(ஆர்.யசி)
காலம்சென்ற முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவை அடுத்து மலையகம் எங்கும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதுடன் சகல இடங்களிலும் வெள்ளைக்கொடிகள் பறக்கவிட்டு துக்கதினமும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றனர்.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளை பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதுடன் இறுதிக்கிரியை எதிர்வும் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு அரச மரியாதையுடன் நோவூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ளது.
நேற்று இரண்டு உதியோகபூர்வ சந்திப்புகளை மேற்கொள்ளவும், இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளவும் கொழும்பிற்கு வருகை தந்த ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் நேற்று இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவையும் சந்தித்து பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றிருந்தார்.
நிலையில் நேற்று பிற்பகல் அவரது கொழும்பு இல்லத்தில் வைத்து திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரழந்த நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நேற்று இரவு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே செய்தி அறிந்து பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அமைச்சர்கள் பலர் வைத்தியசாலை வளாகத்தில் குவிந்தனர்.
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர் என்ற ரீதியிலும், மலையக அரசியலில் மிக முக்கிய நபர் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் அனுதாபங்களும் நேற்று இரவு தொடக்கமே சமூக வலைத்தளங்களிலும் முகப்புத்தகங்களில் பதியப்பட்டவண்ணமே இருந்தது.
கொழும்பில் பிரபுகர்கள் அஞ்சலி
இந்நிலையில் அவரது பூதவுடல் இன்று காலை பொரளை தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்ட அதே வேலை பிற்பகல் பொரளை தனியார் மலைசாலையில் இருந்து பொலிஸ் பாதுகாப்புடன் பத்தரமுல்லயில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இன்று காலை தொடக்கம் அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெவ்வேறு துறைசார் பிரமுகர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பலர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிற்பகல் அவரது இல்லத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அஞ்சலி செலுத்த சென்றிருந்தார்.
இலங்கையிலும் சர்வதேசத்தில் இருந்தும் அனுதாப அறிக்கைகள்
அதேவேளை அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறப்பை அடுத்து ஜனாதிபதி, பிரதமர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என அனைவரும் தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.
மூத்த அரசியல் தலைவர்கள் பலர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்ற உருக்கமான வார்த்தைகளை தெரிவித்துள்ள நிலையில் இந்திய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட இந்திய அரசியல் பிரமுகர்கள் தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.
இந்திய ஊடகங்களில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மரணம் குறித்து பல்வேறு அனுதாப செய்திகள் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மலையகம் எங்கும் சோகமயம்
இந்நிலையில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறப்பை அடுத்து மலையகத்தில் சகல பகுதிகளிலும் மக்கள் ஆழ்ந்த துயரில் ஆழ்ந்துள்ளனர். மலையகம் எங்கும் துக்க தினமாக வெள்ளை மற்றும் கறுப்புக் கொடிகளை தொங்கவிட்டுள்ளதுடன் கட்சி அலுவலகங்கள் எங்கும் அரைக்கம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. மலையகத்தில் கட்சி வேறுபாடுகள் மறந்து மக்கள் அனைவரும் துக்க தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர். மலையகத்தை சேர்ந்த ஏனைய அரசியல் தலைவர்களும் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இழப்பை அடுத்து தமது ஆதரவாளர்களை வெள்ளை மற்றும் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு துக்கத்தை அனுஷ்டிக்க வலியுறுத்தியுள்ளனர். பல்வேறு பகுதிகளில் மக்கள் வேலை நிறுத்தங்களை செய்துள்ளனர். அத்துடன் மலையக தொழிற்சங்கங்கள் அனைத்துமே துக்க தினத்தை அனுஷ்டித்து கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டுள்ளனர்.
இறுதிக்கிரியைகள்
இந்நிலையில் நாளைய தினம் அவரது பூதவுடல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. காலை 10.45 தொக்கம் 11.30 மணி வரையில் அவரது பூதவுடல் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைக்கப்படும்.
இந்த அஞ்சலி நிகழ்விற்கு முன்னாள் சபாநாயகர், ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற அதிகாரிகள் என சகலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
பின்னர் கொழும்பு ஆனந்த குமாரசிறி மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான "சௌமிய பவனி " இல் இன்றைய நாள் முழுவதும் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
நாளை மறுதினம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கொழும்பில் இருந்து அன்னாரின் பூதவுடல் எடுத்து செல்லப்பட்டு கம்பளை, புசல்லாவை வழியாக ரம்பொடை வேலண்டைனில் அமைந்துள்ள அவரது பூர்வீக இல்லதில் மக்கள் அஞ்சலிக்காக அவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு ரம்பொடை வேலண்டைன் இல்லத்தில் இருந்து லபுக்களை, நுவரெலியா, நானுஓய, லிந்துல, தலவாக்கலை வழியாக கொட்டைகளை சி.எல்.எப் வளாகத்தில் அஞ்சலிக்காக பூதவுடலை வைக்கவுள்ளனர்.
எதிர்வரும் ஞாயித்துக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் கொட்டைகளை சி.எல்.எப் வளாகத்தில் இருந்து ஹட்டன் டிக்கோயா வழியாக நோவூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கிற்கு பூதவுடல் எடுத்து செல்லப்பட்டு பிற்பகல் 4 மணிக்கு இறுதிக்கிரியைகள் அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளது.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் பயணம்
1990 ஆம் ஆண்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் 1993ஆம் ஆண்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராகவும் 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் பதவியேற்றார். இந்நிலையில் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவின் பின்னர் 2000ஆம் ஆண்டில் காங்கிரஸின் தலைவராக இவர் பதவியேற்றார்.
இதேவேளை 1994 ஆம் ஆண்டில் முதற் தடவையாக பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கி 74,000 வாக்குகளைப்பெற்று வெற்றிப் பெற்றிருந்த ஆறுமுகன் தொண்டமான் அதன் பின்னரான அனைத்து பாராளுமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றது மாத்திரமின்றி மலையகத் தமிழ் பிரதிநிதிகளில் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவர் என்ற பெருமையும் இவர் கொண்டுள்ளார்.
அத்துடன் தனது பாராளுமன்ற காலத்தில் 1996ஆம் ஆண்டு உருவான அரசாங்கத்தில் கால்நடை அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராகவும் அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராகவும் அதனை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு இளைஞர் வலுவூட்டல் அமைச்சராகவும், 2010 ஆம் ஆண்டு கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றிருந்ததுடன் தற்போதைய அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக படங்களுக்கு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM