(நா.தனுஜா)
நாட்டில் மீண்டும் அதிகரித்திருக்கும் கொரோனா வைரஸ் பரவல் நிலைக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். ஆரம்பத்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் பெரும் எண்ணிக்கையில் பரிசோதனைகளை முன்னெடுப்பது அவசியமென ரணில் விக்கிரமசிங்க கூறியபோது, அதனை ஆளுந்தரப்பினர் கேலிக்குட்படுத்தினார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. எனவே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததும் அரசாங்கம் தமது பொதுத்தேர்தல் பிரசாரக்கூட்டங்களை நிறுத்தத்தேவையில்லை. மாறாக இதனைக் கட்டுப்படுத்த முடியாத தமது தோல்வியை ஏற்றுக்கொண்டு உடனடியாகப் பதவி விலகவேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
தற்போதைய அரசாங்கம் 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரையில் அரச ஊழியர்களின் நலன் மற்றும் உரிமைகள் தொடர்பில் சற்றேனும் கவனம் செலுத்தவில்லை. எனினும் நாம் 2015 இந்நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கி அரச ஊழியர்களின் ஊதியத்தை அதிகரித்ததுடன், ஓய்வூதியக் கொடுப்பனவிலும் அதிகரிப்பை ஏற்படுத்தினோம். அவர்களது உரிமைகளை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம். அரச ஊழியர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செயலாற்றக்கூடிய சூழலை ஏற்படுத்தும் நோக்கில் சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தோம்.
ஆனால் தற்போது மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய அரசாங்கம், அரச ஊழியர்களின் நலனை முன்னிறுத்தி எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து செயற்திட்டங்களையும் இடைநிறுத்திவிட்டது. அவ்வாறிருக்க 'நல்லாட்சி அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்ட திட்டங்களை செயற்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுத்தருமாறு கோருகின்றார்கள். நாம் ஆரம்பித்தவற்றைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல இயலாதவர்கள் இவ்வாறு கோருவது வேடிக்கையாக இருக்கிறது. அரச ஊழியர்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அவற்றைப் பூர்த்தி செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் மாத்திரமே இயலும் என்பதால், இம்முறை பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பில் அவர்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டியது அவசியமாகும்.
அடுத்ததாக அரச ஊழியர்களின் ஊதியத்தை அதிகரித்தல் உள்ளிட்ட செயற்திட்டங்கள் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினாலேயே முன்னெடுக்கப்பட்டது. அப்போது பொதுநிர்வாக சேவைகள் அமைச்சராகப் பதவிவகித்த கரு ஜயசூரியவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைவாகவே ஊதியக்கொடுப்பனவில் அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும் இவற்றைத் தாம் செய்ததாகக்கூறி, பத்திரிகைகளில் விளம்பரங்களைப் பிரசுரித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வாக்குகளைக் கோருகிறார். சிறிதளவேனும் தலைமைத்துவப் பண்புகளின்றி இவ்வாறு செயற்படுவதற்கு அவர் வெட்கமடைய வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM