காணாமல் போனோர் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இராணுவ தளபதி ஆகியோர் ஒரே விதமான கருத்தை தெரிவித்து வருகின்ற போதிலும் காணாமல்போனவர்களின் உறவினர்களின் துயரம் தீர்ந்தபாடில்லை.
இராணுவ தளபதி சவேந்திர சில்வா அண்மையில் காணாமல் போனவர்கள் யுத்தத்தின் போது மரணித்து இருக்கலாம் என்று கூறியிருந்தார் . அவ்வாறானால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் மற்றும் சரண் அடைந்தவர்களுக்கு என்னவானது என்று அவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் இராணுவத்திடம் சரணடைந்தோர் கையளிக்கப்பட்டோர் தொடர்பில் இராணுவ தளபதி அல்ல ; அரசே பொறுப்பு கூறவேண்டும் . தமிழீழ விடுதலை புலிகளின் போராளிகள் உட்பட பலர் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தனர். விடுதலைப் புலிகள் போராளிகளின் உறவினர்களால் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களும் பலர் இருந்தனர் .
இதற்கான சாட்சியங்களும் இருந்தன. அவ்வாறு சரணடைந்தவர்கள் தற்போது இல்லை என எவ்வாறு கூறமுடியும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கேள்விஎழுப்பியுள்ளார்.
இந்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் ஒன்றிணைந்து இலங்கையை சர்வதேச நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தக்கோரி வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர் .
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கள் உறவுகளுக்கான நீதி எங்கே?. சர்வதேச நீதி வழங்கப்பட வேண்டும். இலங்கையில் போர்க்குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் மற்றும் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர் .
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் ஊடகங்களின் பிரதானிகளை சந்தித்து உரையாடிய சமயம் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், காணாமல் போனவர்கள் மீண்டும் திரும்பவில்லை என்றாலோ உலகின் எந்த ஒரு பகுதியிலும் இல்லை என்றாலோ அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதே அர்த்தம் என குறிப்பிட்டிருந்தார் .
எவ்வாறு இருந்த போதிலும் எழுந்தமானமாக அன்றி காணாமல் போனவர்களுக்கு உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிந்து கொள்வதில் அவர்களின் உற்றார் உறவினர்கள் மிகுந்த கரிசனையில் உள்ளனர் .
இவ்வாறு காணாமல் போனவர்களுக்கு உண்மையில் நடந்தது என்ன என்பதை அறியாத வரையில் அவர்களது துயரங்கள் தீரப் போவதில்லை என்பதே யதார்த்தம்.
குறிப்பாக தங்கள் பிள்ளைகள் கணவன்மார் மற்றும் உற்றார் உறவினர்களை தொலைத்துவிட்டு ஆண்டாண்டு காலமாக கண்ணீர் சிந்தி தேடியலையும் அவர்களின் துயரத்தை ஒற்றை வார்த்தையில் கூறி தேற்றிவிட முடியாது என்பதே யதார்த்தம்.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM