உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கம் நாளுக்கு நாள் உலகின் பல்வேறு பாகங்களிலும் அதிகரித்து வருகின்ற சூழலில் இலங்கையில் முதலாவது இலங்கையர் ஒருவருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 52 வயதான சுற்றுலா வழிகாட்டியாகத் தொழில் புரியும் ஒருவருக்கே இந்த கொரோனா தொற்று தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு ஐ.டி.எச். மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்.
நேற்று முன்தினம் 10ஆம் திகதி இரவே இவருக்கு கொரோனா தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இத்தாலியில் இருந்து வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றுக்கே இவர் சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்டிருக்கின்றார். அந்தவகையில் தற்போது அந்த சுற்றுலா குழுவினர் பயணம் செய்த இடங்கள், அவர்கள் சந்தித்து பேசிய, பழகிய மக்கள் தொடர்பான தகவல்கள் தேடப்பட்டு வருவதாகவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி செயலகம் அறிவித்திருக்கிறது.
அதுமட்டுமன்றி இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு சுகாதார அமைச்சினால் பல்வேறு பரந்துபட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இந்த கொரோனா வைரஸ் பரவலை முறியடிப்பதற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி செயலகம் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
தற்போதைய நிலைமையில் இத்தாலி, தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகின்ற அனைத்து பயணிகளையும் தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்திருக்கிறது.
மிக முக்கியமாகக் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்வதாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதற்றம் வேண்டாம்
இந்த நிலையில் நாட்டு மக்கள் பதற்றமடையாமல் இந்த நோய் பரவுவதனை தடுப்பதற்காக சுகாதார அமைச்சினால் வெ ளியிடப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றவேண்டியது அவசியமாகின்றது. இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை நாடி பரிசோதனை செய்துகொள்வது சிறந்ததாகும். அதுமட்டுமன்றி இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும் இங்கு மிக அவசியமாகின்றது.
முதலில் இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோய் எவ்வாறு பரவுகின்றது என்பது தொடர்பில் மக்கள் மிகவும் தெளிவுடனும் விழிப்புடனும் இருக்கவேண்டியது அவசியமாகும். பல்வேறு வழிகளில் இந்த வைரஸ் தொற்று பரவுவதாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. முதலில் இந்த வைரஸ் தொற்றானது சீனாவில் வுஹான் மாநிலத்தில் மிருகமொன்றிலிருந்தே மனிதருக்கு பரவியதாகக் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் தற்போது இந்த வைரஸ் தொற்று மனிதனிலிருந்து மனிதனுக்கு பரவிக்கொண்டிருப்பதுடன் நவீன உலகின் நெருங்கிய தொடர்புகள் காரணமாக உலகெங்கும் பரவிக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இத்தாலி, ஈரான், தென்கொரியா
உலக நாடுகளைப் பொறுத்தவரையில் இத்தாலி, தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளில் மிக மோசமான முறையில் இந்த வைரஸ் தொற்று பரவுவதைக் காணமுடிகின்றது. அதேபோன்று அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதைக் காண முடிகின்றது. எனினும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாகவே அந்நாடுகளிலிருந்து வருகின்ற பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானம் எடுத்திருக்கிறது.
அதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பற்றிக்களோ கம்பஸ் என்ற கட்டிடத்தொகுதியிலும் கந்தக்காடு என்ற பகுதியிலும் இவ்வாறு இந்த மூன்று நாடுகளிலிருந்து வருகின்ற பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த கொரோனா தொற்று எவ்வாறு பரவுகின்றது என்பது தொடர்பாக நாம் மிகவும் தெளிவுடனும் விழிப்புடனும் இருக்கவேண்டும்.
எவ்வாறு பரவுகின்றது?
ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்குமாயின் அவர் தும்மும்போது வெளிவருகின்ற உமிழ் நீரினால் (எச்சில்) மற்றொருவருக்கு இந்த வைரஸ் பரவலாம். அதேபோன்று இருவர் நேருக்கு நேர் உரையாடிக்கொண்டிருக்கும்போது வெளிவருகின்ற உமிழ்நீரினாலும் இந்த வைரஸ் பரவும். மேலும் இந்த தொற்றுள்ளவர்கள் தும்மும்போது வெளிவருகின்ற உமிழ்நீர் துகல்கள் பல்வேறு பொருட்களில் படியலாம். வாகனங்கள், மேசைகள், கதிரைகள், கட்டடங்கள் உள்ளிட்ட எந்தவொரு பொருட்களிலும் இவை படியலாம். எனவே சாதாரண மக்கள் அந்த பொருட்களில் கையை வைத்துவிட்டு மீண்டும் மூக்கு, வாய், கண் பகுதிகளைத் தொடும்போது இந்த வைரஸ் பரவுவதற்கான அபாயம் இருக்கின்றது. இவையே பிரதான நோய்பரவும் மூலங்களாக காணப்படுகின்றன.
எனவே நாம் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்பதே இங்கு மிக முக்கியமாக காணப்படுகின்றது. இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது. அதேபோன்று இலங்கையின் சுகாதார அமைச்சும் பல அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்கியிருக்கிறது.
என்ன செய்யவேண்டும்?
முதலாவது விடயமாக அடிக்கடி கைகளை சவர்க்காரமிட்டு சுடுநீரில் நன்றாக கழுவிக்கொள்வது மிகவும் அவசியமாகின்றது. சுமார் 20 விநாடிகள் இவ்வாறு கைகளை நன்றாகத் தேய்த்துக்கழுவவேண்டும். அடிக்கடி கைகளை நன்றாகக் கழுவிக்கொள்வது சிறந்ததாகும். அதேபோன்று அடிக்கடி கைகளைக்கொண்டு வாய், மூக்கு, கண்களைத் தொடுவதை முற்றாகத் தவிர்த்துக்கொள்வதும் இந்த வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான மிக முக்கியமான ஒரு காரணியாக இருக்கின்றது.
மேலும் ஒருவர் தும்மும்போது கைக்குட்டையினால் வாய், மூக்குப்பகுதிகளை மறைத்துக்கொள்வது மிகவும் அவசியமாக இருக்கின்றது. இதன்மூலம் எச்சில் துகல்கள் வேகமாக வெளியேறுவதைத் தடுக்க முடியும். அதேபோன்று இருவர் நேருக்கு நேர் நின்று உரையாடும்போது ஒரு குறிப்பிட்ட இடைவெளியைப் பேணுவது அவசியமாகின்றது. மிக அருகிலிருந்து உரையாடும்போது எச்சில் துகல்கள் வெளியேறி அவை மற்றவரை சென்றடையும் அபாயம் காணப்படுகின்றது. எனவே மிக அருகில் இருந்து நேருக்கு நேர் உரையாடுவதைத் தவிர்ப்பதும் சிறந்ததாக அமையும்.
அதேபோன்று வைத்தியசாலையில் பணியாற்றுகின்றவர்கள், முக கவசத்தை அணிவது பொருத்தமாக இருக்கும். குழந்தைகள், சிறுவர்கள், மிருகங்களை தொடும் பட்சத்தில் உடனடியாகக் கைகளைக் கழுவவேண்டியது அவசியம் என்பதைப் பெற்றோர் அறிவுறுத்தவேண்டும். அதுமட்டுமன்றி நன்றாக சமைத்த உணவுகளையே உண்ணுமாறு அறிவுறுத்தப்படுகின்றது. குறிப்பாக இறைச்சி வகைகளை நன்றாகச் சமைத்தே உட்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.
அறிகுறிகள்
இதன் அறிகுறிகள் குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. காய்ச்சல், இருமல், உடல் களைப்பு, தசைவலிகள், மூச்செடுப்பதில் சிரமம் போன்றவைகள் காணப்படின் உடனடியாக மருத்துவரை நாடுமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
எனவே இங்கு பொதுமக்கள் பதற்றப்படாமல் அச்சமடையாமல் வழங்கப்பட்டிருக்கின்ற அறிவுறுத்தல்களை சரியான முறையில் கடைப்பிடிப்பதே அவசியமாகின்றது. மிக முக்கியமாக குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களை உரிய முறையில் இந்த சுகாதார அறிவுறுத்தல்களை கடைப்பிடிப்பதற்கு வலியுறுத்தவேண்டும். இதன் ஊடாகவே இந்த வைரஸ் பரவலில் இருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
தற்போது உயிர்கொல்லி நோயாக உள்ள இந்த வைரஸ் உலக நாடுகளில் மிக வேகமாகப் பரவிக்கொண்டிருக்கின்றது. எனினும் அதற்காக மக்கள் அச்சமடைந்து ஸ்தம்பித்துவிட முடியாது. மாறாக இந்த நிலைமையிலிருந்து மீண்டு வருவதற்கான அறிவுறுத்தல்களைப் பின்பற்றி இதனை முறியடிப்பதே தற்போதைய நிலைமையில் மிக அவசியமாக காணப்படுகின்றது. எனவே மிக பிரதான விடயமாக கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவுமாறு வலியுறுத்தப்படுகின்றது. எனவே அதனைச் செய்யவேண்டியது மிகவும் அவசியமாகும்.
சீனாவில் வீழ்ச்சி
தற்போது உலக நிலைமையை பார்க்கும் போது சீனாவில் இந்த வைரஸ் பரவும் வேகம் குறைவடைந்துவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் சீனாவை தவிர்ந்த ஏனைய நாடுகளில் பரவும் வேகம் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
சீனா உட்பட உலகம் முழுவதும் 119186 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். அதேபோன்று 4298 பேர் இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். எனினும் பாதிக்கப்பட்டவர்களில் 66619 பேர் சிகிச்சைபெற்று வைரஸிலிருந்து மீண்டுள்ளனர்.
தென்கொரியாவிலும் கடந்த சில தினங்களாக இந்த நோயின் வேகம் குறைந்துவருவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இத்தாலியில் நிலைமை மேலும் மோசமடைந்தே செல்கின்றது. அங்கு முழுநாடும் அந்நாட்டு அரசாங்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் பொதுவான ஒன்றுகூடல்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இத்தாலியில் 9172 பேர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோன்று இந்த வைரஸ் காரணமாக இத்தாலியில் 463 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு வெளியே இத்தாலியிலேயே அதிகளவு உயிரிழப்புக்கள் இந்த வைரஸ் காரணமாக பதிவாகியுள்ளன. அமெரிக்காவிலும் 36 மாநிலங்களில் இந்த கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். பிரித்தானிவிலும் நிலைமை மோசமடைந்து செல்கின்றது. அந்நாட்டின் சுகாதார அமைச்சருக்கும் கொரோனா நோய் தொற்று பரவியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
உலக பொருளாதாரம்?
இந்நிலையில் உலகின் பொருளாதாரமும் பாரியதொரு தாக்கத்திற்கு உட்பட்டு வரும் நிலைமையைக் காண முடிகின்றது. முக்கியமாக கப்பல் போக்குவரத்து விமானப்போக்குவரத்து என்பன பாதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த கொரோனா வைரஸ் தாக்கமானது உலகின் பொருளாதார கட்டமைப்பையும் அல்லது பொருளாதார நிலையையும் பாரிய தாக்கத்திற்கு உட்படுத்தியிருக்கிறது என்பது உண்மையாகும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் முதலில் சீனப்பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஐ.டி.எச். மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு பூரண குணமடைந்து நாடுதிரும்பியிருந்தார். இந்நிலையிலேயே தற்போது இரண்டாவது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். எனினும் இம்முறை அடையாளம் காணப்பட்டிருப்பவர் இலங்கை பிரஜை என்பதே இங்கு மிக முக்கியமான விடயமாகும். இதுவரை 316 பேர் இலங்கையில் சந்தேகத்தின் பேரில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். 18 பேர் தொடர்பான முடிவுகள் வெளிவரவில்லை. எனினும் ஏனையவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. எப்படியிருப்பினும் தற்போது உலக அளவில் நிலைமை மோசமடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. எனவே உலக நாடுகளும் உலக சுகாதார ஸ்தாபனமும் இந்த நிலைமை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுத்து
மக்களை அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஏற்கனவே உலகநாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. எனினும் அவற்றையும் மீறி தற்போது இந்த வைரஸ் வேகமாகப் பரவுவதைக் காணமுடிகின்றது.
இந்த வைரஸ் நோய் மற்றும் அதிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பாக சமுதாய வைத்திய நிபுணர் டாக்டர் கேசவன் எம்மிடம் கருத்து பகிர்கையில்:
தற்போது கொரோனா வைரஸ் தொற்ற பரவியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர் தொடர்பாக மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவர் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தாரா அல்லது வெளிப்பிரதேசங்களுக்குச் சென்றாரா என்பது தொடர்பில் ஆராயவேண்டியிருக்கிறது. எப்படியிருப்பினும் இலங்கையில் இந்த நோய் பரவுவதைத் தடுப்பது தொடர்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் உரிய கண்காணிப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவை மிக உயர்ந்தமட்ட நடைமுறைளாக உள்ளன. மேலும் நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் விசேட மருத்துவ பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. யாழ். போதனா வைத்தியசாலையில் 20 கட்டில்களுடன் தனிப்பட்ட வைத்திய அதிகாரிகளுடன் தனிமைப்பபடுத்தப்பட்ட பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன்
இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகின்றவர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் கண்காணிப்புக்குச் செல்லவேண்டும். அதேபோன்று ஏனைய நாடுகளில் இருந்து வருகின்றவர்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. இந்த செயற்பாடு தொடர்பில் மக்கள் பயப்படக்கூடாது. தனிமைப்படுத்தல் என்பது கண்காணிப்பு நடவடிக்கை மட்டுமேயாகும். அது அவர்களுக்கும் நன்மையாகும். அனைத்து தரப்பினருக்கும் நன்மையாகும். எனவே அச்சப்படாமல் இதற்கு ஒத்துழைக்கவேண்டும். இங்கு மிக முக்கியமான விடயம் என்னவென்றால் கைகளைச் சவர்க்காரமிட்டு அடிக்கடி கழுவுவதாகும். காற்றினால் இந்த வைரஸ் பரவமாட்டாது. மாறாக எச்சில் துகல்கள் ஊடாகவே பரவுகின்றது. எனவே தும்மும்போதும் உரையாடும்போதும் உமிழ்நீர் துகல்கள் பரவாமல் பாதுகாப்பாக இருக்கவேண்டும். எந்தவொரு பொருளையும் தொட்டால் உடனடியாக கைகளை சவர்க்காரமிட்டுக் கழுவவேண்டும். உண்மையில் கை கழுவுதல் என்பது ஒரு கலாசாரமாக மாறவேண்டும் என்பதே இங்கு அவசியமாகின்றது. கைகளைத் தொட்டு ஒருவரை வரவேற்பதற்கு பதிலாக கைகூப்பி வரவேற்கலாம். எனவே மக்கள் பதற்றமடையவேண்டாம். மாறாக உரிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள் என்றார்.
இந்நிலையில் மக்கள் அச்சமடையாமல் பதற்றமடையாமல் நோய் பரவாமல் தடுப்பதற்காக அறிவுறுத்தப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும். அதுவே தற்போதைய நிலைமையில் இந்த அச்சுறுத்தலிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழியாகக் காணப்படுகின்றது. எனவே இது தொடர்பான அறிவுறுத்தல்களை உரிய முறையில் பின்பற்றவேண்டியது இங்கு அவசியமாகும்.
- ரொபட் அன்டனி -
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM