(எம்.எப்.எம்.பஸீர்)
சட்ட ரீதியாக ஊரடங்கை அமுல் செய்ய சட்டத்தில் போதுமான வழிமுறைகள் இருந்தும் அவ்வாறு எந்த ஊரடங்கும் இங்கு இல்லை. சட்ட ரீதியாக ஊரடங்குச் சட்டத்தை அமுல் செய்யாது, ஊடகங்கள் வாயிலாக அவ்வாறான நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளமை சட்ட விரோதமானதாகும். அப்படியானால் சட்ட ரீதியாக இங்கு ஊரடங்கு இல்லை. இல்லாத ஊரடங்குக்கு எதற்காக அனுமதிப் பத்திரம் பெற வேண்டும். அவ்வாறு இல்லாத ஊரடங்கு சட்டத்தை மீற, ஒருவருக்கு உதவி ஒத்தாசை புரிந்ததாக எனது சேவை பெறுநர் மீது எப்படி குற்றம் சுமத்த முடியும்?' என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இன்று நுகேகொட நீதிவான் நீதிமன்றில் முன்வைத்த சட்ட ரீதியிலான தர்க்கத்தையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் நீதிமன்றம் விடுவித்தது. நுகேகொட பிரதான நீதிவான் மொஹம்மட் மிஹால் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறிய நபர் ஒருவருக்கு அது தொடர்பில் உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க கடந்த 13 ஆம் திகதி மிரிஹானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவர் இன்று (20.04.2020) ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். எனினும் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவை சந்திக்க வந்த நபரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.
இந்நிலையில் இன்று ரஞ்சன் ராமநாயக்க குறித்த வழக்கு மீள நுகேகொடை பிரதான நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது சந்தேகநபரான ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜரானார்.
முதலில் பொலிஸார், மேலதிக விசாரணை அறிக்கை ஒன்றினை நீதிவானுக்கு கையளித்த நிலையில், ரஞ்சன் ராமநாயக்க ஊரடங்கு சட்ட விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தினர். இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தனது தர்க்கத்தை முன்வைத்தார்.
' ஊரடங்கு சட்டத்தை மீரியதாகவும், ஊரடங்கு அனுமதிப் பத்திரம் இல்லை என்றும் பொலிசார் இங்கு கூறுவதே சட்ட விரோதமானதாகும். ஏனெனில் இன்று நாட்டில் சட்ட ரீதியாக ஊரடங்கு நிலைமை இல்லை. ஊரடங்கு சட்டத்தை அமுல் செய்ய அவசர கால சட்டத்தை அமுல் செய்ய வேண்டியதில்லை. அது இல்லாமலேயே ஊரடங்கை பிறப்பிக்க முடியுமென சட்ட ரீதியிலான வழிமுறைகள் பல உள்ளன. எனினும் தற்போது ஊடகங்கள் வாயிலாக ஊரடங்கு நிலமை உள்ளதாக கூறப்பட்டாலும் சட்ட ரீதியாக ஊரடங்கு பிரகடனம் செய்யப்படவில்லை. எந்த அடிபடையின் கீழ் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது?
சட்ட ரீதியில் பிறப்பிக்கப்படாத ஊரடங்கு நிலைமைக்கு பொலிசாரிடம் அனுமதிப்பத்திரம் பெற வேண்டுமா? இல்லாத ஊரடங்குக்கு எதற்காக அனுமதிப் பத்திரம் பெற வேண்டும்? என வாதிட்டார்..
இதன்போது நீதிவான், எந்த அடிப்படையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என பொலிஸாரிடம் வினவிய போதும் பொலிசாரால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை.
இதனையடுத்து நீதிவான் பொலிசாருடன் வாக்கு வாதப்பட்டமை தொடர்பில் விளக்கம் கோரிய போது, ஜனனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ' நாட்டில் எல்லா பகுதியிலும் ஒருவர் பொலிஸாரால் நிறுத்தப்பட்டு ஏதேனும் சோதனைக்கு உட்படுத்தப்படும் போது , வார்த்தை பரிமாற்றங்கள் இடம்பெறுகின்றன. அவை அனைத்தையும் கடமைக்கு இடையூறு என கூறுவது எப்படி நியாயமாகும். ' என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் பொலிசார் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிணையளிக்க வேண்டாம் எனவும், குறித்த விடயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தொடர்பில் விசாரணைகள் இடம்பெற வேண்டியுள்ளதாகவும் கூறினார்.
எனினும் அந்த வீடியோ பொலிஸ் சீருடையில் இருந்த இருவராலேயே எடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அந்த காணொளிகள் தனியார் தொலைக்காட்சிகளுக்கு எப்படி வழங்கப்பட்டது, யாரால் வழங்கப்பட்டன என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார். பொலிஸாரால் எடுக்கப்பட்ட வீடியோ தொடர்பில் நடவடிக்கைகள் முடியவில்லை என ஒரு வாரம் நிறைவடைந்தும் பொலிஸார் கூறுவது எந்த அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியுமான காரணி எனவும் அவர் வினா தொடுத்தார்.
இதன்போது, குறித்த வீடியோ தனியார் தொலைக்காட்சிக்கு எப்படி சென்றது என்பது தொடர்பில் தனியாக விசாரணை இடம்பெறுவதாக பொலிஸார் கூறினார்.
இவ்வாறான வாத பிரதிவாதங்களின் பின்னரேயே , நீதிவான் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் வாதத்தை ஏற்று , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் செல்ல அனுமதித்தார்.
இந்நிலையில் வழக்கு நிறைவின் பின்னர் நீதிமன்றுக்கு வெளியே வந்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்,
' ரஞ்சனுக்கு பிணை கிடைத்தது. நாம் நாட்டில் சட்ட ரீதியாக ஊரடங்கு நிலை இல்லை என்பதை நீதிமன்றுக்கு தெரிவித்தோம். எனினும் நாட்டில் நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டே நாம் , அரசாங்கம் சொல்வதை கேட்கின்றோம். அது தவிற சட்ட ரீதியான ஊரடங்கு சட்டம் இல்லை.
இங்கு பொலிஸார் சட்ட விரோதமான செயலை செய்து விட்டு, அதில் ஏற்படும் பிரச்சினைகளின் போது பிறரைக் கைது செய்ய முடியாது. ஊரடங்கு சட்ட ரீதியாக இல்லை. எனினும் நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு அதனை மக்கள் பின்பற்ற வேண்டும். சட்ட ரீதியிலான வழிமுறைகள் இருந்தும் அவற்றை பின்பற்றாது, ஊடகங்கள் வாயிலான அறிவித்தல்கள் ஊடாக ஊரடங்கு நிலைமையை பிரகடனம் செய்து அரசாங்கம் பாரிய குற்றம் ஒன்றை புரிகிறது.' என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM