தலைவலிக்கு அடுத்தபடியாக அதிக நபர்களை பாதிப்பது வலிப்பு நோயாகும். இந்தியாவில் 100 பேரில் ஒருவருக்கு வலிப்பு நோய் ஏற்படுகிறது. ஆண்டுதோறும் 10 இலட்சம் பேர் புதிதாக வலிப்பு நோய் வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.
வலிப்பு என்பது ஒரு நோயின் அறிகுறி. மூளை பாதிக்கப்பட்டு இருந்தாலோ, அதிக காய்ச்சல் இருந்தாலோ அதனைத் தெரிவிக்கும் அறிகுறியாக வலிப்பு இருக்கிறது. ஒருவருக்கு வலிப்பு ஏற்படும் போது கையும் காலும் வெட்டி இழுக்கும். வாயில் நுரை வரும். கண்கள் கழன்று நாக்கு பற்களுக்கு இடையில் சிக்கி கடிபட்டு வாயிலிருந்து இரத்தம் வழிய சுயநினைவை இழந்து தரையில் கிடப்பார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு வலிப்பு நோய் வந்தவர் இயல்பு நிலைக்குத் திரும்புவார். மூளை மற்றும் நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் நடக்கும் போது மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது.
இந்த மின்சாரம் அதிகமாக உற்பத்தியாகி இருக்கும் போது அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்கு கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு கை கால்கள் குளறுகின்றன. இதனைத்தான் வலிப்பு என்கிறோம்.
மூளையில் உண்டாகிய மின் அதிர்வுகள் வலிப்புக்குக் காரணமாக இருக்கின்றன. தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, இரத்தக் கசிவு, இரத்தம் உறைதல், கிருமித்தொற்று, மூளைக் காய்ச்சல், டெட்டனஸ் ஆகியவை வலிப்பு வருவதற்குக் காரணமாக இருக்கிறது.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள் போன்றவையும் வலிப்பைத் தூண்டுகின்றன. வலிப்பு வருவதற்கு பாரம்பரியமும் காரணமாக உள்ளது. கர்ப்பிணிகளுக்கு இரத்தக் கொதிப்பு இருந்தால் பிரசவ காலத்தில் வலிப்பு வருவது உண்டு. பக்கவாதம், மூளை இரத்தக் குழாய்களில் மாற்றங்கள், அல்சீமர் நோய், இரத்தத்தில் தட்டணுக்கள், சோடியம் அளவு குறைதல் ஆகியவற்றாலும் வயதானவர்களுக்கு வலிப்பு வரும்.
மன உளைச்சல் காரணமாகவும்; வலிப்பு வருவதுண்டு. பலத் தருணங்களில் காரணத்தை கண்டு பிடிக்க முடியாத வலிப்புகளே அதிகம் உள்ளன. குழந்தைகளுக்கு பிறக்கும் போது ஆக்சிஜன் குறைபாடுகள், குறைப் பிரசவம், பிரசவ காலத்தில் தொற்று நோய்கள், பிரசவத்தின் போது தலையில் அடிபடுதல் போன்றவற்றால் குழந்தைகளுக்கு வலிப்பு வருகிறது.
குழந்தைகளுக்கு இரத்தத்தில் குளூகோஸ், கால்சியம், மெக்னீசியம் அளவு குறைந்தாலும் வலிப்பு வரும்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும் போது வலிப்பு ஏற்படலாம். 6 மாதம் முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சல் வந்தால் கூட உடலில் வெப்பம் அதிகரித்து வாய்ப்பு வரும்.
மூளையில் எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறதோ அதற்கேற்ப வலிப்பின் தன்மை மாறுபடும்.
மூளையின் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும் பாதிப்பால் வருவது பகுதி வலிப்பாகும். வலிப்பு வந்தவர்கள் மூளை நரம்பியல் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.
மூளையில் மின்னூட்டத்தின் அளவை அளவிடும் ஈ.ஈ.ஜி, வீடியோ ஈ.ஈ.ஜி. சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவற்றை செய்து வலிப்புக்கான காரணத்தை அறியலாம்.
வலிப்பைக் குறைக்கவும், அது மீண்டும் வராமல் தடுக்கவும் மாத்திரைகள் உள்ளன. பாதிக்கப்பட்டவரின் வயதினைப் பொறுத்து மருந்து மாத்திரைகள் பரிந்துரை செய்யப்படும்.
இந்நோய்க்கு ஆரம்ப நிலையில் கவனித்து விட்டால் 1 அல்லது 2 மாத்திரைகளே போதும். மாத்திரைகளை விடாமல் தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களில் 60 முதல் 70 சதவீதம் பேருக்கு வலிப்பு வருவதைத் தடுத்து விடலாம்.
வலிப்பு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டும் என்ற கவலைபட வேண்டியதில்லை. மருந்து மாத்திரைகளை 3 ஆண்டுகள் வரை சாப்பிட்டு வலிப்பு வரவில்லை என்றால் மாத்திரைகளை சிறிது சிறிதாகக் குறைத்துப் பின்னர் நிறுத்தி விடலாம். மாத்திரைகளை நேரம் தவறி சாப்பிடுவதோ அல்லது விட்டு விட்டு சாப்பிடுவதோ அல்லது உடனடியாக நிறுத்துவதோ கூடாது.
வலிப்புக்கான சிகிச்சையில் இது முக்கியம் ஆகும். 2 முதல் 3 சதவீத நோயாளிகளுக்கு மருந்துகள் பலன் அளிப்பதில்லை. அவர்களுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன், பெட் ஸ்கேன் மூலம் மூளையில் எந்த இடத்தில் நோய் தொடங்குகிறது எனக் கண்டுபிடித்து அந்த இடத்தில் உள்ள திசுவை மட்டும் அகற்றும் மைக்ரோ அறுவை சிகிச்சை உள்ளது.
கர்ப்பத்திற்கு முன்பும் பின்பும் கர்ப்பிணிகளை முறைப்படி பராமரிப்பதால் குழந்தைகளுக்கு பிறவியிலேயே வலிப்பு வருவதைத் தடுக்கலாம்.
குழந்தைகளுக்குக் காய்ச்சல் வராமல் தடுப்பது, காய்ச்சல் உள்ளக் குழந்தையை குளிரூட்டப்பட்ட அறையில் வைத்து முதலுதவிகளைச் செய்வதால் காய்ச்சல் வலிப்பைத் தடுக்கலாம். வலிப்பு வந்தவர்கள் விபத்திற்குள்ளாவதை தடுக்க வேண்டும். இயந்திரங்களில் பணிபுரிவது, உயரமான இடங்களில் வேலை செய்வது, தண்ணீரில் அல்லது தண்ணீருக்கு அடியில் இருக்கும் பணிகளில் ஈடுபடுவது வாகனங்களை ஓட்டுவது போன்ற பணிகளைத் தவிர்க்க வேண்டும்.
வலிப்பு வரும் குழந்தைகளை நீர் நிலைகளின் அருகே விளையாட அனுமதிக்க கூடாது. வலிப்பு வந்தவர்கள் மது அருந்தக் கூடாது. அப்படி செய்தால் வலிப்புக்கான மருந்து முழுவதும் வேலை செய்யாது.
வேறு ஏதேனும் நோய்க்கு சிகிச்சை எடுக்கும் போது வலிப்பு நோய்க்கு சாப்பிடும் மருந்துகளை மருத்துவரிடம் கூற வேண்டும்.
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலிப்பு நோய் மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்தக் கூடாது. வலிப்பு நோய் திடீரென்று வரும்.
இருப்பினும் அது வருவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக ஆரா என்ற அறிகுறி ஏற்படும். அவை திடீர் தலைவலி, உடல் சோர்வு குழப்பமான மனநிலை, பதற்றம், பயம், வியர்த்தல், காதில் மாயக் குரல் கேட்பது, கண்கள் கூசுவது, மங்கலமான பார்வை, உடலில் மதமதப்பு, நடை தடுமாற்றம் ஆகியவை ஆகும். இந்த அறிகுறிகள் வந்தால் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று படுக்க வேண்டும்.
இருப்பினும் வலிப்பு வந்து விட்டால் பாதிக்கப்பட்ட நபரை ஒருபக்கமாக சாய்த்துப் படுக்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபரின் சட்டை இடுப்பு பெல்ட், கழுத்து டை போன்றவற்றைத் தளர்த்த வேண்டும்.
அவரை நன்கு சுவாசிக்கச் செய்ய வேண்டும். மின் விசிறி, கை விசிறி மூலம் காற்றோட்டம் கிடைக்க வழி செய்ய வேண்டும். அருகில் காயத்தை ஏற்படுத்தும் கூர்மையானப் பொருட்கள் இருந்தால் அதனைத் தள்ளி வைக்க வேண்டும். மூக்குக் கண்ணாடி, செயற்கைப் பல் செட்டை அகற்ற வேண்டும். உமிழ்நீர் வழிந்தால் துடைக்க வேண்டும்.
ஒருவருக்கு வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் ஆபத்து ஆகும். உடனே அந்த நபரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
வலிப்பு வரும் நபரின் கை கால்களை அழுத்திப் பிடிக்கக் கூடாது. வலிப்பு வந்தவர்களுக்கு நினைவு திரும்பும் வரை அவருக்கு குடிக்கவோ சாப்பிடவோ தரக்கூடாது. முழு நினைவு வந்த பின்னர் தண்ணீரைப் பருகச் செய்யலாம்.
வலிப்பு வரும் போது இரும்பு சாவி தருவதால் பயன் கிடையாது. மூக்கில் வெங்காய சாற்ற ஊற்றக் கூடாது.
- டொக்டர் C.ஜஸ்டின், M.D., D.M. (Neuro), DNB (Neuro), MNAMS.,
நரம்பியல் மருத்துவ நிபுணர்
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM