பாராளுமன்றமின்றி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது : ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் ஒத்துழைப்பு அவசியம் - மைத்தி

19 May, 2020 | 08:26 PM
image

(எம்.மனோசித்ரா)

கொரோனா நிலைமையைக் கருத்திற் கொண்டு சுகாதார விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் பொதுத் தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றத்தைக் கூட்டுவது அவசியமாகும்.

பாராளுமன்றம் கூட்டப்படாமல் நாளுக்கு நாள் காலம் தாழ்த்தப்படுவதானது நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சிறந்ததல்ல.

தேர்தல் காலம் தாழ்த்தப்படும் போது நாட்டில் காணப்படும் அனைத்து பிரச்சினைகளும் நெருக்கடிகளும் மேலும் அதிகரிக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மேலும் பாராளுமன்றம் இன்றி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. தற்போது நாட்டில் காணப்படும் பொருளாதாரம், அரசியல் மற்றும் வெவ்வேறு பிரச்சினைகளுக்கு ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,  

நாட்டில் காணப்படும் பொருளாதாரம், அரசியல் மற்றும் சுகாதார நிலைவரம் என்பன தொடர்பில் மத்திய குழு கூட்டத்தில் கவனம் செலுத்த வேண்டியது எமது பொறுப்பாகும்.

அத்தோடு அரசாங்கத்தை பலப்படுத்துவதற்காகவும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தல் என்பவை தொடர்பில் எமக்குள்ள பொறுப்பு மற்றும் பணிகள் பற்றியும் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது.

பிரதானமாக நாட்டில் தற்போது வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம்,விசேட சுகாதார நிபுணர்கள் தலைமையிலான சுகாத்துறையினர், முப்படையினர், பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகள் வழங்கும் ஒத்துழைப்பு பிரதானமானதாகும்.

நாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற ரீதியில் அரசாங்கத்திற்கும் ஏனைய அனைத்து துறையினருக்கும் தனிப்பட்ட ரீதியில் கௌரவத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். நாட்டில் சீரற்ற காலநிலை ஏற்பட்டுள்ளதால் அனைத்து துறைகளும் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனினும் காலநிலை வழமைக்கு திரும்பியதன் பின்னர் அரசாங்கத்தால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு நாட்டுக்குத் தேவையான உள்நாட்டு உணவு உற்பத்திகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கட்சி என்ற ரீதியில் நாம் சுயாதீனமாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களால் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டன.

எனினும் அதனை விட பாரதூரமான வகையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையும் சர்வதேசமும் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளன. தற்போது உலக பொருளாதாரம் திடமான நிலையில் இல்லை என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சர்வதேசத்தின் உதவியுடன் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு சுதந்திரக் கட்சி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு உதவ தாயாரகவுள்ளது.

தற்போது பிரதானமாக பாராளுமன்றம் மற்றும் பொருளாதாரம் பற்றி பரவலாகப் பேசப்படுகிறது. சு.கவின் தனிப்பட்ட நிலைப்பாடானது தேர்தல் பற்றிய பிரச்சினையை விடவும் பாராளுமன்றத்தின் பொறுப்பு மற்றும் அரசியலமைப்பிற்கமைய நாட்டை ஆட்சி செய்தல் என்பவற்றிக்காக பாராளுமன்றத்தின் கடமைகள் என்பவற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாராளுமன்றம் இன்றி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. தற்போது நாட்டில் காணப்படும் பொருளாதாரம், அரசியல் மற்றும் வெவ்வேறு பிரச்சினைகளுக்கு ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் ஒத்துழைப்பு அவசியமாகும்.

தற்போது கொரோனா நிலைமையைக் கருத்திற் கொண்டு சுகாதார விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் பொதுத் தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றத்தைக் கூட்டுவது அவசியமாகும்.

பாராளுமன்றம் கூட்டப்படாமல் நாளுக்கு நாள் காலம் தாழ்த்தப்படுவதானது நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சிறந்ததல்ல. தேர்தல் காலம் தாழ்;த்தப்படும் போது நாட்டில் காணப்படும் அனைத்து பிரச்சினைகளும் நெருக்கடிகளும் மேலும் அதிகரிக்கும். எனவே தேர்தல் நடத்தப்படுவது மிகவும் அவசியமானதாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது 'ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன' என்ற கூட்டணியாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைய தேர்தலில் ஜனாதிபதிக்கு பாரிய வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

அதே போன்று பாராளுமன்றத் தேர்தலின் போது ஒன்றாக போட்டியிட்டு பெரும்பான்மையைப் பெறுவோம் என்பது எமது எதிர்பார்ப்பாகும். சுமார் 5 வருடங்கள் ஜனாதிபதியாக பதவி வகித்த போது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நான் செயற்பட்டது பாராளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் அல்ல. அதற்குள் அரசாங்கம் மற்றும் நாட்டினுள் பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டன. இவ்வாறு கடந்த காலத்தில் ஏற்பட்ட குழப்பமான நிலைமைகள் நினைவில் உள்ளன.

எனவே அரசியல் ஸ்திரத்தன்மைக்குள் தற்போதைய ஜனாதிபதி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அத்தியாவசியமானதாகும். இன்று எமது தேசிய வீரர்கள் தினமாகும். தமது அர்ப்பணிப்பினால் இது போன்றதொரு தினத்தில் யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்த வீரர்கள் அனைவரையும் இந்த சந்தர்ப்பத்தில் நாம் நினைவு கூறுகின்றோம். அதே போன்று தற்போதும் வீரர்கள் சுகாதாரத்துறையினருடன் இணைந்து பாடுபடுகின்றனர். அவர்கள் மேலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி,

கேள்வி : தேர்தல் தொடர்பான பிரச்சினைக்கு நீதிமன்றத்தை நாடுவதனூடாக தீர்வு காண முடியாதா? சர்வதேச ஒப்பந்தங்கள் பற்றியும் தற்போது பேசப்படுகிறது. இவை தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில் : கொரோனா வைரஸ் பரவல் எந்தளவிற்கு அபாயகரமானது என்பதை முழு உலகமும் புரிந்து கொண்டுள்ளது. எதிர்கட்சி தற்போது செய்ய வேண்டியதானது அதனை ஒழிப்பதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி அரசாங்கத்துடன் செயற்படுவதாகும். இந்த சந்தர்ப்பத்தில் செய்ய வேண்டியதானது வழக்கு தொடராமல் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி பொதுத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகும்.

நான் ஜனாதிபதியாகப் பதவி வகித்த போது சிங்கப்பூர் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். அதில் கையொப்பமிடப்பட்ட போதிலும் நடைமுறைப்படுத்துவது நிறுத்தப்பட்டது. எம்.சி.சி. ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்களுக்கு நான் இடமளிக்கவில்லை. புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அந்த ஒப்பந்தங்களுடன் தொடர்புபட்ட நாடுகளிடம் நான் தெரிவித்திருக்கின்றேன். நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையும் சர்வதேச ஒப்பந்தங்களை தற்போதைய அரசாங்கம் புறக்கணிக்கும் என்று நான் நம்புகின்றேன்.

கேள்வி : பெருமளவில் கடன் பெற்று கிரிக்கட்டினை மேம்படுத்துவது தொடர்பில் பேசப்படுகிறது. இந்த நிலைமையை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்? உங்களுக்கு 25 வருடங்கள் செல்லும் வரை ஹிங்குராங்கொட மைத்தானத்தை புனரமைக்க முடியாமல் போனது என்றும் கூறப்படுகின்றதே ?

பதில் : கிரிக்கட்சி கட்டுப்பாட்டு சபையானது பொலன்னறுவை கிரிக்கட் மைதானத்தை நிர்மாணிக்க ஆரம்பித்தது 1950 களிலாகும். இது வரையில் அது நிறைவு செய்யப்படவில்லை. சர்வதேச மட்டத்திலான கிரிக்கட் மைதானமொன்று அத்தியாவசியமானதாகும். அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டுக்குத் தேவையான மைதானத்தை நிர்மாணிக்க வேண்டும். இதன் பின்புலம் பற்றி என்னிடம் போதிய தகவல்கள் இல்லை.

கேள்வி : கட்சி உறுப்பினர்களுக்கு கூட்டணிக்குள் தேர்தலில் போட்டியிட பரிந்துரைக்கப்படவில்லை என்ற பிரச்சினை உண்டல்லவா?

பதில் : அனைத்து கட்சிகளிலும் வேட்புமனு தாக்கல் தொடர்பில் பிரச்சினைகள் இருக்கும். எதிர்காலத்தில் அவ்வாறானவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47