வில்லியாகும் ரோஜா

06 Jun, 2020 | 08:30 PM
image

அரசியல்வாதியும், நடிகையுமான திருமதி ரோஜா செல்வமணி, சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் திரைப்படமொன்றில் வில்லியாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.

‘செம்பருத்தி’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரோஜா. இதுவரை தமிழில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

திரைப்படம் மட்டுமல்லாமல் சின்னத்திரை என்று அழைக்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் கடைசியாக 2015ஆம் ஆண்டில் வெளியான ‘என் வழி தனி வழி’ என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிக்காமல் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி, தற்போது ஆந்திர மாநிலத்தில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

இதுதொடர்பாக நடிகை ரோஜா பேசுகையில்,“ அல்லு அர்ஜுன் நடிப்பில் தயாராகும் ‘புஷ்பா’ படத்தின் கதையை இயக்குனர் சுகுமார் எம்மிடம் விவரித்தார். கதை பிடித்துப் போனதால் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறேன்.” என்றார். இதன் மூலம் திரையுலகில் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிகை ரோஜா நடிக்கவிருக்கிறார். ஆனால் படத்தில் அவர் கொடூரமான வில்லி வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இப்படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘இளைஞர்களின் கனவு தேவதை’ ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் புஷ்பா படத்தின் மூலம் ஒரே தருணத்தில் இந்தியா முழுவதம் நடிகை ரோஜா வில்லியாக அறிமுகமாகிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right