முரண்பாடும் சங்கடமும்!

Published By: J.G.Stephan

09 Mar, 2020 | 02:26 PM
image

சட்டம் ஒழுங்கு இல்­லையேல் அந்த ஆட்­சி­யினால் மக்­க­ளுக்குப் பயன் இல்லை என்றே கூற வேண்டும். சட்டம் ஒழுங்கு நிலை­நாட்­டப்­பட்டால் மாத்­தி­ரமே நாட்டு மக்­களின் வாழ்க்கை சீரா­ன­தா­கவும் ஓர் ஒழுங்கு முறையைக் கொண்­ட­தா­கவும் அமையும். குற்­றச்­செ­யல்­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்கி பொறுப்பு கூறப்­ப­டா­விட்டால், குற்­றச்­செ­யல்­களைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. அத்­த­கைய ஒரு நிலையில் நாக­ரி­கமும் கௌர­வமும் கொண்ட வாழ்க்கை முறை மக்­க­ளுக்கு மறுக்­கப்­பட்­டு­விடும். சட்டம், ஒழுங்கு இல்­லாத இடத்தில் நல்­லாட்சி நிலவ முடி­யாது.

ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 30/1 பிரே­ர­ணைக்­கான அனு­ச­ர­ணையில் இருந்து இலங்கை அரசு விலகி இருப்­பது உள்­ளூரிலும், சர்­வ­தேச மட்­டத்­திலும் கடும் கண்­ட­னங்­க­ளுக்கும் விமர்­ச­னங்­க­ளுக்கும் வழி கோலி­யுள்­ளது. ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அதி­ருப்­திக்கு ஆளா­கி­யுள்ள இந்த நட­வ­டிக்கை ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் உறுப்பு நாடுகள் பல­வற்றின் இலங்கை தொடர்­பான அரச ரீதி­யான உறவு நிலையில் சங்­க­ட­மான நிலை­மை­க­ளுக்கு வழி­வ­குத்­துள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

மனித உரிமை மீறல்­க­ளுக்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்­ப­தற்­காக 2015ஆம் ஆண்டு மனித உரிமைப் பேர­வையில் கொண்டு வரப்­பட்ட 30/1 தீர­்மா­னத்­திற்கு மைத்­திரி – ரணில் கூட்­ட­ர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்கி அதனை நிறை­வேற்­று­வ­தாக ஒப்­புக்­கொண்­டது. தொடர்ந்து அந்தத் தீர்­மா­னத்தை முழு­மை­யாக நிறை­வேற்ற வேண்டும் என வலி­யு­றுத்தி அடுத்­த­டுத்துக் கொண்டு வரப்­பட்ட 34/1, 40/1 ஆகிய தீர்­மா­னங்­க­ளுக்கும் முன்­னைய அரசு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. அதற்­க­மை­வாக அந்த அரசு ஆமை வேகத்தில் சில நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தது.

ஆனால் 2019 நவம்பர் மாதம் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்தல் ராஜ­பக் ஷக்­களின் கைகளில் மீண்டும் ஆட்சி அதி­கா­ரத்தைக் கொண்டு சேர்த்­த­தை­ய­டுத்து, அவர்­களின் மீள்­வ­ரு­கை­யுடன் அவர்­க­ளுக்கே உரிய கடும்­போக்கும், இரா­ணுவ மய­மான ஆட்சி நிர்­வா­கமும் நடை­மு­றைக்குத் திரும்­பி­யுள்­ளன.

இதனால் நாட்டில் ஜன­நா­யக ஆட்சி நில­வு­வ­தாகக் கூறி­னா­லும்­கூட, அதன் விழு­மி­யங்கள் நடை­மு­றையில் நெருக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளாகி நிலைமை மோச­ம­டைந்­து­வி­டுமோ என்ற அச்­சத்தைப் பர­வ­லாக ஏற்­ப­டுத்தி உள்­ளது. அதற்­கேற்ற வகை­யி­லேயே நாட்டின் ஆட்சி நிலை­மை­களும் படிப்­ப­டி­யாக மாற்றம் கண்டு வரு­கின்­றன.

அத்­த­கைய மாற்­றங்­களில் அதி­முக்­கிய நிகழ்­வாக ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 30/1 தீர்­மா­னத்­திற்கும் அதனைத் தொடர்ந்து வந்த மேலும் இரண்டு தீர்­மா­னங்­க­ளுக்கும் இலங்கை வழங்­கி­யி­ருந்த இணை அனு­ச­ர­ணையை ஜனா­தி­பதி கோத்­த­பாய அரசு விலக்கிக் கொண்­டுள்­ளது.

ஐ.நா. தீர்­மா­னத்­திற்­கான அனு­ச­ர­ணையில் இருந்து தன்­னிச்­சை­யாக விலகிக்கொள்­கின்ற அர­சாங்­கத்தின் முடிவை வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்­தன ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் நேர­டி­யா­கவே அறி­வித்தார்.

ஐ.நா. தீர்­மா­ன­மா­னது, இங்­கையின் இறை­ மையை மீறி­யதும், உள்­ளக விவ­கா­ரங்­களில் சர்­வ­தே­சத்தின் தலை­யீ­டு­மாகும் என்றும் அவர் இதற்­கான கார­ண­மாக சுட்­டிக்­காட்­டினார். பொறுப்புக் கூறு­வ­தற்­காக சர்­வ­தே­சத்தின் நீதி­ப­திகள் விசா­ர­ணை­யா­ளர்­களின் பங்­க­ளிப்­பு­ட­னான பொறி­முறை என்­பது இலங்­கையின் நெறி­மு­றை­களை – நீதித்­துறைக் கட்­ட­மைப்­புக்­க­ளுக்கு எதிர்­மா­றா­னது என்­பதே சர்­வ­தே­சத்தின் தலை­யீடு என்­ப­தற்­கான பொருள்­கோடல் என்ற வகையில் அவர் சுட்­டிக்­காட்டி இருந்தார்.

இணை அனு­ச­ர­ணையில் இருந்து வில­கு­வது என்­பது ஐ.நா. தீர்­மா­னத்தில் இருந்து அரசு முழு­மை­யாக வில­கிக்­கொள்­கின்­றதா என்ற கேள்­விக்கு அமைச்சர் தினேஷ் குண­வர்­த­னவின் ஐ.நா. மன்ற அறிக்­கையின் - உரையில் பதிலைக் காண முடி­ய­வில்லை.

ஆனாலும், முன்­னைய மைத்­திரி – ரணில் கூட்­ட­ர­சாங்­கத்தின் ஏற்­பாட்­டிற்­க­மை­­வாக அமைக்­கப்­பட்­டுள்ள காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­லகம் தொடர்ந்து செயற்­படும் என்றும் இழப்­பீட்­டுக்­கான அலு­வ­லகப் பொறி­மு­றையும் தொடரும் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். இது பிரே­ர­ணையில் இருந்து எந்த வகையில் அரசு விலகிக் கொள்­கின்­றது அல்­லது இணை அனு­ச­ர­ணையின் எத்­த­கைய பரி­மா­ணத்தில் அரசு முரண்­ப­டு­கின்­றது என்­பதைத் தெளி­வு­ப­டுத்­து­வ­தற்குப் போது­மா­ன­தாகக் காணப்­ப­ட­வில்லை.

அதே­வேளை, நீதி­ய­ரசர் ஒரு­வ­ரு­டைய தலை­மையில் விசா­ர­ணைக்­குழு ஒன்றை அமைத்து விசா­ர­ணைகள் நடத்­தப்­படும் என்றும் அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. இது ஐ.நா. தீர்­மா­னத்தின் அனு­ச­ர­ணையில் 

இருந்து வில­கிய பின்னர் அரசின் நட­வ­டிக்கை என்­ன­வாக இருக்கும் என்­ப­தற்­கான பதி­லாக அமைந்­துள்­ளது.

ஐ.நா. தீர்­மா­னத்­திற்­கான அனு­ச­ர­ணையில் இருந்து வில­கி­னாலும், நிலை­யான சமா­தானம், நல்­லி­ணக்­கத்தை இலக்­காகக் கொண்டு பொறுப்புக் கூறல் என்­ப­வற்றில் அரசு உறு­தி­யாக இருக்­கின்­றது. மனித உரிமை தொடர்பில் இலங்கை மக்­களால் விதிக்­கப்­பட்ட இலக்­கு­களை அடை­வ­திலும் அரசு உறு­திப்­பாட்­டுடன் இருக்­கின்­றது என்றும் அமைச்சர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்­துள்ளார்.

உண்­மையில் யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் காலம் கடந்த நிலை­யி­லேயே எல்­எல்­ஆர்சி என்ற கற்­ற­றிந்த பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்­கத்­திற்­கான ஆணைக்­குழு என்ற விசா­ர­ணைக்­குழு முதலில் மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டன. அந்தக் குழுவின் பரிந்­து­ரைகள் நாட்டின் மனித உரிமை நிலை­மை­களைப் பேணு­வ­திலும் அதற்­கான கடப்­பாட்­டிலும் மிகவும் முக்­கி­ய­மா­ன­வை­யாகக் கரு­தப்­பட்­டன.

சர்­வ­தேச அள­விலும் அந்தப் பரிந்­து­ரைகள் பொருத்­த­மான நட­வ­டிக்­கை­களை உள்­ள­டக்­கி­ய­தாகக் குறிப்­பி­டப்­பட்டு வர­வேற்­கப்­பட்­டி­ருந்­தன. ஆனால் அந்தப் பரிந்­து­ரைகள் அர­சாங்­கத்­தினால் ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­வில்லை. ஏனெனில் அந்தப் பரிந்­து­ரை­களை அர­சாங்கம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்­க­வில்லை.

எல்­எல்­ஆர்சி என்ற ஆணைக்­கு­ழு­வுக்குப் பின்­னரும் விசா­ரணைக் குழுக்கள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ­வினால் நிய­மிக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­ட­னவே தவிர, எந்­தவோர் ஆணைக்­கு­ழு­வி­னதும் பரிந்­து­ரைகள் மற்றும் கண்­டு­பி­டிப்­புக்கள் அர­சாங்­கத்­தினால் கவ­னத்திற் கொள்­ளப்­பட்டு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. இதனால் அந்த ஆணைக்­கு­ழுக்­களின் செயற்­பா­டுகள் வீண் விர­ய­மான செயற்­பா­டு­க­ளா­கவே ஆகிப் போயின.

நீதியும் நியா­யமும் உரிய நிவா­ர­ணமும் கிடைக்கும் என்று எதிர்­பார்த்­தி­ருந்த பாதிக்­கப்­பட்ட மக்கள் இந்த ஆணைக்­கு­ழுக்­களின் விசா­ரணை முறை­மை­க­ளி­லேயே அதி­ருப்தி அடைந்­தி­ருந்­தனர். நம்­பிக்கை இழந்­தி­ருந்­தனர். எனினும் அர­சாங்­கத்­தினால் நடத்­தப்­ப­டு­கின்ற அதி­காரம் வாய்ந்த ஒரு விசா­ரணை என்ற ஒரே கார­ணத்­திற்­காக அந்த விசா­ரணைக் குழுக்­களின் முன்னால் தோன்றி பலரும் வாக்­கு­மூ­லங்­களை வழங்­கி­னார்கள். சாட்­சி­யங்­களை முன்­வைத்­தார்கள். அவர்கள் நம்­பிக்­கை­யற்­றி­ருந்­தது போலவே இந்த விசா­ரணைக் குழுக்­களின் செயற்­பா­டுகள் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு எந்த வகை­யிலும் பல­ன­ளிக்­கவே இல்லை.

இறு­தி­யாக ஐ.நா. பிரே­ர­ணையின் முன்­மொ­ழி­வுக்கு அமை­வாக அமைக்­கப்­பட்­டுள்ள காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கமும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் நம்­பிக்­கையை வென்­றெ­டுக்­க­வில்லை. ஆமை வேகத்தில் உரு­வாக்­கப்­பட்ட அந்த அலு­வ­ல­கத்தின் மீது தமது நம்­பிக்­கை­யீ­னங்­களை வெளிப்­ப­டுத்­திய பாதிக்­கப்­பட்ட மக்கள் அதனை எதிர்த்­தார்கள். எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் பர­வ­லாக நடத்­தி­னார்கள்.

யாழ்ப்­பா­ணத்­திற்­கான அந்த அலு­வ­லகம் திறக்­கப்­பட்­ட­போது, அதற்கு எதி­ராகக் கிளம்­பி­யி­ருந்த எதிர்ப்­புக்கு அஞ்சி அதி­காலை வேளையில் பங்­கேற்­பா­ளர்கள் எவரும் அற்ற நிலையில் அதி­கா­ரிகள் சிலர் மட்டும் அந்த அலு­வ­ல­கத்தின் கதவைத் திறந்து - மூடி­விட்டுச் சென்­றார்கள்.

எனினும் அதன் அங்­கு­ரார்ப்­ப­ணத்தின் அடை­யா­ள­மாக யாழ்ப்­பாணம் மாவட்டச் செய­ல­கத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­ட­னான ஒரு சந்­திப்பை அந்த அலு­வ­லக அதி­கா­ரிகள் நடத்­தினர். அந்தச் சந்­திப்­பின்­போது கார­சா­ர­மான கண்­ட­னங்­களும் விமர்­ச­னங்­களும் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. எனினும் தமது நோக்கம் என்ன என்­பதை அந்த அலு­வ­ல­கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் உள்­ளிட்­ட­வர்கள் தங்­களால் இயன்ற அளவில் பங்­கேற்­றி­ருந்­த­வர்­க­ளுக்கு விளக்க முற்­பட்­டி­ருந்­தனர்.

ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய ராஜ­பக் ஷ பத­வி­யேற்­றதன் பின்னர், காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை மறு­சீ­ர­மைப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாகத் தகவல் வெளி­யாகி இருந்­தது. இந்த மறு­சீ­ர­மைப்பு என்­பது நிச்­ச­ய­மாக பாதிக்­கப்­பட்ட மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை நிறைவு செய்யும் வகையில் அல்­லது அவர்­க­ளுக்கு நியா­யத்­தையும் நீதி­யையும் வழங்கும் வகையில் அமையும் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

இத்­த­கைய ஒரு நிலை­மை­யி­லேயே தீர்­மா­னத்­திற்­கான அனு­ச­ர­ணையில் இருந்து விலகி, புதிய ஆணைக்­குழு ஒன்றை நிய­மிப்­பது குறித்த தக­வலை அமைச்சர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்­தி­ருந்தார். இந்த ஆணைக்­கு­ழுவின் நோக்கம் குறித்தும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் தொடர்பில் முன்­னைய விசா­ரணை குழுக்­க­ளி­னு­டைய பரிந்­து­ரை­களின் நடை­முறைத் தன்­மையை ஆராய்ந்து, 'அர­சாங்­கத்தின் கொள்­கைக்கு அமைய' சாத்­தி­ய­மான நட­வ­டிக்­கை­களை முன்­மொ­ழிந்து நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் ஒரு­வரின் தலை­மையில் ஆணைக்­குழு அமைக்­கப்­படும் என்று அவர் விளக்­க­ம­ளித்­தி­ருந்தார்.

ஆனால் இணை அனு­சர­ணையில் இருந்து இலங்கை வில­கு­வது குறித்து தமது அதி­ருப்­தியை வெளி­யிட்ட ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் மிச்சல் பச்லெட் மீண்டும் ஓர் ஆணைக்­குழு அமைக்­கின்ற ஆலோ­ச­னையை நிரா­க­ரித்தார். ஏற்­க­னவே இத்­த­கைய ஆணைக்­கு­ழுக்கள் அமைக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்ட போதிலும் காரி­யங்கள் எது­வுமே ஆக­வில்லை. மனித உரிமை மீறல்­க­ளுக்கு பொறுப்பு கூறப்­ப­ட­வில்லை. மனித உரிமை நிலை­மைகள் மேம்­ப­டுத்­தப்­ப­ட­வு­மில்லை என்­ப­தையும் அவர் சுட்­டிக்­காட்டி இருந்தார்.

இத்­த­கைய ஒரு சூழ­லில்தான் நாட்டில் பெரி­யதோர் அர­சியல் கலா­சார மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக மீண்டும் ஆட்சி அதி­கா­ரத்­திற்கு வந்­துள்­ள­தாக ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்­தி­ருந்த கருத்து தொடர்பில் எத்­த­கைய அர­சியல் கலா­சா­ரத்தை புதிய அரசு மேற்­கொள்ளப் போகின்­றது என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

அர­சியல் கலா­சார மாற்றம் வேண்டும் என்­ப­தற்­கா­கவே ஜனா­தி­பதி தேர்­தலில் மக்கள் தனக்கு வாக்­க­ளித்­த­தாக ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ தனது கொள்கை விளக்க உரையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இன­வா­தத்தின் அடிப்­ப­டை­யி­லான அர­சியல் நிகழ்ச்சி நிரல்­களை மக்கள் புற­மொ­துக்கி உள்­ளார்கள். ஆட்­சியை உரு­வாக்­கு­கின்ற சக்­தி­யாக இந்த நாட்டின் அர­சி­யலில் இனிமேல் எவரும் செல்­வாக்கு செலுத்த முடி­யாது என்­பதைப் பெரும்­பான்­மை­யான மக்கள் நிரூ­பித்­துள்­ளார்கள். இந்த அர­சியல் யதார்த்­தத்தை புரிந்து கொண்டு, நாட்டை அபி­வி­ருத்தி செய்ய வேண்­டிய இந்தத் தேசிய பொறுப்­பேற்பில் ஒத்­து­ழைத்துப் பங்­கேற்­கு­மாறு அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு அழைப்பு விடுக்­கிறேன் என்றும் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ அப்­போது அழைப்பு விடுத்­தி­ருந்தார்.

அவ்­வாறு அழைப்பு விடுத்த அவர் ஜன­நா­ய­கத்தின் உச்சக்கட்ட பயன்­களை அடை­வ­தாயின், அரச நிர்­வாகம் முன்­மா­தி­ரி­யா­ன­தொன்­றாக, பலரும் பின்­பற்­றத்­தக்­க­தாகச் செயற்­பட வேண்டும் எனவும் அவர் தனது உரையில் வலி­யு­றுத்­தினார். அதே­வேளை, நாட்டின் பெரும்­பான்மை இன மக்­களின் அபி­லா­சை­க­ளுக்கு எப்­போதும் நாம் மதிப்­ப­ளிக்க வேண்டும். அப்­போ­துதான் மக்­களின் இறைமை பாது­காக்­கப்­படும் என்­ப­தையும் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ தனது கொள்கை விளக்க உரையில் சுட்­டிக்­காட்­டினார்.

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ ஆட்சிப் பொறுப்­பேற்று கிட்­டத்­தட்ட ஐந்து மாதங்­க­ளா­கின்­றன. (இன்­றுடன் 4 மாதம் 21 நாட்கள்). ஆனால் அவர் தனது கொள்கைப் பிர­க­டன உரையில் தெரி­வித்­ததைப் போன்ற முன்­னு­தா­ர­ண­மான ஜன­நா­யக ஆட்சி நாட்டில் நில­வு­கின்­றதா என்­பது கேள்­விக்கு உரி­ய­தாக உள்­ளது.

இரா­ணுவ வழி­முறை சார்ந்த நிர்­வாகச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்ள இந்த ஆட்­சியில் தண்­டனை விலக்­கீட்டு உரி­மைக்கே முத­லிடம் அளிக்­கப்­ப­டு­வ­தாகப் பர­வ­லாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

ஜனா­தி­ப­தி­யாகப் பொறுப்­பேற்­றதும் தனக்கு சார்­பாகச் செயற்­ப­டத்­தக்க முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரி­களை முக்­கிய அரச பத­வி­க­ளுக்கு அவர் நிய­மித்தார். அந்த வகையில் முத­லா­வ­தாக பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக, பணி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குண­ரத்­னவை நிய­மித்தார். தொடர்ந்து சிவில் நிர்­வா­கத்தின் முக்­கிய பத­வி­க­ளுக்கும் பணி ஓய்வு பெற்ற இரா­ணுவ அதி­கா­ரி­களே நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர்.  

நாட்டின் இரா­ணுவத் தள­ப­தி­யாகப் பணி­யாற்­று­கின்ற லெப்டினன்ட் ஜெனரல் சவேந்­திர சில்வா, பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கமால் குண­ரத்ன மற்றும் சிவில் அதி­கா­ரத்தின் தலைமை பொறுப்­புக்­க­ளுக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரிகள் பல­ருக்கும் எதி­ராக ஏற்­க­னவே போர்க்­குற்றச் சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அது மட்­டு­மல்­லாமல் போர்க்­குற்றச் செயல்­க­ளுக்கு ஒப்­பான குற்றச் செயல்­களில் ஈடு­பட்­டி­ருந்­த­தாக விசா­ர­ணை­களின் மூலம் கண்­ட­றி­யப்­பட்ட படை அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களை விலக்கி விசா­ர­ணை­களில் இருந்து விடு­விப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் அரச அதி­காரத் தரப்பு மேற்­கொண்­டி­ருக்­கின்­றது.

இதன் மூலம் குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­ட­வர்­களைத் தண்­டிக்கக் கூடாது அல்­லது அவர்கள் குற்றச் செயல்­களைப் புரி­ய­வில்லை என்ற அர­சியல் ரீதி­யான நிலைப்­பாட்டை உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. இது தண்­டனை விலக்­கீட்டு உரி­மையைப் பல­ருக்கும் குறிப்­பாக படை அதி­கா­ரி­க­ளுக்கு, இரா­ணு­வத்­தி­ன­ருக்கு வழங்­கப்­ப­டு­வ­தையே குறித்துக் காட்­டு­கின்­றது.

யுத்த மோதல்­க­ளின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மனி­த­கு­லத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் என்­ப­வற்றில் ஈடு­பட்­ட­வர்கள், அதற்கு பொறுப்­பேற்க வேண்டும். அதனை அர­சாங்கம் உறுதி செய்ய வேண்டும். இது வெறு­மனே மனித உரிமை மீறல்­க­ளுக்கு பொறுப்பு கூறு­கின்ற விடயம் மட்­டு­மல்ல. குற்றச் செயல்கள் என்னும் பொழுது அந்தச் செயல்கள் தடுக்­கப்­பட வேண்டும். இடம்­பெற்ற குற்றச் செயல்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்டும். எனவே இது சட்டம் ஒழுங்கு மட்­டு­மல்­லாமல் நீதி நியாயம் சம்­பந்­தப்­பட்ட விட­யங்­க­ளா­கவும் அமை­கின்­றன.

சட்டம் ஒழுங்கு இல்­லையேல் அந்த ஆட்­சி­யினால் மக்­க­ளுக்குப் பயன் இல்லை என்றே கூற வேண்டும். சட்டம் ஒழுங்கு நிலை­நாட்­டப்­பட்டால் மாத்­தி­ரமே நாட்டு மக்­களின் வாழ்க்கை சீரா­ன­தா­கவும் ஓர் ஒழுங்கு முறையைக் கொண்­ட­தா­கவும் அமையும். குற்­றச்­செ­யல்­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்கி பொறுப்பு கூறப்­ப­டா­விட்டால், குற்­றச்­செ­யல்­களைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. அத்­த­கைய ஒரு நிலையில் நாக­ரி­கமும் கௌர­வமும் கொண்ட வாழ்க்கை முறை மக்­க­ளுக்கு மறுக்­கப்­பட்­டு­விடும். சட்டம் ஒழுங்கு இல்­லாத இடத்தில் நல்­லாட்சி நிலவ முடி­யாது.

தண்­டனை விலக்­கீட்டு உரிமை என்­பது யுத்தம் முடி­வுக்கு வந்த 2009ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டில் ஒரு கலா­சா­ர­மா­கவே பின்­பற்­றப்­பட்டு வந்­துள்­ளது. குறிப்­பாக பயங்­க­ர­வா­திகள் என சித்தரிக்­கப்­பட்ட விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்ட இரா­ணு­வத்­தி­ன­ருக்கு இந்தத் தண்­டனை விலக்­கீட்டு உரிமை இயல்­பா­கவே வழங்­கப்­பட்டு, அவர்கள் அத்­த­கைய நட­வ­டிக்­கை­களில் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்ற வகை­யி­லான போக்­கையே காண முடிந்­தது.

மனித உரி­மைகள் சாதா­ரண நிலை­மையில் மட்­டு­மல்­லாமல் போர்க்­கா­லத்­திலும் மதிக்­கப்­பட வேண்டும். பேணப்­பட வேண்டும் என்­பதே ஐ.நா. மன்­றத்தின் எதிர்­பார்ப்பு. சர்­வ­தே­சத்­தி­னதும் எதிர்­பார்ப்பு. அது மட்­டு­மல்­லாமல் நாக­ரிகம் கொண்ட மனித குலத்­திற்கு அவ­சி­ய­மான ஒன்­றா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது.

இத்­த­கைய ஒரு நிலையில் இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்­க­ளுக்கு அர­சாங்கம் பொறுப்பு கூறு­வதில் இருந்து விலகிக் கொள்­வ­தென்­பது சாதா­ரண விட­ய­மல்ல. அது மிகவும் பாரதூரமானது. சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தப்பட்டு மனித உரிமைகள் பேணப்படுவது என்பது ஜனநாயகத்தின் ஆணிவேராகும்.

தண்டனை விலக்கீட்டு கலாசாரம் நிலவும்போது அங்கு மனித உரிமைகள் பேணப்படமாட்டாது. குற்றங்கள் தாராளமாகத் தலையெடுத்து சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு அநீதிக்கு உள்ளாக்கப்படுகின்ற நிலைமை உருவாகும். இது ஜனநாயகம் நிலவுகின்ற ஒரு நாட்டுக்கு அழகல்ல. ஆட்சியாளர்களுக்கும் அழகல்ல.

அது மட்டுமல்லாமல் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். மனித உரிமைகள் பேணப்பட வேண்டும் என்ற சர்வதேச நியமத்திற்கு அமைவாக நாடுகள் செயற்படுகின்ற ஒரு சூழலில் இலங்கை போன்ற சிறியதொரு நாடு அந்த உலக ஒட்டத்திற்கு மாறான நிலையில் தாக்குப் பிடிக்க முடியாத நிலைமைக்கு ஆளாக நேரிடும்.

அதிலும் குறிப்பாக இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்படுகின்ற ஒரு தீவாகிய இலங்கை தெற்காசியப் பிராந்தியத்தின் முக்கிய கேந்திர நிலையமாகவும் திகழ்கின்றது.

இத்தகைய பூவுலக சூழமைவில் இலங்கை தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கு மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய கட்டாய நிலைமைக்குள் இருக்கின்றது. சர்வதேச நியமங்கள், நடைமுறைகளுக்கு மாறான வகைகளில் உள்நாட்டில் நிலவுகின்ற அரசியல் மற்றும் ஆட்சிச் சூழல் வேண்டத்தகாத வெளிச்சக்திகளுக்கு வலிந்து அழைப்பு விடுகின்ற நிலைமையையே உருவாக்கும்.

எனவே, ஜனநாயக ஆட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் ஆசிய பிராந்தியத்தில் நற்பெயரைக் கொண்டுள்ள இலங்கை தனக்குள்ள நற்பெயரைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். ஐநா மனித உரிமைப்பேரவையில் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்வதும், அந்தப் பேரவையின் உறுப்பு நாடுகளுடன் இணக்கப்பாடில்லாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதும் நாட்டின் நலன்களுக்கு நல்லதல்ல. இதனைக் கவனத்திற்கொண்டு அரசு செயற்பட முயற்சிக்க வேண்டும். இது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

பி.மாணிக்­க­வா­சகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணில் தரப்புடன் கூட்டு ; காலை...

2025-02-18 13:26:36
news-image

கறுப்பு பைலுடன் சபைக்கு வந்த ஜனாதிபதி...

2025-02-17 21:09:44
news-image

மிக மோசமான கொலை! : ஜனநாயகத்தின்...

2025-02-18 11:22:36
news-image

இலங்கையராகவும் தமிழராகவும் இருந்து தமிழில் தேசிய...

2025-02-17 14:25:08
news-image

‘தோட்ட மக்களாகவே’  அவர்கள் இருப்பதற்கு யார்...

2025-02-16 16:19:01
news-image

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக் கட்சியின் அஸ்தமித்துப்போன...

2025-02-16 15:54:02
news-image

இந்தியா, சீனாவை இலங்கை ஜனாதிபதி எவ்வாறு...

2025-02-16 15:08:22
news-image

நமீபிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர் சாம்...

2025-02-16 15:01:55
news-image

'வார்த்தை தவறும் அரசாங்கமும் பலவீனமான எதிர்க்கட்சியும்'

2025-02-16 14:24:02
news-image

'இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்' என்ற...

2025-02-16 12:44:24
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறந்த வேட்பாளர்கள்...

2025-02-16 12:03:58
news-image

தையிட்டி விகாரை இனஅழிப்பின் குறியீடு

2025-02-16 12:03:38