(ஆர்.யசி)
ஒரு நாட்டிற்குள் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வை நோக்கியே நாம் பயணிக்கின்றோம் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் வலியுறுத்தியுள்ளது. தமிழ் மக்கள் தமது அரசியல் இலக்கு, நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர் என்பதை தெரிவிக்க வேண்டும். அன்று சிங்களவர்களுக்கு தேவைப்பட்ட சமஷ்டி இன்று ஏன் பிடிக்கவில்லை என்பதே எமது கேள்வியாக உள்ளதென தமிழ் தேசிய கூட்டமைபின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கூறினார்.
கிளிநொச்சி முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
எமது அரசியல் இலக்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நாம் தெளிவாக கூறியுள்ளோம். இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தையின் மூலமாக சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தான் எமது அரசியல் தீர்வு அமையும் என்பதையும் சிங்கள மக்களின் முதுகுக்கு பின்னால் எதனையும் செய்யத் தயாரில்லை என்பதையும் , அவர்களும் சர்வசன வாக்களிப்பில் எமக்கு ஏற்ப வாக்களிக்க வேண்டும் அவ்வாறு வரும் தீர்வு தான் பலமான அரசியல் தீர்வாக இருக்கும் என நாம் பல தடவைகைகள் கூறிவிட்டோம். நாம் எந்த திசையில் பயணிக்கின்றோம் என்பது குறித்து மக்களை வீணாக குழப்பம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நானும் சம்பந்தனும் நாட்டினை பிளவுபடுத்த போவதாக கூறுகின்றனர். நாம் நாட்டினை பிளவுபடுத்தவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக இதுவரை செய்துள்ளதை எடைபோட்டு மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டும். நாம் புதிய அரசியல் அமைப்பினை கொண்டுவர கடுமையாக பாடுபட்டோம். எமது முயற்சியினால் இடைக்கால அறிக்கை ஒன்று கொண்டுவரப்பட்டது. அதில் என்ன உள்ளது என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும். சமஷ்டி அலகுகளை நாம் எவ்வாறு உருவாக்க நினைகின்றோம் என்பது அதில் தெளிவாக உள்ளது.
முதலில் அதனை படியுங்கள். அதன் பின்னர் எம்மிடம் கேள்வி கேளுங்கள். சிங்கள மக்களின் இணக்கத்துடன் எவ்வாறு அரசியல் தீர்வை பெறுவது என்பது குறித்து நகர்ந்துள்ளோம் என்பது தெளிவாக தெரியும். இந்த வழிநடத்தல் குழுவில் தமிழ கூட்டமைப்பின் சார்பில் இருவர் மட்டுமே இருந்தோம். அதுமட்டும் அல்ல தென் பகுதி சிங்கள முதலமைச்சர்கள் ஏழு பேரின் முன்மொழிவுகளையும் நாம் உள்ளடக்கியுள்ளோம். ஆனால் இதில் வடக்கு முதலமைச்சர், கிழக்கு முதலமைச்சர்கள் பங்குபற்றவே இல்லை. தென்னிலங்கை முதல்வர்கள் ஏழு பேரும் அதிகார பகிர்வு வேண்டும் எனவும் ஆளுநர் வேண்டாம் எனவும் கேட்டனர்.
எவ்வாறு இருப்பினும் நாம் உருவாக்கிய வரைபை தடுக்க இடை நடுவே ஆட்சியை குழப்பினர். வரைப்பு வந்தால் நாடு பிளவுபடும் என சிங்கள தலைமைகள் எம்மை குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் எமது தரப்பும் எம்மையே குற்றம் சுமத்துகின்றனர். இது ஒற்றையாட்சி, அதற்குள்ளேயே எம்மை முடக்கி விட்டனர் என கூறுகின்றனர். முதலில் அரசியல் அமைப்பு வரைபை தமிழர்கள் படியுங்கள்.
சமஷ்டி என்றால் பிரிவினை என்ற எண்ணம் சிங்கள மக்கள் மத்தியில் உருவாகிவிட்டது. நாம் சமஷ்டி கேட்டால் அது பிரிவினை என்ற பிரசாரம் செய்யப்படுகின்றது. இந்த நாட்டில் சிங்கள தலைமைகளே ஆரம்பத்தில் சமஸ்டியை அறிமுகப்படுத்தினரே தவிர தமிழர்கள் அல்ல. தமிழர்கள் ஆரம்பத்தில் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சிங்கள தலைவர்கள் தமிழர்களை இணக்க அரசியலில் கொண்டுவர முயற்சி எடுத்தனர். ஆனால் தமிழர்கள் இணைக்கவே இல்லை.
முதலாவது சட்ட சபை தேர்தலையே எமது தலைவர்கள் பகிஸ்கரித்தனர். கண்டிய பிரதானிகள் மீண்டும் சமர்டியை கேட்டனர் அப்போதும் எமது தலைவர்கள் வேண்டாம் என்றனர். இலங்கை கொமியுனிச கட்சி ஒரு தீர்மானம் எடுத்தனர், அப்போதும் சமஷ்டி வேண்டும் என்றனர். தொடர்ச்சியாக சிங்கள தலைமைகள் தான் சமஷ்டி என்பதை கேட்டனர்.
ஆகவே அப்போது சிங்கள தலைவர்களுக்கு சரியாக தென்பட்ட சமஷ்டி இப்போது ஏன் தவறாகின்றது என்கின்ற கேள்வியை நாம் சிங்கள தலைமைகளிடம் கேட்கிறோம். அதில் என்ன தவறு உள்ளது. இந்த விடயத்தில் நியாயமாகவும் பக்குவமாகவும் பேசி தீர்க்க வேண்டும். நாம் தனிநாடு கேட்கவில்லை, நாம் நியாயமான கோரிக்கைகளை கேட்கிறோம் என்பதை அவர்களுடம் எடுத்துரைக்க வேண்டும். இதனை நாம் முயற்சிக்கின்ற நேரத்தில் சிங்கள அரச ஊடகங்கள் எம்மை விமர்சித்து பொய்யான செய்திகளை பிரசுரித்து வருகினன்ர்.
பொய்யான செய்திகளை சிங்கள ஊடகங்கள் பரப்பி வருகின்ற நிலையில் அதனையும் நம்பிக்கொண்டு எமது தரப்பு காவித் திரிகின்றார். இதுதான் கவலைக்கிடமான விடயமாகும். வருகின்ற ஆட்சி எப்படி அமைப்பும் என்பது எமக்கு நன்றாக தெரியும். அவர்கள் யாராக இருந்தாலும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவ படுத்தும் தலைமைகள் இன்றும் ஒரே நோக்கத்தில் ஒரு கொள்கையில் உள்ளனர் என்பதை பறைசாற்ற வேண்டிய கடமை தமிழ் மக்களின் கைகளில் உள்ளது.
தமிழ் மக்கள் தமது அரசியல் இலக்கு, நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர் என்பதை தெரிவிக்க வேண்டும். 20 ஆசனங்களுடன் நாம் பாராளுமன்றத்திற்கு செல்லும் போது அவர்களுக்கு 100 ஆசனங்களாக தென்படும். அந்த பலத்தை எமக்கு வழங்குவதற்கு தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும். அரசியல் பலத்தை உருவாக்க வேண்டியது மக்களின் பொறுப்பு. நாம் பலத்தை கேட்பது எமக்காக அல்ல உங்களுக்காக என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
மீண்டும் எமது அடையாளங்களை நாம் காண்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் தமிழர்கள் சுதந்திரமாக சுவாசிக்க கூடிய சூழல் இருந்தது. அடக்குமுறை ஆட்சியில் இருந்து எமது ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய சூழல் உருவாகியது. இராணுவம் கையகப்படுத்தி இருந்த நிலங்கள் பல விடுவிக்கப்பட்டது.
இன்னமும் பல நிலங்களை விடுவிக்கப்பட வேண்டியுள்ளது, இன்று மீண்டும் அபகரிப்பு இடம்பெற்று வருகின்றது. ஆனால் அன்று உயர் பாதுகாப்பு வலயமாக கூறியஇடங்களில் 80 வீத காணிகள் விடுவிக்கப்பட்டது. அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கேள்வி எழுப்பும் அன்பர்கள் பெரும்பான்மை கைதிகள் விடுவிக்கப்பட்டது தெரியாது கேட்கின்றனரா என்ற கேள்வி எம்மிடம் உள்ளது. பலர் விடுவிக்கப்பட்டனர், எஞ்சியுள்ள அரசியல் கைதிகள் குறித்து இந்த ஆட்சியாளர்களிடமும் நாம் பேசியுள்ளோம். அவர்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 84 பேரின் பெயர்களை சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகளை நான் பார்த்தேன். அந்த முயற்சி கைவிடவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM