நாட்டை பாதுகாக்கும் பொலிஸ் துறை, நாட்டில் நீதியை நிலைநாட்டும் நீதித்துறை போன்றே சமூகத்தின் குறை நிறைகளை சுட்டிக்காட்டி அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதில் ஊடகத்துறையும் ஒரு நாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஊடகத்துறையில் பிரவேசிக்கும் ஆண்கள் அச்சுறுத்தல்கள், உயிரிழப்பு போன்ற உச்சக்கட்ட சவால்களுக்கு முகம்கொடுக்கும் அதேவேளை பெண்கள் ஆண்களை விட மாறுபட்ட சவால்களுக்கும் சமூக அடக்குமுறைகளுக்கும் முகம்கொடுக்க நேரிடுகின்றது.
இவ்வாறான சவால்களை வெற்றிகரமாக கடந்து செல்வதற்கு பெண் ஊடகவியலாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் பெண் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காகவும், இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் புதுடில்லியில் அமைந்துள்ள யுனெஸ்கோவும் இணைந்து “ஊடகத்துறை மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு” எனும் தொனிப்பொருளில் பெண் ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறையினை முன்னெடுத்தன.
இப்பயிற்சிப்பட்டறையில் இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் பெண் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டதுடன், அவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும்போது தம்மை பாதுகாத்து கொள்வதற்கான சிறந்த வழிகள் தொடர்பில் துறை சார்ந்த நிபுணர்களை கொண்டு பயிற்றுவிக்கப்பட்டது.
இப்பயிற்சிப்பட்டறையில் வழங்கப்பட்ட வழிகாட்டல்கள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து நோக்குகையில்,
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் விண்வெளியில் கால் பதித்துள்ளபோதிலும் பல நாடுகளில் வாழும் பெண்கள் வீட்டுக்கு வெளியில் கால் வைப்பதே கேள்விக்குறியாக உள்ளது.
எனினும் பெண்களின் ஊடகப்பிரவேசம் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் கருத்துச் சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்கும் முக்கிய காரணியாக அமைவதாக ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகின்றது.
இதற்கமைய பாலின பேதமின்றி ஊடகத்துறையில் பெண்களின் பங்களிப்பு அமைய வேண்டுமாயின் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறையை நீக்குவது, பெண் ஊடகவியலாளர்களின் திறனை வளர்ப்பது அவசியமான ஒன்றாக இருப்பதாக யுனெஸ்கோ கருதுகின்றது.
1992 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பெண் ஊடகவியலாளர்கள் 96 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு (Committee to Protect Journalists) அதன் இணையத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
இக்குழுவினால், 2017ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2017 ஆம் ஆண்டில், 42 ஊடகவியலாளர்கள் உலகளவில் தங்கள் ஊடகப்பணியின் காரணமாக கொல்லப்பட்டுள்ளனர். இதில் 19 சதவீதமானவர்கள் பெண்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 2020 ஆம் ஆண்டில் 31 பெண் ஊடகவியலாளர்கள் உலகம் முழுவதும் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் ஈரானின் பத்து ஊடகவியலாளர்களும், துருக்கியை சேர்ந்த 9 ஊடகவியலாளர்களும், சீனாவை சேர்ந்த ஆறு ஊடகவியலாளர்களும் உள்ளடங்குகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில், ஊடகத்துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு என்பது ஊடகவியலாளர்கள் உடல் அல்லது தார்மீக அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளாமல் தகவல்களைப் பெறவும், தயாரிக்கவும், பகிர்ந்துகொள்ளவும் வழங்கப்படுகின்ற சுதந்திரமாகும்.
ஒரு நாட்டில் ஊடகத்துறையில் பெண் ஊடகவியலாளரின் பங்கு அவர்களுக்கு வழங்கப்படும் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை கொண்டு ஒட்டு மொத்தமாக நாட்டில் பெண்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் மதிப்பிட முடியும்.
தமது வாழ்நாளில் மகள், மனைவி, தாய், என பல பொறுப்பான பதவிகளை ஏற்கும் ஒரு பெண், ஊடகவியலாளரான தமது பயணத்தை தொடரும்போது, பாலின பாகுபாடுகள், பாலியல் துன்புறுத்தல்கள், தாக்குதல்கள் போன்றவற்றுக்கு முகம்கொடுக்க நேரிடுகின்றது. இதன் காரணமாக உடல், உள ரீதியாக ஒரு பெண் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறார்.
இவ்வாறான சூழ்நிலையில் அரசியல், பொருளாதாரம் மற்றும் பொது வாழ்வில் அனைத்து மட்டங்களிலும் தீர்மானம் மேற்கொள்ளுதல் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றில் பெண்களின் பங்களிப்பினை உறுதி செய்வதற்கான உலகளாவிய தீர்மானத்தை நிவர்த்தி செய்யும் 2030 நிகழ்ச்சி நிரலிற்கு அமைய யுனெஸ்கோ இப்பயிற்சி பட்டறையை முன்னெடுத்துள்ளது.
ஊடகத்துறையில் பணிபுரியும் பெண் ஊடகவியலாளர்களின் திறனை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த பயிற்சிப்பட்டறை, பணியிடத்தில் துன்புறுத்தல் மற்றும் இணைய பாதுகாப்பு, தற்காப்பு, சட்டரீதியான பாதுகாப்பு, உளவியல் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு ஒவ்வொரு ஊடகவியலாளரும் பொறுப்புடையவர். எனவே தாம் முகம் கொடுக்கும் சவால்களை சட்டரீதியாகவும் பௌதீக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் எதிர்கொள்வதற்கு போதிய தெளிவை பெற்றிருத்தல் முக்கிய கடப்பாடாகும். இக்கடப்பாட்டை பூர்த்தி செய்வதில் இப்பயிற்சிப்பட்டறை சிறந்த தெளிவை வழங்கியிருந்தது.
செய்தி அறிக்கையிடலில் எதிர்கொள்ளும் சவால்கள்
ஐந்து முக்கிய பிரிவுகளாக இடம்பெற்ற இப்பயிற்சிப்பட்டறையில், தற்போதைய நிலையில் ஊடகத்துறையில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் எதிர்கொள்ளும் கள அளவிலான சவால்கள் பற்றி “டெய்லி பைனாசியல் டைம்ஸ்“ பத்திரிகையின் பிரதி ஆசிரியை உதித்த ஜெயசிங்க உடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது களத்திற்கு சென்று செய்தியொன்றை பதிவு செய்யும்போது ஊடகவியலாளராக ஒரு பெண் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது. செய்தியனை வடிவமைக்கும்போதும் அதனை பிரசுரிக்கும்போதும் ஊடக தர்மம் பேணப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
ஒரு செய்தியை பிரசுரிக்கும் ஊடகவியலாளர் அச்செய்தியுடன் தொடர்புடைய புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து தரவுகளுக்கும் தாம் பொறுப்புடையவர் என்பது தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு செய்தியை அறிக்கையிட செல்லும் முன்பாக நாம் அதற்கான படிமுறைகளை திட்டமிடுதல் அவசியம்.
குறிப்பாக செல்ல வேண்டிய இடத்திற்கான வரைபடம், சந்திக்க வேண்டிய நபர்கள், அவர்களிடம் வினவப்பட வேண்டிய வினாக்கள், அவர்களுக்கான நேரம் மற்றும் ஊடகவியலாளரின் பாதுகாப்பு, தங்குமிடம், உணவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முன்னாயத்தத்தை மேற்கொள்ளுதல் கட்டாயமானதாகும்.
சட்ட ரீதியிலான பாதுகாப்பு
இதனைத் தொடர்ந்து தொழில் புரியும் பெண்களுக்கான சட்ட கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து சட்டத்தரணியும் ஊடகவியலாளருமான ராதிகா குணரத்தவினால் பல விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.
பெண்கள் ஆண்களைவிட மாறுபட்ட தாக்குதல்களுக்கு உள்ளாகின்றமையால் அவர்களை பாதுகாக்க விசேட சட்டங்கள் தேவை என்பதை சட்டத்தரணி விளக்கினார்.
மேலும், இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயம் பெண்களின் சமத்துவத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது, மேலும், பெண்களைப் பாதுகாக்கவும் அதிகாரம் அளிக்கவும் சர்வதேச மனித உரிமை ஆணையத்துடன் ஒப்பந்தங்களில் இலங்கை அரசு கைச்சாத்திட்டுள்ளது.
1993இ-ல் வியான்னாவில் நடந்த ""உலக மனித உரிமை மாநாட்டில்'' பெண்களின் உரிமைகளை மீறுதல் மிகக் கொடிய மனித உரிமை மீறல் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கமைய பணியிடங்களில் மற்றும் பொது இடங்களில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படும்போதும், துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும்போதும் அது குறித்து சட்டரீதியிலான உதவியை பெற்று கொள்ள முடியும் என தெளிவுபடுத்தினார்.
சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது எமது நாட்டில் பெண்கள் பெண் ஊடகவியலாளர் தொடர்பான சட்டங்களில் உள்ள பின்னடைவு தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
பணியிடங்களில் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள், வார்த்தை பிரயோகங்கள், பாலின பாகுபாடுகள் மற்றும் ஊதிய முரண்பாடுகள் குறித்து சட்டரீதியாக தீர்வு காண்பது குறித்து தெளிவூட்டப்பட்டது.
குறிப்பாக பெண் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
பணியிடங்களில் சித்திரவதைக்கு உள்ளாதல்,
"சித்திரவதை" என்ற வார்த்தையின் பொருள், உடல் அல்லது மனரீதியான, கடுமையான வலி அல்லது துன்பம் ஒரு நபரிடமிருந்து வேண்டுமென்றே அல்லது அவரிடமிருந்து அல்லது மூன்றாம் நபரின் தகவல் அல்லது ஒப்புதல் வாக்குமூலம், தண்டனை போன்ற நோக்கங்களுக்காக விதிக்கப்படும் எந்தவொரு செயலையும் குறிக்கிறது.
பணியில் இருந்து வெளியேற்றப்படல்.
டிஜிட்டல் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துதல்.
கட்டாயமாக காணாமல் போதல் மற்றும் பணயக்கைதிகளாக்கி மிரட்டல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாதல்.
அலுவலகங்கள் மற்றும் ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும்போதும் மூடப்படும் போதும் பாதிப்படைதல்.
ஊடகவியலாளர்களின் ஆதாரங்களின் இரகசியத்தன்மை மீதான தாக்குதல்கள்.
சட்டவிரோத அல்லது தன்னிச்சையான கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு இடைமறிப்பு.
தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் தன்னிச்சையான கைது.
கொலை மற்றும் பாலியல் உள்ளிட்ட பிற வகையான கொடுமை.
பத்திரிகையாளர்களின் சுயாதீனமாக மற்றும் தேவையற்ற குறுக்கீடு மூலம் பணியாற்றுவதற்கான திறனைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்த தேசிய சட்டங்களை தவறாகப் பயன்படுத்துதல்
ஆகிய காரணங்களுக்காக குறிப்பாக பெண் ஊடகவியலாளர் ஒருவர் சட்டத்தின் உதவியை நாடுவதுடன் தனக்கான உறிமையை பாதுகாத்துக்கொள்ளமுடியும் என சட்டத்தரணி விளக்கமளித்தார்.
உளவியல் ரீதியிலான பாதுகாப்பு
பணியிடங்களில் பெண்கள் எதிர் கொள்ளும் உடல், உள ரீதியிலான சிக்கல்கள் பெண்களின் சுகாதார ரீதியாக மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒரு பெண் முகம் கொடுக்கும் அதிர்ச்சி மற்றும் “மன அழுத்தம் குறித்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் மனவள ஆரோக்கிய நிபுணர்“ கிசெல் தாஸ் கலந்துரையாடினார்.
மகள், மனைவி, தாய் என பல பரிமாணங்களில் செயலாற்றும் ஒரு பெண் ஊடகவியலாளராக பணியிடங்களில் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் காரணிகள் குறித்து ஆராயப்பட்டதுடன், தம் மன அழுத்தத்துக்கு உள்ளாகும் போது, ஓர் இடைவேளையைப் பெற வேண்டியதன் அவசியம் உணர்த்தப்பட்டது.
வேலைப்பளு அதிகரிக்கும்போது சக பணியாளர்களுடன் முரண்பட நேரும் சூழ்நிலைகளில் தமது ஆரோக்கியம் குறித்து அக்கறையுடன் செயற்பட வேண்டும். தேவையான இடைவெளிகளில் விடுப்பு எடுத்துக்கொள்வது ஒரு பெண்ணின் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு அவசியமான காரணியாகும்.
பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆராயா மல் அதனைத் தவிர்ப்பதன் மூலம் மன அழுத்தம் அதிகமாகின்றது. எனவே பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது உரிய நேரத்தில் தீர்வு காண்பது முக்கியமாகும்.
அத்துடன் உடல், உள நலனை மேம்படுத்தும் யோகா போன்ற பயிற்சிகளில் தினம் தோறும் தவறாது ஈடுபடுதல் வேண்டும் என நிபுணரால் அறிவுரை வழங்கப்பட்டது.
டிஜிடல் பாதுகாப்பு
ஊடகவியலாளர்களால் தவிர்க்க முடியாததும் மிக அதிகளவில் பாதிப்புக்குள்ளாகும் காரணியாக இணையப் பயன்பாடு உள்ளது. சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டின் போது பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவர்களை உளவியல் ரீதியாக பாதிப்பதுடன் சில நேரங்களில் அவர்களை தற்கொலை முயற்சிகளுக்கும் தூண்டுகின்றன.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெண்களின் டிஜிடல் பாதுகாப்பு குறித்து முன்னாள் ரொய்டர் செய்திச்சேவையின் நிருபர் ஷிஹார் அனீஸினால் அறிவுறுத்தப்பட்டது.
பெண்களின் உணர்வுரீதியான பலவீனத்தை ஆயுதமாகக் கொள்ளும் சிலர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பெண்களை பாலியல் ரீதியாக அடிமைப்படுத்தும் பல சந்தர்ப்பங்கள் எடுத்துரைக்கப்பட்டதுடன், அவ்வாறான சந்தர்ப்பங்களில் பெண்கள் தமது பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதன்போது சமூக வலைத்தளங்களில் தனிநபர் பாதுகாப்பு குறித்து காணப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான, சுயவிபரங்களை காட்சிப்படுத்துவதை தவிர்த்தல், சரியாக தெரியாத நபர்களை நண்பர்களாக இணைப்பதை தவிர்த்தல், உணர்வுகளுடன் தொடர்புடைய தகவல்கள், புகைப்படங்கள் போன்றவற்றை இணையத்தில்(ஒன்லைன்) பகிர்வதை தவிர்க்கும்படி ஆலோசனை வழங்கப்பட்டது.
ஒருவர் உணர்வு ரீதியாக எம்மைத் தாக்கமுற்படும் போது, பதற்றம் அடையாது பிரச்சினையின் சிக்கல் தன்மையை புரிந்து கொள்ள முயற்சிப்பதுடன், வலைத்தளங்களின் பாதுகாப்பு பிரிவை நாடுவது சிறந்த யோசனையாக முன்வைக்கப்பட்டது. எனினும் அதனை கடந்து பிரச்சினை தீவிரமடையும் பட்சத்தில் பொலிஸாரினதும் நீதித்துறையினதும் உதவியை நாடுவதற்கு அறிவுரை வழங்கப்பட்டது.
தற்பாதுகாப்பு
ஊடகவியலாளர் என்ற வகையில் ஒரு சம்பவம் தொடர்பில் அறியக்கிடைக்கும் போது அதனை பதிவு செய்வதற்கு ஆண், பெண் பேதமின்றி தயாராக இருத்தல் வேண்டும். அவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஊடகவியலாளர் தமது பணியை முன்னெடுக்கும் போது கவனம் செலுத்த வேண்டிய பாதுகாப்பு முன்னாயத்தங்கள் குறித்து முன்னாள் ஊடகவியலாளரும் தற்போது இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் அலுவலருமான கமல் லியனாராச்சி சிறப்பான முறையில் ஆலோசனை வழங்கினார்.
ஒரு சம்பவம் தொடர்பில் அறியக்கிடைத்தவுடன் ஊடகவியலாளராக ஒருவர் எப்போதும் பதற்றமடையக் கூடாது, முதலில் குறித்த பிரதேசத்தின் பொலிஸார் மற்றும் நம்பகமான தரப்பினரை அணுகி, சம்பவம் குறித்து உண்மைத் தன்மை, கள நிலவரம் குறித்து தெளிவைப் பெறுதல் வேண்டும்.
அனைத்து செய்திகளை விடவும் தமது உயிர் முக்கியமானது என்பதை ஒவ்வொரு ஊடகவியலாளரும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். சம்பவ இடத்தில் முகம் கொடுக்க நேரும் பிரச்சினைகள் தொடர்பில் முன்பே யூகித்து அதற்கான முன்னாயத்தங்களுடன் சம்பவத்தைப் பதிவு செய்வதற்கு தயாரா குதல் வேண்டும்.
சம்பவத்தின் தன்மைக்கு ஏற்ப, எமது உடை, காலணி என்பவை குறித்து கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் களத்திற்குச் செல்லும் போது ஊடகவியலாளர் எப்போதும் தமக்கான ஒரு சிறப்பு மேலங்கியை அணிந்திருத்தல் கட்டாயமானது என விளக்கமளிக்கப்பட்டது.
ஊடகவியலாளர் என்பதை வெளிப்படுத்தக் கூடாத சந்தர்ப்பதைத் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் இம்மேலங்கியை அணிந்தி ருத்தல் அவசியமாகும். அத்துடன், பாதுகாப்பு உபகரணத் தொகுதி, முதலுதவித் தொகுதி என்பவற்றையும் தம்மு டன் வைத்திருத்தல் முக்கியமானது என அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக போரட்டங்கள், இயற்கை அனர்த்தங்கள், பயங்கரவாதத் தாக்குதல்கள் போன்றவற்றை அறிக்கையிடச் செல்லும் போது ஊடகவியலாளரின் பாதுகாப்பு தொடர் பான முன்னாயத்தங்களில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இதனைத் தொடர்ந்து, ஊடகவியலாளர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகும் போது அதனைத் தடுப்பது மற்றும் இலகுவான முறை யில் எதிர் தாக்குதல் நடத்துதல் குறித்து இலங்கை டேக்வாண்டோ அமைப்பினால் சில தற்காப்பு பொறிமுறைகள் குறித்து பயிற் சியளிக்கப்பட்டது.
அத்துடன் இவ்வாறான தற்காப்பு கலை ஒன்றை ஒரு பெண் ஊடகவியலாளர் பயிற்சி பெற வேண்டியதன் அவசியம் குறித்தும் டேக்வாண்டோ அமைப்பின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளரால் அறிவுரை வழங்கப்பட்டது.
-ஜெயந்தி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM