(நா.தனுஜா)
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் ரஞ்சன் ராமநாயக்க, பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, அஜித் பி.பெரேரா, துஷார இந்துனில், நளின் பண்டார ஆகியோரின் உறுப்புரிமை ஐக்கிய தேசியக் கட்சியினால் இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இன்னமும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து உத்தியோகபூர்வமாக நீக்கப்படவில்லை என்பதை அக்கட்சியினால் வெளியிடப்பட்டிருக்கும் கட்சி உறுப்புரிமை இரத்துச்செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலில் இருந்து அறியமுடிகிறது.
கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அக்கட்சியிலிருந்து விலகி எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் 54 பேரினதும், கட்சியிலிருந்து விலகி அல்லது கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக செயற்படும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் 61 பேரினதும் - மொத்தமாக 115 பேரின் உறுப்புரிமை இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
உறுப்புரிமை இரத்துச்செய்யப்பட்ட அனைவருக்கும் அதுகுறித்த கடிதம் நேற்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அனுப்பிவைக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கும் விதிமுறைகளுக்கும் முரணாக செயற்பட்ட உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் 200 பேர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்களது உறுப்புரிமையை இரத்துச்செய்வது குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கட்சியின் உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல் இன்றைய தினம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி வேறொரு கட்சியின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடுபவர்களில் ரஞ்சன் ராமநாயக்க, பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, அஜித் பி.பெரேரா, இந்துனில் துஷார, நளின் பண்டார ஆகியோர் உள்ளடங்கலாக 53 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் அக்கட்சியில் முன்னிலை வகிக்கும் ஹர்ஷ டி சில்வா, ஹரீன் பெர்னாண்டோ, எரான் விக்ரமரத்ன போன்றோரின் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை. அதேபோன்று வெலிகம நகரசபைத் தலைவர் ரெஹான் தனுஷ்க விஜேரத்ன் ஜயவிக்ரம, கம்பளை நகரசபைத் தலைவர் பி.எம்.சமந்த அருண குமார, நாவலப்பிட்டி நகரசபைத் தலைவர் எச்.எஸ்.சம்பத் சஞ்சீவ ஆகியோரினதும் பிரதேச மற்றும் நகரசபை உறுப்பினர்கள் 57 பேரினதும் பெயர்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து உறுப்புரிமை நீக்கப்பட்டவர்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை அடிப்படையாகக்கொண்டே ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக செயற்படுவோரின் உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை சட்டவிரோதமானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தொடுக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது. இத்தீர்ப்பின் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தவர்கள் எவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருக்கமுடியாது என்பது தெளிவாகியிருக்கிறது. அதுமாத்திரமன்றி ஐக்கிய மக்கள் சக்தி என்பது வேறொரு தனிக்கட்சி என்பதும், அது இம்முறை பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகப் போட்டியிடுகின்றது என்பதும் நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக வெளிப்பட்டிருக்கிறது என்றும் அகிலவிராஜ் காரியவசம் தெளிவுபடுத்தலொன்றைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM