(எம்.மனோசித்ரா)
1977 ஆம் ஆண்டு முதல் நுவரெலியா மாவட்டத்திற்கு காணப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள தமிழ் பிரதிநித்துவ அமைச்சு இம்முறை இல்லாமலாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதிய அரசாங்கத்தில் நுவரெலியா மாவட்டத்திற்கென அமைச்சரவையொன்று ஒதுக்கப்படாமை கவலையளிக்கிறது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வேலுசாமி இராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
கொழும்பு - ரமடா ஹோட்டலில் இன்று புதன்கிழமை தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
இலங்கை வரலாற்றில் 43 வருடங்களாகக் காணப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு இம்முறை இல்லாமலாக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது கவலைக்குரிய விடயமாகும். 1977 முதல் தமிழ் பிரதிநிதியொருவர் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டு வருகின்றமை சரித்திரமாகும். தற்போது அது இல்லாமலாக்கப்பட்டுள்ளமை ஒட்டுமொத்த நுவரெலியா மக்களுக்கும் நாடளாவிய ரீதியில் வாழ்கின்ற மலையக மக்களுக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது என்றார்.
ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பிரதி தலைவர் பழனி திகாம்பரம் கருத்து தெரிவிக்கையில் ,
ஆறுமுகன் தொண்டமானுடைய பெயரைப் பயன்படுத்தி பிரசாரம் செய்து கொண்டிருந்த செந்தில் தொண்டமான் இன்று மக்களால் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றார். எமக்கு வாக்களித்த 83 ஆயிரம் மக்களுக்கு எமது சேவைக்காக மீண்டும் எம்மை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்திருக்கின்றனர். அத்தோடு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே எமக்கு காணப்பட்டது. அதற்காகவே நாம் செயற்படுகின்றோம்.
கேள்வி : முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகணம் திலகராஜூக்கு தேசிய பட்டியல் வழங்கப்படும் என்று ஆரம்பத்தில் உறுதியளித்திருந்தீர்களல்லவா ?
பதில் : ஆம். அவருக்கு தேசிய பட்டியலை வழங்குவதாகக் கூறியிருந்தோம். ஆனால் அவர் தேர்தலின் போதோ அல்லது அதற்கு பின்னரோ இது பற்றி உத்தியோகபூர்வமாக எவ்வித கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை. அத்தோடு கட்சிக்காக எந்தவொரு வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை என்பதோடு பிரசார நடவடிக்கைகளும் கலந்து கொள்ளவில்லை.
எம்மிடம் உத்தியோகபூர்வமாக கலந்துரையாடாமல் முகப் புத்தகத்தில் பதிவுகளை இடுவதனாலேயோ அல்லது ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதனாலேயோ தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்று விட முடியாது. அவர் எம்முடன் நேரடியாக பேச வேண்டும் என்றார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் கருத்து தெரிவிக்கையில் ,
கடந்த முறைத் தேர்தலைப் போன்றே இம்முறையும் தமிழ் முற்போக்கு கூட்டணி அனைத்து ஆசனங்களையும் தக்க வைத்துக் கொண்டது. வேறு எந்த கட்சிகளாலும் இவ்வாறு செயற்பட முடியாமல் போயுள்ளது. அத்தோடு கேகாலை , இரத்தினபுரி மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் 3 இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளை தமிழ் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டமை இதுவே முதற்தடவையாகும்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரும் கட்சியாக நாம் காணப்படுகின்றோம். எமது கட்சி இனவாதம் பேசக்கூடியதல்ல. மாறாக தேசிய ரீதியிலான கட்சியாகும். ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கத்தில் எமது வகிபாகம் பிரதானமானதாகும். இந்த கூட்டணியில் நாம் நீண்ட பயணம் செல்ல வேண்டியிருக்கிறது. எனவே தேசிய பட்டியல் விவகாரத்தின் மூலம் பிளவினை ஏற்படுத்த நாம் எதிர்பார்க்கவில்லை.
எனவே தான் தேசிய பட்டியல் விவகாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரமேதாசவின் கைகளில் முடிவை ஒப்படைத்திருக்கின்றோம். அவர் எந்த தீர்மானத்தைக் கூறினாலும் அதனை நாம் ஏற்றுக் கொள்வோம். நாட்டுக்காக சிந்தித்து எமது உரிமையை சஜித்திடம் பொறுப்பளித்திருக்கின்றோம்.
கேள்வி : இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்திருந்தீர்களல்லவா ?
பதில் : ஆம். சந்தித்திருந்தோம். இது மரியாதையின் நிமித்தம் இடம்பெற்ற சந்திப்பாகும். ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இந்தியாவுடனான எமது உறவு தொடரும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM