட்டு வருகின்றார். ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொழும்பு நகரசபை தேர்தலில் போட்டியிட்ட போது ராஜபக்ஷர்களை கடுமையாக விமர்சித்தவர். தற்போது அவர்களுடன் இணைந்துக் கொண்டு இவ்வாறான கருத்துக்களை கூறிவருகின்றார்.
நாங்கள் எப்போதுமே இன, மத ஒற்றுமை தொடர்பிலே பேசி வந்துள்ளோம். அனைத்து இன மக்களுக்கும் சமமான இடம் கிடைக்க வேண்டும் என்பதே எமது எண்ணம். அவரது கருத்து தொடர்பில் நாம் அவதானம் செலுத்த தேவையில்லை, காலத்திற்கு காலம் அவர் மாறுப்பட்ட கருத்துகளையே தெரிவித்து வருவார். அவரே மேலும் விமர்சிக்க நான் விரும்ப வில்லை.
கேள்வி : ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் தொடர்பில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றதே?
பதில்: தேசியப் பட்டியல் தொடர்பில் எந்தவித முரண்பாடுகளும் கட்சியில் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக் கொண்டுள்ள பங்காளி கட்சிகள் அனைத்தினதும் தலைவர்களின் அனுமதியுடனே கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேசியப்பட்டியல் தொடர்பான முடிவுகளை எடுத்திருந்தார். இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவுச் செய்யப்பட்டுள்ள நஸீர் அஹமட் இது தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் , இது தொடர்பில் முடிவெடுக்க சஜித் பிரேமதாசவுக்கு அனுமதி வழங்கியுள்ளார். இவர் கடந்தகாலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷவுடனே இணைந்து செயற்பட்டிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM