(எம்.மனோசித்ரா)
பொதுத் தேர்தலின் பின்னர் ஜனநாயகத்திற்கு முரணான ராஜபக்ச குடும்ப ஆட்சியில் நாடு சிக்கிக் கொள்ளாமல் தடுக்க வேண்டும். ஐக்கிய தேசிய கட்சிக்கு தற்போது அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் நோக்கம் கிடையாது. எனவே பாராளுமன்றத்தில் மக்களின் உரிமை மீறப்படும் போது அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு தேசிய மக்கள் சக்தியை வலுப்படுத்த மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்தார்.
தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் தற்போது பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் வீழ்ச்சியடைந்துள்ளன. அதற்கு பதிலாக ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்சவும், பிரதமராக மஹிந்த ராஜபக்சவும், பல முக்கிய அமைச்சுக்களை தன்வசம் கொண்டுள்ள அமைச்சராக சமல் ராஜபக்சவும் , ஜனாதிபதியால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள முக்கிய ஜனாதிபதி செயலணிகளின் பிரதானியாக பசில் ராஜபக்சவும் கொண்ட குடும்பம் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இது ஜனநாயக ஆட்சி கிடையாது. எனவே மேலும் காலம் தாழ்த்தாமல் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் தேர்தல் நடத்தப்படும் அதே வேளை மூன்று பிரதான காரணிகளில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். தேர்தலைக் காரணம் காட்டி எந்தவொரு பிரஜையும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகக் கூடாது, அதே போன்று தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகளின் உயிருக்கு எந்த சந்தர்ப்பத்திலும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடாது மற்றும் அரசியல்வாதிகளுக்கு பிரசாரங்களின் ஊடாக தமது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு சாதாரண சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே அந்த மூன்று காரணிகளாகும். இந்த காரணிகளை கவனத்தில் கொண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
மேலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு தற்போது மக்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துவதில் நேரம் இல்லை. மாறாக ரணில் - சஜித் தலைமைத்துவம் தொடர்பிலான பிரச்சினையும் சிறிகொத்தாவை யார் கையகப்படுத்திக் கொள்வது என்ற குறுகிய அரசியல் நோக்கமே அவர்களிடம் காணப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்தலில் யுத்தத்தை நிறைவு செய்து நடத்தப்பட்ட தேர்தலில் 18 இலட்சத்துக்கும் அதிக வாக்கு வித்தியாசத்தில் ராஜபக்ச அரசாங்கம் வெற்றி பெற்ற போதிலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் 20 உறுப்பினர்கள் அதற்கு உதவி செய்தனர். அதே போன்ற அச்சுறுத்தல் தற்போதும் காணப்படுகிறது.
எனவே ஐக்கிய தேசிய கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதற்கு பதிலாக அதே வழியில் பயணிக்கும் கட்சியாகவே காணப்படும். இவ்வாறானதொரு நெருக்கடி நிலைமையிலேயே பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் நாம் தேசிய மக்கள் சக்தியாக பலமான கூட்டணியாகக் களமிறங்கியுள்ளோம். எனவே நாம் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். பாராளுமன்றத்தில் மக்களின் உரிமைகள் மீறப்படுகின்ற போது அந்த உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற அமைப்பாக தேசிய மக்கள் செயற்படும். அதற்கான பலமான கட்சியாக நாம் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.
பாராளுமன்றம் தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனம் நிலவுகின்றது. நாட்டில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் போது அது பாராளுமன்றத்தை பாதிக்க வேண்டும் என்று மக்கள் பிரார்த்திக்கும் நிலைமையே காணப்படுகிறது. பாராளுமன்றத்தின் கொள்கையை மதிப்பவர்கள் இல்லாமை, பாராளுமன்றத்திற்கு உரிய கௌரவம் வழங்கப்படாமை மற்றும் ஊழல் மோசடிக்காரர்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும். இவற்றை சரி செய்ய தேசிய மக்கள் சக்தியின் பலமான குழு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM