Published by T. Saranya on 2020-07-23 10:06:20
கொரோனா வைரஸ் தொற்றிற்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் "நல்ல முன்னேற்றம்" அடைந்துள்ளனர். ஆனால் அவற்றின் முதல் பயன்பாட்டை 2021 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை எதிர்பார்க்க முடியாது என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) நிபுணர் தெரிவித்துள்ளார்.
நியாயமான தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் செயல்பட்டு வருகிறது, ஆனால் இதற்கிடையில், வைரஸின் பரவலை கட்டுப்படுத்துவது முக்கியம் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசரகால திட்டத்தின் தலைவர் மைக் ரியான் கூறியுள்ளார்.
"நாங்கள் நல்ல முன்னேற்றம் அடைகிறோம்," பல தடுப்பூசிகள் இப்போது 3 ஆம் கட்ட சோதனைகளில் உள்ளன. பாதுகாப்பானதாகவும் நோய் எதிர்ப்பு எதிர்வினையைத் தூண்டும் என்ற அடிப்படையில் இதுவரை எதுவும் தோல்வியுற்றதில்லை என தெரிவித்துள்ளார்.
சாத்தியமான தடுப்பூசிகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கும் உலக சுகாதார ஸ்தாபனம் செயல்பட்டு வருகிறது என ரியான் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் இதைப் பற்றி நியாயமாக இருக்க வேண்டும், ஏனென்றால் இது உலகளாவிய நன்மை. இந்த தொற்றுநோய்க்கான தடுப்பூசிகள் செல்வந்தர்களுக்கு அல்ல, அவை ஏழைகளுக்கு அல்ல, அவை அனைவருக்கும் உள்ளன" என்று அவர் கூறினார்.
கொரோனா தடுப்பூசி பைசர் இன்க் மற்றும் ஜேர்மன் பயோடெக் பயோஎன்டெக் ஆகியவற்றால் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டால் 100 மில்லியன் தடுப்பூசிகளை வாங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் 1.95 பில்லியன் டொலர் செலுத்தும் என குறித்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றின் சமூக பரவல் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ரியான் எச்சரித்துள்ளார்.
பல மாநிலங்களில் தொற்றுநோய் பரவியபோதும், கல்வியை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து அமெரிக்காவில் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
"எங்கள் குழந்தைகளை மீண்டும் பாடசாலைக்கு அழைத்து வருவதற்கு நாங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும், மேலும் எங்கள் சமூகத்தில் நோயைத் தடுப்பதே நாங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம்". "ஏனென்றால் நீங்கள் சமூகத்தில் நோயைக் கட்டுப்படுத்தினால், நீங்கள் பாடசாலைகளை திறக்கலாம்." என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.