(எம்.எப்.எம்.பஸீர்)
2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், அது சார்ந்த இடையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க அம்மனுக்கள் நாளை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நாளை முற்பகல் 10.30 மணிக்கு உயர் நீதிமன்றில் ஐவர் கொண்ட நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் இவ்வாறு பரிசீலனைக்கு தலைமையில், நீதியரசர்களான விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார, சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்பே இந்த மனுக்கள் பரிசீலனைச் செய்யப்படவுள்ளன.
நாளையும், நாளை மறுதினமும் இம்மனுக்களை பரிசீலனை செய்ய ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 11 ஆம் திகதி திங்களன்று, சட்டத்தரணி சரித்த குணரத்ன, சட்டத்தரணி இப்பத் சஹாப்தீன் ஊடாக தாக்கல் செய்த எஸ்.சி.எப்.ஆர்.83/2020 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு வந்தது.
அம்மனு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனும், அதனை ஒத்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ள மேலும் 6 மனுதாரர்களின் சட்டத்தரணிகளும், அம்மனுக்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 8 இடையீட்டு மனுக்களின் சட்டத்தரணிகளும் முன்வைத்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் 18 ஆம் திகதி திங்களன்றும், 19 ஆம் திகதி செவ்வாயன்றும் இது குறித்த அனைத்து மனுக்களையும் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
இவ்வாறான பின்னணியில் அன்றைய தினம் மனுதாரர் சார்பில் மன்றில் தெளிவுபடுத்தலை வழங்கிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், இம்மனுக்களின் தேசிய முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, மனுக்கலை பூரண நீதியரசர்கள் குழாம் ஒன்று முன்னிலையில் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனை ஏனைய மனுதாரர்களின் சட்டத்தரணிகளும் ஏற்றுக்கொண்டிருந்தனர்.
இது குறித்து மன்றில் கருத்துக்களை முன்வைத்திருந்த சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி இந்திகா தேமுனி டி சில்வா, பூரண நீதியரசர்கள் குழாம் தொடர்பில் முடிவெடுப்பது பிரதம நீதியரசரின் வேலை என அதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே, கடந்த 14 ஆம் திகதி குறித்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள பிரதம நீதியரசர் தனக்கு கீழ் ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாமை நியமித்துள்ளார்.
இந்நிலையில் நாளைய தினம் பரிசீலனைக்கு வரும் மனுக்கள் தொடர்பில் பிரதானமாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வாதங்களை ஆரம்பிக்கவுள்ளார். மனுதாரர் தரப்பு சட்டத்தரணி என்ற ரீதியில் அவரது வாதங்களுடன், இடைக்கால தடை கோரல், மனுக்களை விசாரணைக்கு ஏற்கக் கோரல் குறித்த வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறவுள்ளன.
குறிப்பாக மனுதாரர் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு மேலதிகமாக ஜனாதிபதி சட்டத்தரணி இக்ராம் மொஹமெட், சிரேஷ்ட் சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ, சிரேஷ்ட சட்டத்தரனி விரான் கொரயா உள்ளிட்டோரும் வாதங்களை முன்வைக்கவுள்ளனர்.
இந்நிலையில் மனுக்களின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் சார்பில் சட்ட மா அதிபர் ஆஜராகப் போவதில்லை என்தால், அவர்கள் சார்பில் தனிப்பட்ட சட்டத்தரணிகள் நாளை முதன் முறையாக மன்றில் ஆஜராகவுள்ளதாக அறிய முடிகிறது.
இதனைவிட மற்றொரு பிரதிவாதியான ஜனாதிபதி செயலர் பி.பீ.ஜயசுந்தர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மன்றில் பிரசன்னமாகவுள்ளார்.
சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி இந்திகா தேமுனி டி சில்வா தலைமையிலான குழு பிரசன்னமாகவுள்ளது.
அத்துடன் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் தாக்கல்ச் செய்யப்பட்டுள்ள இடையீட்டு மனுக்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான திலக் மாரப்பன, மனோகர டி சில்வா, சஞ்சீவ ஜயவர்தன, சவேந்ர பெர்ணான்டோ, அலி சப்றி உள்ளிட்டோர் வாதங்களை முன்வைக்கவுள்ளனர்.
முன்னதாக, 'அரசியலமைப்பின் பிரகாரம், பாராளுமன்றம் கலைக்கப்பட்ட தினத்திலிருந்து 3 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடாத்தப்பட்டு புதிய பாராளுமன்றம் கூட்டப்படல் வேண்டும்.
அதன்படி கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி ஜனாதிபதி அப்போதைய பாராளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி அறிவித்தல் பிறப்பித்த நிலையில், அதில் ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறும் என திகதி குறிக்கப்பட்டிருந்தது.
எனினும் தொடரும் கொவிட் 19 நிலைமை காரணமாக ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடாத்த முடியாமல் போனதுடன், தேர்தல் திகதியை எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதிக்கு பிற்போட தேர்தல்கள் ஆணைக் குழு தீர்மானித்தது.
இவ்வாறு ஜூன் 20 ஆம் திகதிக்கு பொதுத் தேர்தல் திகதியை நிர்ணயம் செய்தமை அரசியலமைப்புக்கு முரணானதாகும்.
பாராளுமன்றத்தை கலைத்து 3 மாதங்களுக்குள் புதிய பாராளுமன்றத்தை கூட்ட முடியாமல் போனமை ஊடாக, ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டத்தின் முன்னர் வலுவிழந்ததாக அறிவிக்க வேண்டும்.
அத்துடன் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவது குறித்தான 2172/03 ஆம் இலக்க தேர்தல்கள் ஆணைக் குழுவின் வர்த்தமானியையும் வலுவிழக்கச் செய்தல் வேண்டும். ' என தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் அனைத்திலும் சுட்டிக்காட்டப்பட்டு தேர்தல் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க இடைக்கால தடை உத்தரவுகளும், இரு வர்த்தமானிகளுக்கு எதிராக தடை உத்தரவுகளும் கோரப்பட்டுள்ளன.
இம்மனுக்களில், ஜனாதிபதிக்கு பதிலாக சட்ட மா அதிபர், தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஆணைக் குழு உறுப்பினர்களான என்.ஜே.அபேசேகர, ரத்ன ஜீவன் ஹூல், ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM