மீண்டும் சிக்கலாகும் ஜெனிவா களம்

05 Jul, 2020 | 11:14 PM
image

-கார்வண்ணன்

ஜெனிவாவில் கடந்த வாரம் ஆரம்பித்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 44 ஆவது கூட்டத் தொடரின் தொடக்க நாளிலேயே, இலங்கை விவகாரம் கவனிப்புக்குரியதாக  ஒன்றாக மாறியிருந்தது.

Opening statement by HC Michelle Bachelet at 44th session of the ...

பேரவையின் 44 ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார், கொரோனா பரவல் சூழலை வைத்து முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை களங்கப்படுத்துகின்ற, வெறுப்பை தூண்டுகின்ற செயற்பாடுகள் இலங்கையிலும் இந்தியாவிலும் இடம்பெறுவதாக குறிப்பிட்டிருந்தார்.

அவர், இலங்கை தொடர்பாக வேறெந்தக் கருத்தையும் வெளியிடாத போதும், இலங்கை தொடர்பான தீர்மானத்தை பேரவையில் நிறைவேற்றிய இணை அனுசரணை நாடுகள், தமது உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கின்றன.

பிரித்தானியா கனடா, ஜேர்மனி.  வடக்கு மசிடோனியா, மொன்ரனிக்ரோ ஆகிய இணை அனுசரணை நாடுகளின் சார்பில், மனித உரிமைகளுக்கான பிரித்தானியாவின்  சர்வதேச தூதுவர் ரிட்டா பிரெஞ்ச்,  உரையாற்றிய போதே இந்த உறுதியை வெளியிட்டுள்ளார்.

UK appoints human rights envoy to mend image amid ties with 'every ...

30/ 1 தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்ளும் இலங்கை அரசாங்கத்தின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், ஆனாலும், குறித்த தீர்மானத்தின் இலக்குகளான பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், அமைதி ஆகியவற்றை அடைவதற்கு தொடர்ந்தும் பாடுபடப்   போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள , ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில்,  இலங்கை விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கவுள்ள சூழலில், தான், இணை அனுசரணை நாடுகள் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கூறியிருக்கின்றன.

இலங்கை அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை மீளாய்வு செய்யும் அறிக்கையை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில்,  ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிப்பார்.

அதற்குப் பின்னர் நடக்கவுள்ள விவாதமும், அடுத்து என்ன என்று எடுக்கப்படும் முடிவும், 46 ஆவது கூட்டத்தொடருக்கு கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OHCHR | HRC Home

ஜெனிவா தீ்ர்மான அனுசரணையில் இருந்து விலகி விட்டதாக தற்போதைய அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், ஜெனிவா கூட்டத்தொடரில் எவ்வாறான முடிவு எடுக்கப்படும் என்பது இன்னமும் தெளிவற்றதாகவே இருக்கிறது.

ஆனால், இணை அனுசரணை நாடுகள் வெளிப்படுத்தியிருக்கின்ற கருத்துக்கள், தொடர்ந்தும் இலங்கை விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதைக் காட்டியிருக்கிறது.

அவ்வாறாயின், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்படும் சூழல் தென்படுகிறது.

அவ்வாறான தீர்மானம் முற்றிலும் வேறுபட்டதொரு சூழலிலேயே கொண்டு வரப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் இணங்காத ஒன்றாகவும், அதேவேளை, சர்வதேச சமூகத்தினால் கடும் போக்குடனும் முன்னெடுக்கப்படக் கூடிய சாத்தியங்கள்  கொண்டதாகவும் அது இருக்கலாம்.

இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் நாடுகள், சர்வதேச அமைப்புகளில் இருந்து வெளியேறுவதற்குக் கூட தயங்கப் போவதில்லை என்று, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அண்மையில் கூறியிருந்தார்.

Defence re-defined: The military as first resort | Daily FT

கடந்த மே 19ஆம் திகதி நடந்த போர் வெற்றி நாள் நிகழ்வில் படையினருக்கும் சிங்கள மக்களுக்கும் உற்சாகமூட்டும் வகையில் அவர் அந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அழுத்தங்களைக் கொடுக்கும் சர்வதேச அமைப்புகளில் இருந்து விலகவும் தயங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி எச்சரித்தது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையை மையப்படுத்தியே என்பதில் சந்தேகம் இல்லை.

ஏனென்றால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மூலம் தான், கடந்த  8 ஆண்டுகளாக இலங்கை தொடர்பான தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஜெனிவா அழுத்தங்களை முன்வைத்தே தற்போதைய அரசாங்கம் அரசியல் பிழைப்பும் நடத்தி வருகிறது.

இந்த அழுத்தங்களை பூதாகாரமானதாக காண்பித்து, சிங்கள மக்களுக்கு பீதியூட்டி வருகிறது. இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப் போவதில்லை என்றும் காண்பித்து வருகிறது.

இது வாக்குகளை சுருட்டுவதற்கான ஒரு உத்தியாகவும் இருந்து வருகிறது.

இவ்வாறான ஒரு நிலையில், அடுத்த மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடர் நடக்கும் போது இலங்கையில் புதிய அரசாங்கமே பதவியில் இருக்கப் போகிறது.

தற்போதைய அரசாங்கம் பலமான ஒன்றாக ஆட்சியமைத்தால், ஜெனிவாவில் கடுமையான எதிர்ப்புக்களைத் தெரிவிக்கும்.

தமக்கு கிடைத்த மக்கள் ஆணையைக் காண்பித்து, ஜெனிவாவை மிரட்டும். ஜேனிவா பேரவையில் இருந்து  விலகிக் கொள்வதாக அறிவித்தாலும் ஆச்சரியமில்லை.

US Presidential Election 2020: Joe Biden ahead than Trump ...

அதேவேளை, இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்து உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாக கூறியுள்ள இணைத் தலைமை நாடுகள், அவ்வளவு பலம் வாய்ந்தவை என்று கூற முடியாது. 2012இல், அமெரிக்காவின் பின்புலத்துடன் தான் ஜெனிவா களம் திறக்கப்பட்டது.

இப்போது அமெரிக்கா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறி விட்டது. இது இலங்கைக்கு சாதகமான ஒன்று தான். ஆனாலும் இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் என்றில்லை.

ஏனென்றால், அமெரிக்காவில் வரும் நொவம்பர் மாதம் நடக்கப் போகும் ஜனாதிபதி தேர்தலில்,  தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவது கடினம் என்றே தகவல்கள் கூறுகின்றன.

ஜோ பிடன் தான் வெற்றி பெறுவார் என்று வெறுப்புடன் கூறியிருக்கிறார் ட்ரம்ப் . அவரது குடியரசுக் கட்சி இலங்கை விவகாரத்தில் எப்போதுமே நீக்குப் போக்காகத் தான் இருந்து வந்திருக்கிறது. குடியரசுக் கட்சி ஆட்சிக்காலத்தில் தமிழர் தரப்புக்கு சாதகமான எதுவும் நடந்ததுமில்லை.

ஆனாலும், ஜெனிவா விடயத்தில் முன்வைத்த காலை அமெரிக்கா பின் வைக்கவில்லை.

ஜனநாயக கட்சி தான் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களைக் கொண்டு வருவதில் உறுதியாக இருந்தது. அந்தக் கட்சின் வேட்பாளராக களமிறங்கும், ஜோ பிடன் வெற்றி பெற்றால், இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் கொள்கைகளில் இறுக்கம் ஏற்படக் கூடும்.

அதுமாத்திரமன்றி, ட்ரம்பின் குடியரசுக் கட்சி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகியே இருக்கிறது. ஆனால் ஜனநாயக கட்சி ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்திருப்பதை விரும்புகிறது. 

ஜனவரியின் ஜோ பிடன் பதவியேற்றாலும் கூட, உடனடியாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா இணையும் வாய்ப்புகள் இல்லை. என்றாலும், இலங்கை விவகாரத்தில் தீர்க்கமான முடிவை எடுக்க முற்படக் கூடும்.

இது, வரும் மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத் தொடர் இலங்கைக்கு நெருக்கடியானதாக மாறலாம்.

இலங்கை அரசாங்கம் இறுக்கமான போக்கில் இருப்பதும், அமெரிக்காவில் நிகழக் கூடிய மாற்றங்களும், இலங்கைக்கு சாதகமான சூழல் ஜெனிவாவில் இருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

அது இலங்கைக்கு சாதகமானதாக இல்லாத அந்தக் களத்தை தமிழருக்கு சாதகமானதாக மாற்றுவது தான் சிக்கலானது. அதனை தமிழர் தரப்பு எவ்வாறு செய்யப்போகிறது?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04