கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய ரீதியில் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கையில் இலங்கையிலும் அதன் தாக்கம் மெல்ல எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கின்றது. இந்நிலையில், பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள சூழலில் அது நடைபெறுமா இல்லையா என்பதற்கான பதிலை அடுத்து வரும் நாட்கள் தான் தீர்மானிக்கவுள்ளன.
புறச்சூழமைவுகள் இவ்வாறிருக்க, பாராளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளின் கூட்டணிகளும் ஆசன ஒதுக்கீடுகளும் வேட்புமனுக்கள் தயாரிக்கும் செயற்பாடுகளும் முழுவீச்சுடன் இடம்பெற ஆரம்பித்துள்ளன.
நாட்டின் ஆட்சியதிகாரத்தில் மாறிமாறி இருந்துவந்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேசிய அரசியலில் தடமற்றுச் செல்லும் நிலைமைகளே உருவாகியுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது தனது தனிப்பட்ட அந்தஸ்தை விட்டுக்கொடுத்து பொதுஜன பெரமுனவுடன் ஏறக்குறைய சங்கமிக்கும் நிலைமையே ஏற்பட்டுள்ளது.
அவ்வாறிருக்கையில், ஜனாதிபதி கோத்தாபயவின் தரப்பு, பிரதமர் மஹிந்தவின் தரப்பு, பசில், நாமல் ராஜபக் ஷ தரப்புகள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எஸ்.பி.திஸாநாயக்க, திலங்க சுமதிபால, டிலான் பெரேரா உள்ளிட்டவர்களை கொண்ட அணி, அக்கட்சியின் தலைவர் மைத்திரியை மையமாகக் கொண்ட அணி, அதனைவிட பொதுஜன பெரமுனவின் பங்காளிகள் என்று பல அணிகள் காணப்படுகின்றன. இவ்வாறு பல அணிகள் காணப்படுவதால் ஆசனப் பகிர்வில் இன்னமும் பிச்சல் பிடுங்கல்கள் நீடித்த வண்ணமே இருக்கின்றன.
இந்த அணியின் நிலைமை இவ்வாறிருக்க, மறுபக்கத்தில் பழம்பெரும் கட்சியொன்ற பதிவினைக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இரு கூறுகளாகிவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் பெயரில் ரணில் அணி யானைச் சின்னத்திலும் ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் சிறுபான்மை தரப்புகளின் கைகோர்ப்புடன் சஜித் அணி தொலைபேசி சின்னத்திலும் களமிறங்குவதற்கான தயார்ப்படுத்தல்கள் நிறைவடையும் தருணத்திலும் இருக்கின்றன. இதனைவிட ஜே.வி.பி மற்றும் இதர சிங்கள, பௌத்த சிந்தனையை மையப்படுத்திய தரப்புகளும் தேர்தல்களத்தில் குதிப்பதற்கு தயாராகியுள்ளன.
எவ்வாறாயினும், தென்னிலங்கையில் இம்முறை நாற்கோண போட்டி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், யார் சிங்கள பௌத்தவாதத்தில் உச்ச பற்றாளர்கள். அதாவது யார் கடும்போக்கு சிங்கள பௌத்த தேசிய பற்றாளர்கள் என்பதை வெளிப்படுத்துவதை அடியொற்றியதாகவே பிரசாரங்கள் அமையவுள்ளன.
இதனைவிடவும், பிளவுபட்ட தரப்புகள் மீது சேறடிப்புகளும் விமர்சனங்களும் அரச எதிர்ப்பு வாதமும் வழமைபோன்றே தேர்தல் மேடைகளில் எதிரொலிக்கும். இவற்றுக்கு மேலதிகமாக ராஜபக் ஷ மற்றும் அவர்கள் சார்ந்த தரப்பினர் கடந்த காலத்தில் உபயோகித்து வந்த ஜெனீவா மனித உரிமைகள் பேரவை, அரசாங்கத்துக்கு எதிரான சர்வதேச அழுத்தங்கள், இலங்கை இராணுவத்துக்கு எதிரான சர்வதேச போர்க் குற்றச்சாட்டுகள், போர் வெற்றி ஆகிய சுலோகங்களை அதேபாணியில் முழுவீச்சாக பயன்படுத்த முடியாத நிலைமையே இருக்கின்றது.
இருப்பினும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிரான அமெரிக்காவின் தடை அறிவிப்பு, ஜெனீவா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திலிருந்து வெளியேறுவதாக மார்ச் மாத கூட்டத்தொடரில் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அறிவிப்பு ஆகியன ராஜபக் ஷ அணியினருக்கு தென்னிலங்கையின் வாக்குகளை அமோகமாக அறுவடை செய்வதற்கு வழியமைக்கப்போகின்றது.
தென்னிலங்கை நிலைமை இவ்வாறிருக்க, தமிழர் தாயகத்தின் தேர்தல் களம் வழமைபோன்றே சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றது. திருவிழாக் காலங்கள் வரும் மணிக்கடைகள் போன்று ஆங்காங்கே கட்சி அலுவலகங்களும் வர்ணக்கொடிகளும் பதாகைகளையும் வெளிப்படையாக காண முடிகின்றது.
அதற்கும் அப்பால் கூட்டணிகளுக்கான இணக்கப்பாடுகளும் ஆசன ஒதுக்கீடுகளுக்கான பங்கீட்டு பேச்சுவார்த்தைகளும் நிறைவுற்றபோதும் ஆசனங்களுக்கான நபர்களை நியமிப்பதற்கான மூலோபாயத் திட்டங்கள் வகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக என்றுமில்லாதவாறு இனம், மதம் ஆகியவற்றை மையப்படுத்திய வேட்பாளர்கள் தெரிவுகளுக்கு தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அத்தனை கட்சிகளும் முக்கியத்துவம் அளித்துள்ளன. அதனைவிடவும் கடந்த பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தினைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் ஏற்கனவே பாராளுமன்ற கதிரைகளை அலங்கரித்தவர்கள் மீண்டும் அலங்கரிப்பதற்கான அங்கிகாரத்தினை மீண்டும் பெறுவதற்காக புதிய வேட்பாளர்கள் என்ற பெயரில் தத்தமது வாக்குவங்கிகளை தக்கவைத்துக்கொள்ளும் வகையிலான தெரிவுகளும் அறிமுகங்களும் இடம்பெறுகின்றன.
தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளின் வேட்பாளர் தெரிவில் இவ்வாறான நிலைமைகள் இருக்கையில், வழமைக்கு மாறாக இம்முறை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் முக்கோணப் போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விக்னேஸ்வரனை முன்னிலைப்படுத்தும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினை தலைமையாக கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றுக்கிடையில் கடுமையான போட்டிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமுள்ளன.
இதனைவிடவும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி, சமத்துவம் சமூக நீதிக்கான சமத்துவ அமைப்பு, பிள்ளையான், கருணா, வியாழேந்திரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் அணிகள் மற்றும் தேசியக் கட்சிகள் என்று களமிறங்கும் தரப்புகளின் பட்டியல் நீண்டு செல்கின்றது. அதிகளவு கட்சிகள் தேர்தல்களில் களமிறங்குவது ஜனநாயகத்தளத்தில் சிறந்தது என்று கருதினாலும் மறுபக்கத்தில் இலங்கை தீபகற்பத்தில் சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றாக இருக்கும் தமிழினத்தின் வாக்கு சிதறல்களுக்கே அது நிச்சயமாக வழிவகுக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
இவ்வாறிருக்கையில், தற்போதுள்ள விகிதாசாரத் தேர்தல் முறையின் பிரகாரம் ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர்களும் தாம் வெற்றிபெறுவதற்காகவும் அதிகளவு விருப்பு வாக்குகளை பெறுவதற்காகவும் பல்வேறு யுக்திகளை கையிலெடுப்பார்கள். கட்சியின் தலைவர் அல்லது தொகுதியின் பிரதான அமைப்பாளரை அல்லது தனக்கு ஆசனத்தினைப் பெற்றுக்கொடுத்த நபரை முதன்மைப்படுத்தி பதாதைகள், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து பிரசாரங்களை மேற்கொள்வார்கள்.
இன்னும் சிலரில் ஒருவர் முதல் மூவர் ஒன்றிணைந்து வாக்கு சேகரிப்பார்கள். விருப்பு வாக்குகளையும் பகிர்ந்தளிக்குமாறு கோருவார்கள்.
அதிலும் ஒருசிலர் பதாதைகள், துண்டுப்பிரசுரங்களில் மேற்கூறியபடி புகைப்படங்கள் காணப்பட்டாலும் தமக்கு தனியாக வாக்களிக்குமாறே மக்களை நேரடியாகச் சந்திக்கும் போது கோருவார்கள்.
அத்தகைய வேட்பாளர்களை தேர்தல் மொழியில் “தனியோட்டம் ஓடுகின்றார்கள்” என்று அழைப்பதுண்டு.
இவ்வாறான விடயங்கள் தேர்தல்கால களத்தில் காணப்படுவதும் பின்னர் ஒவ்வொரு கட்சிகளினுள்ளும் அல்லது கூட்டணிகளினுள்ளும் அதுபற்றி வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று காற்றோடு காற்றாக மறைந்து விடுவதுமே வழமையாக இருக்கின்றது.
ஆனால் இம்முறை தேர்தல் களத்தின் ஆரம்பத்திலேயே தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்றது.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாய்க்கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் நிலைமை மிக மோசமாக உள்ளது. குறிப்பாக வடக்கின் யாழ்ப்பாண மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் அத்தகைய மோசமான நிலைமையே நீடித்துக்கொண்டிருக்கின்றது.
அதாவது, யாழ்.தேர்தல் மாவட்டத்தினை எடுத்துக்கொண்டால் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், மாவை, சுமந்திரன், சரவணபவன் ஆகிய நான்கு பேரும் தமக்கென தனித்தனியாக நான்கு அணிகளை உருவாக்கியுள்ளனர்.
இந்த அணிகளினுள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சில தீவிர ஆதரவாளர்கள் ஆகியோர் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் தலைவர் மாவை, தளபதி சுமந்திரன், சரா ஆமி, எங்களுக்காக எங்களில் ஒருவன் ஸ்ரீதரன் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு அவ்வணிகளுக்குள்ளேயே பொது வெளியில் மோதல்கள் வேறு தொடர்கிறது.
இதனைவிட மக்கள் சந்திப்புகள், கேள்விக்கணைகளை தொடுங்கள் என்றெல்லாம் நிகழ்ச்சிகள் ஒழுங்கமைக் கப்பட்டு எதிர்த்தரப்புகளை சாடுவதை விமர்சிப்பதை விடவும் சொந்தக் கட்சிகளின் தலைமையையும் சக வேட்பாளரையும் திட்டமிட்டு சாட்டையடி அடிக்கும் துர்ப்பாக்கிய நிலைமைகளும் தொடர்கின்றன.
இவ்வாறான நிலைமைகள் தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள ஏனைய தரப்புகளான விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், கிழக்கில் பிள்ளையான், வியாழேந்திரன் உள்ளிட்ட தரப்புகளிடத்தில் பெரியளவில் காணப்படவில்லை.
அவர்கள் மக்களின் அங்கீகாரத்தினை பெறுவதையே முதல் இலக்காக கொண்டிருப்பதால் இவ்வாறான உள்ளக குத்துவெட்டுக்கள் அதிகளவில் காணப்படவில்லை. ஆனால், தேர்தல்களம் அடுத்து வரும் நாட்களில் சூடுபிடிக்கின்றபோது “தனியோட்டங்கள்” நிச்சயமாக இடம்பெறும்.
ஆக, தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளிடையேயும் அதன் வேட்பாளர்களிடையேயும் அதிகாரத்துக்கான போட்டிகள் உச்சத்தில் இருக்கின்றமையால் குடுமிச்சண்டைகள் இடம்பெறுகின்றதே தவிர தாம் சார்ந்த கொள்கைக்காவோ அல்லது ஆணை வழங்கப்போகும் மக்களுக்காகவோ அல்ல.
விடுதலை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் தமிழினம் தனக்கு விடியலை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் ஏதோவொரு தரப்பினருக்கு ஆணை வழங்கத்தான் போகின்றார்கள். ஆனால் அரசியல் கட்சிகளில் காணப்படும் உள்ளக குத்துவெட்டுக்களும் குடுமிச் சண்டைகளும் அரசியல் மீதும் அரசியல்வாதிகள் மீதும் வெறுப்பினை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது.
எனவே, தெற்காசியா உட்பட இலங்கை அரசியல் கலாசாரத்துக்கே புதிதாக இருக்கும் கொள்கை ரீதியான தர்க்கங்களை பொதுவெளியில் வைத்து வாக்குகளை சேகரிக்கும் அரசியல் கலாசாரம் பற்றி கொள்கை கொள்கை என்று மூச்சுக்கு முந்நூறு தடவைகள் கூறும் தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் சிந்திப்பதே சாலப்பொருத்தமானதாக இருக்கும்.
இல்லாது விட்டால் தமிழ்த் தேசிய அரசியல் தொடர்ந்து இறங்கு முகத்தில் செல்வதையும் சிங்கள பௌத்தவாத அரசியல் வல்லாதிக்கம் பெறுவதையும் தவிர்க்க முடியாது போகும் அபாயகரமான சூழல் ஏற்படும் என்பதே நிதர்சனம்.
- ஆர்.ராம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM