வடக்கு கிழக்கை இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது
* ரணிலை விட சில விடயங்களை ஜனாதிபதி கோத்தாபயவிடம் எதிர்பார்க்கலாம்
* எமது பிரசாரங்கள் மூன்று அடிப்படைகளில் அமையும்
பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றால் அது தவறான எண்ணமாகும். சரியான சந்தர்ப்பத்தில் நிபந்தனைகளுடன் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் திடமாகவும் கொள்கை பிடிப்போடும் கேள்வியெழுப்பும் திராணி கொண்ட ஒருவர் அல்லது இருவர் மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலே போதுமானது. அவ்வாறானவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் அப்படியானவர்களை அங்கு அனுப்புவதற்கான முயற்சியிலேயே நாம் இறங்கியிருக்கின்றோம் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியின் வியூகம் மற்றும் ஜெனீவா பேரவை தொடர்பில் வீரகேசரி வார வெளியீட்டுக்கு அவர் வழங்கிய செவ்வியின் விபரம் இங்கு தரப்படுகின்றது.
கேள்வி: தமிழ்க் கட்சிகள் பிளவுபடக்கூடாது என தமிழீழ விடுதலைப் புலிகள் நினைத்ததாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானது. ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை. நீங்களும் ஒரு கட்சியை தொடங்கியுள்ள சூழ்நிலையில் எந்தளவுக்கு இது தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று நினைக்கின்றீர்கள்?
பதில்: எல்லோர் மனதில் இருக்கும் கேள்வியும் இது தான். நாம் எல்லோரும் ஒருமித்து 15 பேரை ஐந்து வருடங்களுக்காக பாராளுமன்றத்துக்கு அனுப்பினோம். இன்று வரையில் அவர்கள் தமிழர்களுக்கு என்ன செய்திருக்கின்றார்கள்? நான் பாராளுமன்றத்தில் இருந்திருந்தால் முதலாவது வருடத்திலேயே ஒரு பிரச்சினையை எடுத்தியிருப்பேன். அதாவது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்கிறோம். ஆனால் நீங்கள் சிறையிலிருக்கும் 300 பேர் வரையான தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என உறுதி வழங்க வேண்டும் என்று கேட்டிருப்பேன். ஏனென்றால் இது சாத்தியமான விடயமாகும். ஜே.வி.பி காலத்தில் அனைவரையும் அப்போதைய அரசாங்கம் பொது மன்னிப்பில் விடுதலை செய்திருந்தது. ஆகவே இது ஓர் உதாரணமே. இவ்வாறு பல வழிகளில் அரசாங்கத்துக்கு நெருக்குதல்களை செய்திருந்தால் எமது மக்களுக்கு பல விடயங்களைப் பெற்றுக்கொடுத்திருக்கலாம். எதிர்வரும் தேர்தலில் வடமாகாணத்திலிருந்து பாராளுமன்றத்துக்குச் செல்பவர்களில் ஓரிருவர் தவிர மற்ற அனைவருமே தமிழர்களாகவே இருக்கப்போகின்றனர். அவர்கள் அங்கு சென்று தமிழர்கள் சார்பாக ஒருமித்து சில விடயங்களில் முடிவுகளை எடுக்கக்கூடும். ஒரே கட்சியிலிருந்து அத்தனைப்பேர் சென்று நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்ததில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஆகவே கொள்கை ரீதியாக திடமாக அரசாங்கத்துக்கு சில விடயங்களை சொல்லக்கூடிய ஓரிருவர் அந்த 15 பேருக்கு இணையானவர்கள் என்பது தான் எனது கருத்து. ஆகவே உறுப்பினர்களின் தொகையைக் கொண்டு அவர்கள் ஏதோ செய்யப்போகின்றார்கள் என எண்ணுவது தவறு.
கேள்வி: கடந்த காலங்களில் உங்களை விமர்சித்தவர்களுடன் கூட்டு சேர்ந்திருக்கின்றீர்களே? அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
பதில்: மக்களின் நன்மை கருதி எமக்கு எதிரான கருத்துகளை கொண்டிருப்பவர்களிடமும் கூட்டு சேர வேண்டிய அவசியம் இருக்கின்றது. தனித்தனியாக கட்சி ரீதியாக இயங்கும் போது விமர்சனங்கள் அல்லது எதிரான கருத்துகளுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும். ஆனால் தமிழ் மக்களுக்காக ஒருமித்து பயணிக்கும் போது எத்தகைய முரண்பாடுகளை கொண்டவர்களும் ஒருமித்து செயற்பட முடியும் என்பதையே நாம் உணர்த்தியுள்ளோம். எங்களிடம் இணைந்துள்ள நான்கு பேரும் ஒரு பலமான கூட்டணியை அமைத்துள்ளார்கள். ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதை மக்களிடத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்துவோம். எங்களிடத்திலே இரகசியமான சிந்தனைகள் இல்லை. தற்செயலாக எங்களில் யாராவது ஒருவர் தவறான வழியில் சென்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
கேள்வி: அப்படியானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் போது ஏன் இது சாத்தியமற்றுப் போனது?
பதில்: எங்களுடைய சிந்தனையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு சிலர் தங்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற மமதையிலும் அகந்தையிலும் ஆணவத்திலும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறலாம். நல்லாட்சி அரசாங்கத்தின் பெப்ரவரி 3 ஆம் திகதி அதாவது சுதந்திர தினத்துக்கு முதல் நாளன்று எனது வீட்டுக்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் சுமந்திரனும் வருகை தந்திருந்தார்கள். அப்போது சம்பந்தன் என்னிடம் ‘நாளை சுதந்திர தின நிகழ்வுக்கு வருவீர்களா’ என்று கேட்டார். அதற்கு நான் தயவுசெய்து அதைப்பற்றி என்னிடம் கதைக்காதீர்கள் நீங்கள் வேண்டுமானால் செல்லுங்கள் என்றேன். ஏனெனில், 1958 ஆம் ஆண்டு நான் றோயல் கல்லூரியில் மாணவனாக இருந்த போது ஒரு சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொண்ட பிறகு இதுவரை எந்தவொரு நிகழ்விலும் ஏன் நீதியரசராக பதவி வகித்த காலத்திலும் நான் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கு கொண்டதில்லை. ஏனென்றால் இலங்கை தமிழர்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடு. எனது கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது ஒரு நல்ல ஆட்சி மலர்ந்திருக்கின்றது. ஆகவே அவர்களுக்கு எமது ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றார்கள். ஒத்துழைப்பை நல்குவதில் பிரச்சினையில்லை ஆனால் அவர்களிடமிருந்து எமது மக்கள் சார்பாக சிலவற்றை பெற்றுக்கொள்வதாக இருத்தல் வேண்டும் என்றேன். ஆனால் அதற்கு அவர்கள் உடன்படவில்லை. ஆகவே கொள்கை ரீதியாக ஒத்துப் போகாவிட்டால் நான் என்ன செய்வது? மக்களுக்கு ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கையில் தான் இந்த முதுமையிலும் நான் அரசியலில் பிரவேசித்தேன். ஆனால் அவர்கள் என்னை செயற்பட விடவில்லை.
கேள்வி: சஜித் பிரேமதாஸவை தமிழ்க் கட்சிகள் ஆதரிப்பதை பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: என்னைப்பொறுத்தவரை சிங்களத் தலைவர்கள் அனைவருமே தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதற்கு தயங்குகின்றனர். தமிழர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அவர்கள் உள் மனதில் நினைத்தாலும் கூட தேர்தல்களின் போதோ அல்லது சிங்கள மக்கள் மத்தியில் அதை வெளிப்படுத்துவதில்லை. ஆகவே தமிழர்களுக்கு ஏதாவது செய்வோம் என சிலர் பாசாங்கு செய்வார்கள் சிலர் வெளிப்படையாக ஒன்றும் செய்ய மாட்டோம் என்பார்கள். சஜித்தை பொறுத்த வரை அவர் எப்போதுமே சிங்கள பெளத்த சிந்தனையில் இருப்பவர். அவரது நடவடிக்கைகளும் அவ்வாறே இருக்கின்றன. இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெளிப்படையாக அவருக்கு ஆதரவு என்று அறிவித்ததாலேயே அவர் தோல்வியை தழுவினார். அந்த ஆதரவு அறிவிப்பு சிங்கள மக்களை சிந்திக்கத் தூண்டியது. எனக்குத் தெரிந்த வரை அவருக்கு ஆதரவு அளிக்கவிருந்த மக்கள் மற்றும் சிங்களத் தலைவர்கள் இந்த அறிவிப்புக்குப் பின்னர் தமது எண்ணங்களை மாற்றிக்கொண்டனர். ஆகவே அவர் ஒரு சிங்கள பெளத்த அரசியல்வாதியாகவே இருக்கின்றாரே ஒழிய ஒரு பரந்துபட்ட சிந்தனை கொண்ட முழு நாட்டு மக்களையும் ஒன்றாக நோக்கக் கூடிய ஒரு மனிதாபிமானம் கொண்ட பின்னணி அல்லது பின்புலம் அவருக்கு இல்லை.
கேள்வி: கூட்டமைப்பை எதிர்த்து உங்களால் அதிக ஆசனங்களை பாராளுமன்றத் தேர்தலில் பெற முடியுமா?
பதில்: இத்தனை நாள் வரையில் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் மக்களுக்கு ஒரு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. மக்களிடத்தே இவர்கள் பற்றிய எதிர்கருத்துகள் நிலவுகின்றன. ஆகையால் அவர்களுக்கு வாக்களிப்பதை மக்கள் தவிர்ப்பர். எனினும் எமது கட்சி புதியது. இது ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் கூட இல்லை. எனினும் மக்கள் நலம் சார்ந்து சிறந்த கொள்கையுடன் களமிறங்குகிறோம். ஆகவே மக்கள் எமக்கு ஆதரவை நல்குவார்களேயானால் எம்மால் வெற்றி பெறலாம். மேலும் அதிக ஆசனங்களைப் பெறுவதற்கு எங்களால் ஆன முயற்சிகளை மேற்கொள்வோம்.
கேள்வி: அவ்வாறு உங்கள் கட்சி வெற்றி பெறும் பட்சத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் சாத்தியமுள்ளதா?
பதில்: எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பது இதுவரை தெரியாது. ஆனால் எந்த அரசாங்கம் வந்தாலும் எமக்கான முக்கியமான விடயம் தமிழ் மக்களின் எதிர்காலம். வெறுமனே அவர்களுக்கு ஆதரவு அளித்து கொண்டு கைகளை உயர்த்தி காலத்தை கடத்தும் எண்ணம் கிடையாது. அந்த அரசாங்கம் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய விடயங்களைப் பெற்று கொண்டு அல்லது அதற்கான வழிவகைகள் ஊடாகவே அவர்களுடன் இணைந்து கொள்ளும் சாத்தியங்களை ஆராய்வோம்.
கேள்வி: வடமாகாணத்தின் முதலமைச்சராக ஐந்து வருடங்கள் இருந்தீர்கள். முதலமைச்சராக சாதிக்க முடியாதவற்றை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக சாதிக்க முடியும் என்று கருதுகின்றீர்களா?
பதில்: நிச்சயமாக, காரணம் வடமாகாண சபையின் அதிகாரங்கள் மிக மிக குறைந்தவையாகும். மத்திய அரசாங்கத்தினால் பல வழிகளிலும் அதை கட்டுப்படுத்த முடியும். அப்படி நடந்ததால் தான் என்னால் ஒன்றையும் செய்ய முடியாது போனது. அதை விட எனது சொந்த கட்சியே எனக்கு எதிராக வேலை செய்யும் போது எவ்வாறு இயங்குவது? முதலில் முதலமைச்சரின் நிதியை எனக்குப் பெறமுடியவில்லை. ஒரு வெளிநாட்டு நிறுவனம் வன்னியில் பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்து அதை ஏற்றுமதி செய்யும் திட்டமொன்றை கொண்டு வந்தது. அதன் மூலம் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலைமை இருந்தது. சிறந்த நீர்வளம், சுற்றாடல் மற்றும் காலநிலை என்பன சிறப்பாக இருக்கின்றன என நிறுவனம் மிகவும் திருப்தியடைந்தது. எனினும் அத்திட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லை. ஏனென்றால் குறித்த காணி வனவளத் திணைக்களத்துக்கு சொந்தமானது என அரசாங்கம் கூறியது. வரை படத்தின் படி அது எவருக்கும் சொந்தமானதில்லை என்று ஆதாரங்களை காட்டினோம். அது பழையது புதிய வரைபடம் எங்களிடம் உள்ளது என்றார்கள். எப்போது புதிய வரைபடம் வந்தது என்று கேட்டோம். 2007 ஆம் ஆண்டு என்றார்கள். அப்போது தான் யுத்தம் நடந்து கொண்டிருந்ததே எவ்வாறு வரைபடம் கீறப்பட்டது என்று கேட்டதற்கு வானத்திலிருந்து கூகுள் வரைபடம் மூலம் பெற்றோம் என்றார்கள். அது சட்டத்துக்கு புறம்பானது என்று கூறினாலும் இல்லை இடத்தை தர முடியாது என்றார்கள். இப்படி எத்தனையோ தடைகள். அரசாங்கத்தின் அதிகாரிகள் எம்மை ஒன்றும் செய்யவிடவில்லை. வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள் கூட சில விடயங்களில் தெளிவைப் பெறுவதற்கு எம்மையே நாடி வந்தார்கள்.
ஏனென்றால் நாங்கள் எமது பிரச்சினையை பலருக்கும் தெரிவித்திருந்தோம். அதற்கும் தடை வந்தது. இவர் மாகாண சபைக்காரர் தானே எவ்வாறு எம்.பிக்களுடன் பேச முடியும் என்றார்கள். அவர்களுடன் கதைத்து எதையும் பெற முடியாது என்ற காரணத்தினாலேயே அவர்கள் என்னை நாடி வந்தனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு உயர்ஸ்தானிகராக செயற்பட்ட ஹுசைன் வருகை தந்தபோது காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை நூல் வடிவமாக கொடுத்தோம். ஆகவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால் சர்வதேசத்துடன் தொடர்புகளை பேணலாம். அதில் தடைகள் இருக்காது.
கேள்வி: ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் உங்கள் கருத்துகள் கோத்தாபய ராஜபக் ஷவுக்கு சார்பாக இருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்ததே?
பதில்: எந்த ஒரு உணர்வுள்ள தமிழ்மகனும் கோத்தாபயவுக்கு வாக்களிக்க மாட்டார் என்றும் நான் கூறியிருந்ததையும் நீங்கள் அவதானிக்க வேண்டும். சில நேரங்களில் சிலர் நேரடியான நடவடிக்கைகளை எடுப்பர், முகத்துக்கு முன்பாக பேசுவர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் எமக்கு கோபம் எழலாம் அல்லது கருத்துப்பரிமாறல்கள், விவாதங்கள் நடக்கலாம். அதேவேளை நேரடியாக கதைப்பதன் மூலம் சில நேரங்களில் தீர்வுகளையும் பெறலாம். அந்த வகையில் எதையும் நேரடியாக பேசும் ஒருவராக கோத்தாபய இருக்கிறார் என்று தான் நான் கூறினேன். இவ்வாறானவர்களிடம் பேச்சு நடத்தலாம். அதாவது முடியும் அல்லது முடியாது என நேரடியாகவே கூறும் போது நாம் அடுத்த கட்டம் பற்றி சிந்திக்கலாம் அல்லவா? ஆனால் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களிடம் இந்த குணம் இல்லை. ஜெனீவா விவகாரத்திலும் அப்படித்தான் நடந்து கொண்டனர். இணை அனுசரணை ஒன்றை கோரி நின்றனர். தீர்வுக்கு இரண்டு வருடங்கள் கேட்டனர். பின்னர் மறுபடி இரண்டு வருடங்கள் கேட்டனர். இறுதியாக இன்னும் இரண்டு வருடங்களை கோரினர். இதன் மூலம் என்ன நடந்தது. தமிழ் மக்களுக்கு ஒன்றையுமே பெற்றுக்கொடுக்காது காலத்தை கடத்திய அதே நேரம் தமிழ்ப் பிரதிநிதிகளையும் தமது பக்கம் வைத்துக்கொண்டனர்.
ஜனாதிபதி கோத்தாபய என்ன செய்தார்? இணை அனுசரணையிலிருந்து வெளியே வருகிறேன் என நேரடியாகவே கூறி அதை செய்து முடித்தார். இதை நீங்கள் கவனிக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்படியான ஒருவருடன் சில விடயங்களை கதைத்து தீர்வை பெறலாம். இவர் வெளிப்படையாக இயங்குகிறார் என்பதையே நான் கூற வருகிறேன். ஆகவே சில தலைவர்களின் குணாதிசயங்கள் அறிந்து அவர்களுடன் பேச வேண்டும். நான் கூறிய மற்ற தரப்பினரோ எமக்கு உதவுவது போன்று நடித்து எம்மை திசை திருப்பி இறுதியில் கை விட்டு விடுவர்.
எந்த சந்தர்ப்பத்திலும் தமக்கு முடியும் அல்லது முடியாது என வெளிப்படையாக பேசவே மாட்டர். அந்த அர்த்தத்திலேயே நான் ஜனாதிபதி கோத்தாபய பற்றி கூறினேன்.
கேள்வி: ஜெனீவா பிரேரணையிலிருந்து இலங்கை விலகியமை தமிழர்களுக்கு எந்தளவுக்கு சாதகமாக உள்ளது?
பதில்: பிரேரணையிலிருந்து விலகியமை தமிழர்களுக்கு சாதகமான விடயம் தான். சர்வதேசம் தொடர்ந்தும் தமிழர்கள் சார்பாக பேச ஆரம்பித்துள்ளதே. ஜனாதிபதி கோத்தாபய எமக்கு சாதகமானவர் இல்லை தான் . ஆனால் தமிழர்களுக்கு சாதகமான ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது என்பேன். மேலோட்டமாக பார்க்கும் போது தமிழர்களுக்கு நீதி கிடைக்காது போகுமோ என்ற அச்சம் தோன்றியிருக்கின்றது. ஆனால் அவர்களுக்கு சாதகமான சம்பவங்கள் இடம்பெறும் ஒரு சூழல் உருவாகியிருப்பதை நாம் அவதானிக்கலாம்.
கேள்வி: உங்கள் கட்சியானது என்ன அடிப்படையில் மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுக்கப்போகின்றது?
பதில்: நாம் முக்கியமான மூன்று விடயங்களை அடிப்படையாகக்கொண்டு எமது பிரசாரங்களை முன்னெடுக்கப்போகின்றோம்.
1) அரசியல் ரீதியான தன்னாட்சி
2) மக்கள் சார்பான தற்சார்பு (Self –Reliant)
3) தன்னிறைவு
அரசியல் ரீதியாக எதையும் பெற்றுக்கொள்வதில் எமக்கு நம்பிக்கை உள்ளது. ஆகவே எமது சமூகத்துக்கான தன்னாட்சி என்ன என்பது குறித்து விவாதித்து அதை பெற முயற்சிப்போம். வடக்கு கிழக்கை இணைக்க வேண்டிய அவசியம் குறித்து நாம் மக்களுடன் கதைத்து வருகின்றோம். தன்னாட்சி என்பது வெறுமனே ஒரு யோசனை அல்ல. தமிழ் மக்கள் இருக்கும் பிரதேசத்தில் அவர்களுக்கான ஒரு தனி அலகு அவசியம். இல்லாவிடின் அது எதிர்காலத்தில் வேறு சிக்கல்களை தோற்றுவிக்கும். ஆகவே அந்த தாக்கம் ஏற்படும் முன்னர் வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதேவேளை தற்சார்பு எனும் போது மற்றவரிடத்திலேயே எல்லாவற்றையும் கேட்டு பெறல் அல்லது என்ன கிடைக்கும் என்று எதிர்பார்த்திருத்தல் , மற்றவரிடத்தில் தங்கியிருத்தலை அகற்ற வேண்டும். போருக்குப் பின்னர் இந்த நிலைமை அதிகரித்துள்ளது. எங்களில் நம்பிக்கை வைத்து தற்சார்பாக அதாவது தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளும் நிலைமைக்கு சமூகத்தை மாற்றியமைக்க வேண்டும். அடுத்ததாக தன்னிறைவு. எங்கள் பிரதேசத்தில் எல்லா வளங்களும் நிறைந்து கிடக்கின்றன. ஆனால் நாம் மற்றவரிடத்தில் கையேந்தி நிற்கும் நிலைமைகள் தொடர்கின்றன. அதாவது எல்லாவற்றையும் தெற்கிலிருந்து பெற வேண்டிய நிலைமைகளை மாற்ற வேண்டும். சில விடயங்களில் தாராளமாக நாம் தன்னிறைவை பெறலாம். அதாவது எமக்கு போதிய காய்கறிகளை இங்கு பெற்று அதை பின்பு இங்கிருந்து தெற்கிற்கு அனுப்பலாம். அதற்கடுத்து வெளிநாட்டுக்கும் அனுப்பலாம். அவ்வாறானதோர் சூழலை அரசியல் அதிகாரங்களுடன் மாற்றியமைக்கலாம். அதாவது எங்களை நாம் பொருளாதார ரீதியாக பலப்படுத்திக்கொண்டால் ஏனைய விடயங்களைப்பற்றி பேசலாம்.
கேள்வி: நீங்கள் முன்வைத்துள்ள மூன்று விடயங்களில் தன்னாட்சி என்ற விடயம் தனி நாட்டு கோரிக்கை போன்று அர்த்தப்படுகின்றது. பெரும்பான்மையினத்தவர்களிடம் இது சர்ச்சையை ஏற்படுத்தாதா? எவ்வாறு அவர்களுக்கு விளக்கப்போகின்றீர்கள்?
பதில்: ஆம் சற்று கடினமான காரியம் தான். ஏனென்றால் உண்மையாக தூங்கிக்கொண்டிருப்பவனை எழுப்பலாம் பாசாங்கு செய்பவனை எழுப்ப முடியாது. சமஷ்டி என்பது நாட்டை பிரிப்பது அல்லது அது ஐக்கியப்படுத்துவது என்பது சிங்களத் தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் அரசியல் ரீதியாக நன்மைகளைப் பெறுவதற்கு நாட்டை பிரிக்கிறார்கள் என்று மக்கள் மத்தியில் பிரசாரத்தை மேற்கொள்வார்கள். அதில் எம்மை பலிகடாவாக்குவார்கள். ஆனால் நான் எமது கொள்கை குறித்து சிங்கள மக்களிடம் பேசிக்கொண்டிருக்கின்றேன். தன்னாட்சி என்றால் அந்த பிரதேச மக்களின் சுயாட்சி என்பதன் அர்த்தத்தை விளங்கப்படுத்த வேண்டியதாகவுள்ளது. சில சிங்கள ஊடகங்களின் மூலம் அதை வெளிப்படுத்தியிருந்தேன் மேலும் மகாநாயக்கர்களை சந்தித்தேன். எனினும் அது போதாது என்று தான் கூற வேண்டும். எனினும் நான் பாராளுமன்றம் சென்றால் நிச்சயமாக அதை சிங்கள மக்களிடம் எடுத்துக் கூற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். அந்த மக்களிடம் நேரடியாகச் சென்று புரிந்துணர்வை ஏற்படுத்துவேன்.
நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் காலி மாவட்ட சட்டத்தரணிகள் அமைப்பினர் என்னுடன் சந்திப்பை ஏற்படுத்தினர். நான் சமஷ்டி மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து பேசினேன். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் சட்டம் படித்தவர்கள் . சமஷ்டி என்பது நாட்டை ஐக்கியப்படுத்துமே ஒழிய பிரிக்காது என்று அவர்களுக்கு நன்றாகத்தெரியும் . ஆகவே சிங்கள மக்களுக்கு போதுமான புரிந்துணர்வை நாம் ஏற்படுத்தினால் இதில் நாம் வெற்றி காண முடியும்.
கேள்வி: நாட்டில் ஏனைய பிரதேசங்களிலும் வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றனவே குறிப்பாக மலையக மக்கள்?
பதில்: நான் இல்லை என்று கூறவில்லை. ஆனால் எமது நோக்கங்கள் பிரதானமாக வடக்கு கிழக்கு மக்களை மையப்படுத்தியதாக இருக்கின்றன. ஆனாலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்து வரும் மக்களிடம் நாம் தொடர்புகளை பேணி வருகின்றோம். மலையகத்தைப் பொறுத்தவரை எங்கள் கருத்துக்களோடு ஒத்துப் போகின்ற பிரதிநிதிகளுக்கு நாம் ஆதரவை தர வேண்டுமே ஒழிய நாம் அங்கு சென்று எமது பிரதிநிதிகளை தேர்தல்களில் நிறுத்தக்கூடாது. அது இரு தரப்பினருக்கும் பொருத்தமில்லாத செயலாகும். மலையகத்தில் மட்டுமல்ல ஏனைய இடங்களிலும் தான். தமிழ் மக்கள் என்றால் அனைவரும் ஒருவரே. ஆனால் அவர்கள் வாழ்ந்து வரும் சூழலில் பிரச்சினைகள் வேறுபடுகின்றன. மலையகம்,வடக்கு ,கிழக்கு மற்றும் தலைநகர் ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறுபட்டவை. ஆகவே அந்தந்த பிரதேசங்களில் அந்தந்த மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களுக்கு நாம் அனுசரணையாக இருக்க வேண்டுமே ஒழிய அங்கு சென்று அந்த மக்களிடம் எமது கட்சி அடையாளத்தையோ அல்லது எமது நோக்கங்களையோ திணிக்க முற்படக் கூடாது. எங்கிருந்தாலும் தமிழ் மக்கள் எமது சகோதரர்களே. அவர்களை வேற்றுமை படுத்தி பார்க்கக் கூடாது.
கேள்வி: புதிய தேசிய கட்சியாக உருவெடுத்திருந்தாலும் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு விளங்குகிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன. உங்கள் தன்னாட்சி கோரிக்கை தேர்தல் பிரசாரமாக முன்னெடுக்கப்பட்டால் மீண்டும் அந்த கட்சியினரே ஆட்சியமைக்கக்கூடிய சூழல் ஏற்படாதா?
பதில்: பேரினவாத சக்திகள் வடக்கு கிழக்கில் ஊடுறுவக்கூடிய சாத்தியங்கள் இல்லை. அதேவேளை தெற்கில் இது ஒரு பிரசாரமாக கொண்டு செல்லப்பட்டால் அது சிங்கள மக்களின் ஆதரவை பெறக்கூடிய ஒரு விடயமாகத்தான் இருக்கும். மாறாக தமிழ் மக்களுக்கு எதிரானதாக இருக்காது. இங்கு அது வேறு கட்சிகளின் மூலம் முன்னெடுக்கப்பட்டாலும் தமிழ் மக்களிடம் எடுபடாது. கூறப்போனால் எனக்கெதிரான பிரசாரங்களே இங்கு முன்னெடுக்கப்படும். தமிழ் மக்களுக்கு எதிராக இங்கு ஒன்றும் எடுபடாது.
இருப்பினும் தமிழ் மக்களுக்கு இவ்வாறான ஒரு தீர்வை நாம் பெற வேண்டுமானால் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுக்கொண்டவர்களிடமிருந்து மட்டும் தான் அதை பெற்றுக்கொள்ள முடியும். அவர்களின் ஆதரவு இல்லாதவர்களிடம் இதை பெற முடியாது. ஆகவே தற்போதைய அரசாங்கத்தின் எண்ணங்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குப்பின்னர் மாற்றமடையும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
கேள்வி: உங்கள் கூற்றுப்படி சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்ற தற்போதைய ஜனாதிபதியிடமிருந்து தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றீர்களா?
பதில்: நாம் எதிர்ப்பார்க்கும் அளவிற்கு தீர்வு கிடைக்கும் என கூற முடியாது. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவை விட கூடுதலான சில விடயங்களை இவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. தற்போதைய உலக அரசியலின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்துக்கு பல நெருக்கடிகள் ஏற்படக்கூடிய சாத்தியகூறுகள் உள்ளன. அதையும் எமக்கு சாதகமாகப் பாவித்து பல விடயங்களை அவர்களிடமிருந்து பெறலாம் என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது.
ஆர்.பி, சி.சி.என்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM