(ஆர்.ராம்)
கொள்கைசார்ந்த ஆரோக்கியமான விவாதமொன்றை முன்னெடுப்பதற்கு நான் எப்போதுமே தயாராகவிருக்கின்றேன். அதற்காக சில்லறைகளுடன் விவாதத்தில் ஈடுபடமுடியாது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அதன் யாழ்.தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோர் பொதுவெளியில் விவாதிப்பதற்கு முன்வருவார்களாயின் தாயகத்தின் எப்பகுதியில் அதனை நடத்தினாலும் பங்குகொள்வதற்கு தயாராகவே உள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தமிழ் மக்கள் கூட்டணியின் பங்களிக்கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா மற்றும் தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பகிரங்க விவாதத்திற்கு தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார்.
அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் நான்கு தடவைகள் ஏற்கனவே விவாதம் நடத்தியுள்ள நிலையில் தற்போது நொண்டிச்சாட்டுக்களை முன்வைத்து விவாத மேடையை தவிர்த்துச் சென்றுகொண்டிருப்பதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேசரியிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கொள்கை சார்ந்து விவாதமொன்றுக்கு நான் எப்போதுமே தயாராகவிருக்கின்றேன். என்னுடன் விவாதம் செய்பவர்கள் பொறுப்புக்கூறவல்லவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் நிலைப்பாடுகளுக்கும், கட்சியின் நிலைப்பாடுகளுக்கும் மாறுபட்ட நிலைமை இருக்ககூடாது. அவ்வாறு இரண்டு வேறுவேறுபட்ட தரப்பினருடன் பொதுவெளியில் விவாதம் நடத்துவது பொருத்தமற்றது. சுருங்கக்கூறியின் சில்லறைகளுடன் விவாதிப்பதில் எவ்விதமான பயனுமில்லை.
கேள்வி:- எம்.ஏ.சுமந்திரன் கூட்டமைப்பின் பேச்சாளரல்லவா?
பதில்:- சுமந்திரன் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்தாலும் அவர் கூறுகின்ற கருத்துக்களை பொருட்டாகவே எடுக்கத் தேவையில்லை என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்கள்.
உதாரணமாக கூறுவதாக இருந்தால், தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் தொடர்பாக சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் தேசியத்திற்கு முரண்பாடாக இருந்த நிலையில் மாவை.சேனாதிராஜா அவை அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்றே குறிப்பிட்டார். அதேபோன்று கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களும் சுமந்திரன் பேச்சாளராக இருந்தாலும் அந்தக்கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள் என்றே குறிப்பிட்டன.
அதன்பின்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டும் வரையி;ல் அமைச்சுப்பதவியை பெறுவதில்லை என்பது தமிழரசுக்கட்சியின் கொள்கைத்தீர்மானமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் சுமந்திரன் அமைச்சுப்பதவிகளுக்காக ஆணை கோருகின்றேன் என்று குறிப்பிட்டார். மறுநாளே சம்பந்தன் அவை பற்றி தற்போது பேசவேண்டியதில்லை. அந்தக்கருத்துக்கள் தனிநபர் சார்ந்தது என்று பகிரங்கமாகவே கூறிவிட்டார்.
இவ்வாறான நிலையில், சுமந்திரனின் பலகருத்துக்களை கட்சியின் தலைவர், பங்காளிக்கட்சியின் தலைவர்கள், கூட்டமைப்பின் தலைவர் என்று அனைவருமே புறமொதுக்கப்படுகின்றது.
இந்த நிலையில் விவாதமேடையில் சுமந்திரனால் முன்வைக்கப்படும் விடயங்கள் கட்சிசார்பானவை அல்ல என்று தமிழரசுக்கட்சியோ அல்லது சம்பந்தனோ அடுத்தநொடியே கூறினால் அவருடனான விவாதத்தில் எவ்வித அர்த்தமில்லையென்று தானே பொருள்படும். ஆகவே சம்பந்தனே அனைத்தையும் தீர்மானிப்பவராக இருக்கின்றார்.
அதுபோன்று தான் சிறிகாந்தா விக்கி தலைமையிலான கூட்டணியின் பங்காளிக்கட்சி தலைவர் தட்டுமே. கூட்டணியின் கொள்கை, செல்நெறி உள்ளிட்டவற்றுக்கு பொறுப்புடன் பதிலளிக்க வேண்டியவர் விக்கினேஸ்வரன்.
ஆகவே சம்பந்தன், விக்கினேஸ்வரன் ஆகியோர் தமிழர் தாயகத்தின் எந்தவொரு பாகத்திலும் பொதுவெளியில் விவாதத்திற்கு வருவார்களாயின் அதில் பங்கேற்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியியைப் பொறுத்தவரையில் அதன் தலைவரான நான் எமது நிலைப்பாடுகளை முன்வைக்க தயராகவுள்ளேன். எனது கருத்திற்கும் கட்சியின் கருத்திற்கும் மாறுபட்ட நிலைமைகள் இல்லை என்பதை உறுதியாக கூறமுடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM