ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கு அமைவாக யானை சின்னத்தினை பின்பற்ற வேண்டியுள்ளது. அவ்வாறிருக்கையில், கட்சியிலிருந்து ஒருசிலரின் தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காகவே புதிய கூட்டணி உருவாக்கப்பட்டு பிறிதொரு அரசியல் கட்சியாக பரிணமிக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் அணியைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு:
கேள்வி:- சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தரப்பினருடன் ஐக்கிய தேசியக் கட்சி இணைவது பற்றிய பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா?
பதில்:- அவர்கள் ஒரு தரப்பாக இல்லை. அவர்கள் தற்போது அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளார்கள். ஆகவே கட்சி ரீதியான அரசியல் தரப்பினர் என்ற அடிப்படையில் தான் பார்க்க வேண்டியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் எந்தக் கட்சியுடனும் இணைந்து பயணிப்பதற்குரிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தயாராகவே இருந்து வருகின்றது. அதனடிப்படையில் ஐ.தே.க பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எப்போதும் தயாராகவே இருக்கின்றது.
கேள்வி:- பேச்சுவார்த்தைகள் தற்போதும் நடைபெறுகின்றதா என்று தான் கேட்டேன்?
பதில்:- அரசியல் கட்சிகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவது இயல்பானது.
கேள்வி:- நாட்டின் பழம்பெரும் கட்சியான ஐ.தே.கவிலிருந்து கணிசமான தரப்பினர் வெளியேறி புதிய அரசியல் கட்சியையும் கூட்டையும் உருவாக்கியுள்ளமையானது நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் உங்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கின்றதல்லவா?
பதில்:- போட்டியொன்றில் சவால்கள் நிறைந்திருந்தால் வெற்றியை நோக்கி செல்ல முடியும். அதனடிப்படையில் இவ்வாறான சவால்கள் தான் ஐ.தே.கவை வெற்றிபெறச் செய்யும்.
கேள்வி:- ஐ.தே.கவினுள் ஏற்பட்டுள்ள பிளவுக்கு பின்னரான நிலைமையில் கிராம மட்டங்களில் தொடர்ந்தும் அதன் ஆதரவுத்தளம் வலுவானதாக இருக்கின்றது என்று கருதுகின்றீர்களா?
பதில்:- அதனை தற்போது கூறிவிடமுடியாது. காரணம், தேர்தலுக்கான பூர்வாங்க செயற்பாடுகளே தற்போது நடைபெற்று வருகின்றன. ஆகவே ஓரிரு வாரங்கள் நிறைவடைந்த பின்னரே அதுபற்றிய கருத்துகளை வெளிப்படுத்த முடியும்.
கேள்வி:- ஐ.தே.க யானைச் சின்னத்தில் தான் களமிறங்கும் என்ற முடிவில் எதிர்காலத்தில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியுமா?
பதில்:- இல்லை. ஒருபோதும் மாற்றங்கள் நிகழாது. பழம்பெரும் கட்சியான ஐ.தே.க யானை சின்னத்திலேயே களமிறங்கும். அதுவே ஒவ்வொரு கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.
கேள்வி:- ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூட்டணி பற்றிய கலந்துரையாடல்களின்போது சின்னம் குறித்து கரிசனை செலுத்தவில்லையா?
பதில்:- சின்னம் குறித்த கலந்துரையாடல்கள் பல மட்டத்தில் நடைபெற்றன. நீண்ட ஆராய்வுகள் எல்லாம் இடம்பெற்றன.
கேள்வி:- அப்போது இணக்கப்பாடுகளை எட்டாது இறுதித்தருணத்தில் சின்னத்தினை காரணங்காட்டி வலுவான கூட்டணி அமையும் சந்தர்ப்பத்தினை ஐ.தே.க தலைவர் ரணில் கைநழுவ விட்டுவிட்டாரே?
பதில்:- ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க பல விட்டுக்கொடுப்புக்களை செய்தார். குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் பதவி, தேர்தல் கூட்டுக்கான தலைமைப்பதவி, பிரதமர் வேட்பாளர் என்றெல்லாம் அடுக்கிச் செல்ல முடியும்.
ஆனால் சின்னம் விடயத்தில் அவரால் எதுவும் செய்யமுடியாது. காரணம், ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய பல கூட்டுக்கள் கடந்த காலத்தில் நடைபெற்றிருந்தன. ஆனால் எங்கும் யானை சின்னம் மாற்றப்பட்டிருக்கவில்லை.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பில் ஐ.தே.க தலைமையில் களமிறங்கும்போது யானை சின்னமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றுள்ளது. ஆகவே தான் அவர் உள்ளிட்ட மேலும் சிலர் அந்த விடயத்தினை சுட்டிக்காட்டினர். யானை சின்னம் தொடர்பில் இறுக்கமாகவும் இருந்து வருகின்றனர்.
கேள்வி:- முக்கிய உறுப்பினர்கள் வெளியேறியுள்ள நிலையில் பலமான புதிய வேட்பாளர்களை களமிறக்குவது சவால் மிக்க செயற்பாடாக இருக்குமல்லவா?
பதில்:- ஐ.தே.க நேற்று, நேற்று முன்தினம் உருவாகிய கட்சியல்ல. மிகப்பெரும் எண்ணிக்கையான தொண்டர்களை கொண்ட வரலாற்றுக் கட்சியாகும். ஆகவே வேட்பாளர்களை தெரிவு செய்வதில் எவ்விதமான குறைபாடுகளும் ஏற்படாது. மிகச் சிறந்த வேட்பாளர்களே இம்முறை களமிறக்கப்படுவார்கள். அதற்கான சக்தி ஐ.தே.கவுக்கு உள்ளது.
கேள்வி:- ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் உள்ள சில தரப்பினரே தமது தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக ஐக்கியத்துக்கு தடையாக உள்ளதாக சஜித் தரப்பில் குற்றச்சாட்டு அடுக்கப்படுகின்றதே?
பதில்:- அவர்கள் செயற்பாட்டு ரீதியாக அதனையே செய்துள்ளார்கள். அவர்களின் தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காகவே தாய்க்கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்கள். நாம் ஐ.தே.கவை பாதுகாக்கும் செயற்பாட்டினையே முன்னெடுத்துள்ளோம்.
கேள்வி:- ஐ.தே.க இருகூறுகளாகியுள்ளமையால் ஆகக்குறைந்தது ஆளும் தரப்புக்கு எதிரான பலம்மிக்க எதிர்க்கட்சியொன்று கூட உருவாக முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணருகின்றீர்களா?
பதில்:- இதனை உணர வேண்டியவர்கள் பிரிந்து சென்ற தரப்பினரே தவிர நாம் அல்லர். காரணம் கடந்த 20வருடங்களாக அந்த தரப்பினரே கட்சிக்குள் இருந்துகொண்டு தலைமைக்கு எதிரான சூழ்ச்சிகளை முன்னெடுத்தார்கள். தலைமைக்கு எதிரான நேர்மறையான பிரசாரங்களை செய்தார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளால் கட்சியின் கீழ் மட்டங்களில் உள்ள ஆதரவாளர்களும் திசைதிருப்பப்பட்டுள்ளனர். இந்த விடயத்தினை தற்போது ஆதரவாளர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். ஆகவே அவர்கள் நிச்சயமாக ஐ.தே.கவுடனேயே தொடர்ந்தும் இருப்பார்கள் என்ற விடயம் தற்போது புலனாகியுள்ளது. எனினும் தேர்தலின் பின்னர் அந்த யதார்த்தம் வெளியாகும்.
கேள்வி:- ஐ.தே.கவுடன் இணைந்திருந்த முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி போன்ற சிறுபான்மை தேசிய இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்புகள் வெளியேறியுள்ளமையானது பின்னடைவுகளை ஏற்படுத்தாதா?
பதில்:- 1988இற்குப் பின்னரான அரசியலமைப்பு மாற்றத்துக்கு அமைவாக, ஐக்கிய தேசியக் கட்சிக்கு சிறுபான்மை தரப்பினர் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. அதனடிப்படையில் அன்றிலிருந்து சிறுபான்மை தேசிய அரசியல் தரப்புகள் ஐ.தே.கவுடனேயே பயணிக்கலாகின. ஆனால் தற்போது அந்த நிலைமை முற்றாக மாறியுள்ளது. ஒருவேளை, அவர்களுக்கு காணப்படும் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கும் அவ்வாறான தீர்மானமொன்றை எடுத்திருக்கலாம். எவ்வாறாயினும் ஐ.தே.கவுக்கு தீங்கிழைத்தமைக்கான பொறுப்புக்கூறலை அவர்களும் செய்தாக வேண்டும்.
கேள்வி:- தொடர்ச்சியாக நான்கு தசாப்த காலமாக அரசியலில் இருக்கும் ரணில் விக்கிரமசிங்க அடுத்த தலைமுறையிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதில் தயக்கம் காட்டுவதேன்?
பதில்:- அவருடைய தலைமையில் கட்சி ஒழுக்கநெறிகளுடன் பாதுகாக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் எதிர்காலத்தில் ஒழுக்க நெறிகளை பின்பற்றும் தரப்பிடத்தில் கட்சியை ஒப்படைக்க வேண்டிய பாரிய கடமையொன்று அவர் முன்னால் இருக்கின்றது. கூட்டணி அமைப்பதாக கூறி அரசியல் கட்சியை ஸ்தாபித்தவர்களிடத்தில் ஒழுக்க நெறிகள் இருக்கின்றதா என்ற கேள்வியும் எமக்குள்ளது. மேலும் அவர்களின் செயற்பாடானது வெறுமனே பழிதீர்ப்பதையும் பதவிகளையும் மையப்படுத்தியதாக இருக்கின்றது. தற்போது பிரிந்து சென்ற அணியானது எந்தவிதமான ஒழுக்க நெறிகளையும் பின்பற்றவில்லை என்பதை இந்த நாட்டில் உள்ள மக்கள் உணர்ந்துள்ளார்கள்.
கேள்வி:- ஐ.தே.க ஆட்சிப்பீடத்தில் இருந்தபோதும் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏமாற்றிவிட்டதாக அதன் சிரேஷ்ட உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் பகிரங்க குற்றச்சாட்டுகளுக்கு உங்களின் பதில் என்ன?
பதில்:- 2015ஆட்சி மாற்றத்தின் பின்னர் கூட்டு அரசாங்கமே ஆட்சியில் இருந்தது. இதனால் எம்மால் தமிழ் மக்களுக்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்ட சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது போயுள்ளமையை ஏற்றுக்கொள்வதோடு அதனையிட்டு கவலையடைகின்றோம்.
நேர்காணல் - ஆர்.ராம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM