சர்­வ­தேச சமூ­கத்தின் கரி­சனை

Published By: Daya

06 Mar, 2020 | 12:37 PM
image

ஐக்­கி­ய ­நா­டுகள் மனித உரிமைகள் பேர­வையின்  43 ஆவது கூட்டத் தொடர் ஜெனி­வாவில் தொடர்ந்தும் நடை­பெற்று வரு­கின்ற நிலையில்  இலங்­கையின் நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் மற்றும் மனி­த­ உரிமை விவ­கா­ரங்கள் தொடர்பில்  தொடர்ச்­சி­யாக சர்­வ­தேச நாடு­களும் சர்­வ­தேச மனித உரிமைகள் அமைப்­புக்­களும்  மிக அதி­க­ளவில் கரி­சனை செலுத்­தி­வ­ரு­வ­துடன் இலங்­கை­யா­னது   பொறுப்­புக்­கூ­ற­லையும் நல்­லி­ணக்­கத்­தையும் முன்­னெ­டுக்க உரிய வேலைத்­திட்­டங்­களை  உட­ன­டி­யாக மேற்­கொள்­ள­வேண்­டு­மென்றும்  வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

அது­மட்­டு­மன்றி  இலங்கை 30/1 பிரே­ர­ணை­யி­லி­ருந்து வில­கி­யமை தொடர்பில் கவலை வெளி­யிட்­டி­ருக்­கின்ற சர்­வ­தேச சமூகம்   அர­சாங்­க­மா­னது  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்டும் விட­யத்தில்  பொறுப்­பு­ட­மை­யுடன்  செயற்­ப­ட­வேண்­டு­மென்றும்  கோரி­வ­ரு­கின்­றன.

இலங்கை விவ­காரம் மற்றும் மனித உரிமைகள், பொறுப்­புக்­கூறல், நல்­லி­ணக்கம் தொடர்பில்   அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டுள்ள சர்­வ­தேச மனித உரிமைகள் கண்­கா­ணிப்­பகம்  இலங்­கையில்  மனித உரிமைகள் காப்­பா­ளர்கள் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீது அச்­ச­ுறுத்­தல்கள் தொடர்­வ­தாக   சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றது.  அதா­வது  இலங்­கையின் பல பாகங்­களில் செயற்­பட்­டு­வரும் 15 இலங்கை மனித உரிமைகள் செயற்­பாட்­டா­ளர்கள் தமக்கு தொடர்ந்து அழுத்தம் பிர­யோ­கிப்­ப­தா­கவும் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும்  எமக்கு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஜெனிவா  கூட்டத் தொட­ருக்கு முன்­ப­தாக அதில் பங்­கேற்­றி­ருந்த மனித உரிமைகள் ஆர்­வ­லர்­க­ளிடம் தமது திட்டம் என்ன என இலங்கை பாது­காப்பு தரப்பு கேட்டு துன்­பு­றுத்­தி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இனிமேல் இலங்கை மீதான சர்­வ­தேச பார்வை மற்றும் ஜெனிவா­வுக்­கான பயணம் இடம்­பெறாமல் போகலாம் என மனித உரிமைகள் ஆர்­வலர் ஒருவர் அச்சம் தெரி­வித்தார் என்று  மனித உரிமைகள் கண்­காணிப்­பகம்  தனது இலங்கை தொடர்­பான புதிய அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றது. அது­மட்­டு­மன்றி அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களை ஒழுங்­கு­ப­டுத்தும் செய­லகம் சிவில் பொலிஸ் உட்­பட 12 முக்­கிய அமைப்­புக்­களை ராஜ­பக் ஷ அர­சாங்கம் பாது­காப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்­துள்­ளது­. க­டந்த 3 மாதங்­க­ளாக ஊட­க­வி­ய­லா­ளர்கள் பல தட­வைகள் அடை­யாளம் காணப்­ப­டா­த­வர்­க­ளினால் தாக்­கு­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் அடை­யாளம் காணப்­ப­டா­த­வர்கள் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ராக மரண அச்­சு­றுத்­தல்­க­ளையும் விடுத்­துள்­ளனர். பாது­காப்பு தரப்­பினர் ஊடக அலு­வ­ல­கங்­களில் தேடுதல் நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்­டுள்­ளனர் என்றும் சர்­வ­தேச மனித உரிமைகள் கண்­கா­ணிப்­பகம் குறிப்­பிட்­டி­ருக்­கின்­றது.  

இவ்­வாறு  இலங்கை தொடர்­பாக ஒரு நீண்ட அறிக்­கையை   சர்­வ­தேச   மனித உரிமைகள் கண்­கா­ணிப்­பகம்  விப­ர­மாக   வெளி­யிட்­டி­ருக்­கி­றது.  இந்த நிலையில்   சர்­வ­தேச   மனித உரிமைகள் அமைப்­புக்கள்,   இவ்­வா­றான  குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைப்­பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்­து­பார்த்து   அவற்றை  சரிப்­ப­டுத்த தேவை­யான நட­வ­டிக்­கை­களை  எடுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.  தொடர்ச்­சி­யாக இவ்­வாறு சர்­வ­தேச மனித உரிமைகள் அமைப்­புக்கள் இலங்­கை­மீது குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­துக்­கொண்­டி­ருப்­பது ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. இதற்கு காரணம் என்ன  என்­பதை ஆராய்ந்­து ­பார்க்­க­வேண்டும். அர­சாங்கம் உள்­ளக ரீதியில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு  உரிய  வகையில் நீதியை நிலை­நாட்டும் பட்­சத்தில் இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்கள் எழாது என்­பதை மனதில் கொள்­ள­வேண்டும்.

ஜெனிவா மனித உரிமைகள் பேர­வை யில் இலங்கை தொடர்­பா­ன­ வி­ட­யங்கள் கடந்­த­ வாரம்  ஆரா­யப்­பட்­ட­போது  மனித உரிமைகள் கண்­கா­ணிப்­பகம், சர்­வ­தேச மன்­னிப்­பு­சபை மற்றும் சர்­வ­தேச  ஜூரிகள் ஆணைக்­குழு உள்­ளிட்ட பல்­வேறு  சர்­வ­தேச மனித உரிமைகள் அமைப்­புக்கள் கடும் கரி­ச­னையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தன. முக்­கி­ய­மாக இலங்­கை­யா­னது  30/1 பிரே­ர­ணையின்  அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து  வில­கி­யமை  மிகவும் கவ­லைக்­கு­ரிய விடயம் என்றும்   அர­சாங்கம்  வாக்­கு­று­தி­க­ளி­லி­ருந்து வெளியே செல்­லக்­கூ­டாது என்றும் மனி­த ­உரிமை  அமைப்­புக்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தன.

இவ்­வா­றான பின்­ன­ணி­யிலேயே தற்­போது சர்­வ­தேச  மனித உரிமைகள் கண்­கா­ணிப்­பகம்  புதிய அறிக்­கையை    வெளி­யிட்­டி­ருக்­கி­றது.  இதே­வேளை  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­தனை  இலங்­கை­யி­லுள்ள  நெதர்­லாந்து நாட்டின்  தூதுவர்   நேற்று முன்­தினம் சந்­தித்து பேச்சு நடத்­தி­யி­ருந்தார். இதன்­போது இலங்­கை­யா­னது  ஐ.நா. தீர்­மா­னத்­தி­லி­ருந்து வில­கி­யமை எந்­த­வொரு வகை­யிலும் நாட்­டுக்கு  நன்மை தரப்­போ­வ­தில்லை என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

எவ­ரேனும்  சர்­வ­தேச  மனி­தா­பி­மான சட்­டங்கள் மற்றும் சர்­வ­தேச மனித  உரிமைகள் சட்­டங்­களை மீறி­யி­ருந்தால் அவர்கள்  சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம்.  இலங்­கையில் நிலை­யான   சமா­தா­னத்தை அடை­ய­வேண்­டு­மெனில்  மனித உரிமைகள் பேர­வையின்   பரிந்­து­ரைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும்   கூட்­ட­மைப்பின் தலைவர்   சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். யுத்­த­கா­லத்தில் ஒரு  அர­சியல் தீர்வு தொடர்­பாக சர்­வ­தேச சமூ­கத்­திற்கு இலங்கை அர­சாங்கம் பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்­கி­யி­ருந்­தது.   நீண்­ட­கா­ல­மான இந்த பிரச்­சி­னைக்கு தீர்­வைக்­காணும் நோக்கில் இந்த வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும் என்றும் சம்­பந்தன்  நெதர்­லாந்து நாட்டு தூது­வ­ரிடம் எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார்.

பொறுப்­புக்­கூறல், நல்­லி­ணக்கம்,  மனித உரிமைகள்   போன்ற விட­யங்­களில்   பல்­வேறு  தாம­தங்­களும்  வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாத  தன்­மையும்  நீடித்து வரு­கின்ற சூழலில்  சர்­வ­தேச சமூகம்   இவ்­வாறு கவலை வெளி­யிட்­டுள்­ளமை கவ­னிக்­கத்­தக்­கது.  உள்­ளக ரீதியில் இலங்­கைக்குள்  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு  நீதி  நிலை­நாட்­டப்­ப­டாததன்  கார­ண­மா­கவே   அந்த மக்கள் சர்­வ­தே­சத்தை நோக்கி செல்ல ஆரம்­பித்­தனர்.  கடந்த பத்­து ­வ­ரு­டங்­க­ளாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வில்லை.  நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்­ப­து­போன்ற தோற்­றப்­பாடு காணப்­பட்­டாலும்   அவை  இறுதி வெற்­றியை நோக்கி நக­ர­வில்லை.  பாதிக்­கப்­பட்ட மக்­களோ தொடர்ச்­சி­யாக   தமக்­கான நீதியை வழங்­கு­மாறு கோரி போராடி வரு­கின்­றனர். இவ்­வா­றான சூழ­லி­லேயே   இலங்கை அர­சாங்­க­மா­னது 30/1  என்ற ஜெனிவா பிரே­ர­ணையின் அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து   வில­கு­வ­தாக அறி­வித்­தது.

அர­சாங்­கத்தின் இந்த அறி­விப்பும் பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் மேலும்  நம்­பிக்­கை­யின்­மையை ஏற்­ப­டுத்­தி­யது. இது­வ­ரை­காலம் அர­சாங்கம் கடப்­பாட்­டுடன் இருந்­ததால் ஏதா­வது நடக்கும் என்று நம்­பி­யி­ருந்த பாதிக்­கப்­பட்ட மக்கள் தற்­போது   அர­சாங்கம் அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கி­யுள்­ளதால்  தற்­போது எது­வுமே நடக்­காது என்ற   நிலைப்­பாட்­டி­லேயே சர்­வ­தேச   சமூகம் தமக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்­டு­மென   கோரிக்கை விடுக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றனர்.

இத­னா­லேயே சர்­வ­தேச சமூ­கமும்  இலங்­கையின்  நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறும் செயற்­பாட்டில் ஆழ­மாக அவ­தானம் செலுத்த ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது. ஜெனிவா மனித  உரிமைகள் பேர­வையில் கடந்த 27ஆம் திகதி இலங்கை தொடர்­பான விவாதம் நடை­பெற்­ற­போது அதில் பங்­கேற்று உரை­ய­ாற்­றிய பேர­வையின் உறுப்பு நாடுகள் இலங்­கையின் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாடு தொடர்­பாக கடும் அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்­ள­துடன்   பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்ட வேண்டும் என்­ப­தையும்  வலி­யு­றுத்தி இருந்­தன.

பிரிட்டன்,  ஜேர்­மனி, அவுஸ்­தி­ரே­லியா,  ஐரோப்­பிய ஒன்­றியம் உள்­ளிட்ட சர்­வ­தேச சமூகம்   இவ்­வாறு  கடு­மை­யான அதி­ருப்­தியை வெளி­யிட்­டி­ருந்­தன. அதே­போன்று  சர்­வ­தேச மனித உரிமைகள் அமைப்­புக்­களும் இதன்­போது  கடு­மை­யான அதி­ருப்­தியை வெளி­யிட்­டி­ருந்­தன.

இந்த நிலையில்  அர­சாங்­க­மா­னது   பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு எவ்­வாறு   நீதியை வழங்­க­வேண்டும் என்­பது தொடர்­பாக  ஆழ­மா­கவும் விரை­வா­கவும் சிந்­திக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது. தற்­போது தேர்தல் அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில்  தேர்­த­லுக்கு பின்னர்  யார் அர­சாங்கம் அமைத்தாலும்   பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் ஆராயவேண்டியது அவசியமாகும்.  சர்வதேச  சமூகம் தொடர்ந்தும் இவ்வாறு   குற்றச்சாட்டுக்களை சுமத்திக்கொண்டிருப்பது   நாட்டுக்கு  ஆரோக்கியமாக அமையாது. எனவே   பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடையக்கூடிய வகையிலான   பொறிமுறையை முன்னெடுத்து அந்த மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இலங்கையின் பிரஜைகளே என்பதை   கவனத்தில் கொண்டு அவர்களின் கவலையைப்போக்குவதற்கும் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டியது   இலங்கை  அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இலங்கை  அரசாங்கம் ஜெனிவாவில் உள்ளக ரீதியில் பொறுப்புக் கூறலை முன்னெடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்­ தி­ருந்தது. அந்த அறிவிப்பு தொடர்பிலும் சர்வதேச  தரப்பில் பாரிய  நம்பிக்கை வெளிப்படுத்தப்படவில்லை. எனவே இந்த நிலைமைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பகமான, திருப்தியளிக்கக்கூடிய வகையிலான பொறிமுறை ஊடாக நீதியை நிலைநாட்டவேண்டும்.

(06.03.2020 வீரகேசரி நாழிதளின் ஆசிரிய தலையங்கம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...

2025-03-18 20:17:35
news-image

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...

2025-03-18 12:15:30
news-image

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"

2025-03-18 04:17:11
news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின்...

2025-03-16 15:25:50
news-image

தடுமாறும் தமிழ்க்கட்சிகள்

2025-03-16 14:51:10
news-image

1980களின் வதை முகாம் குறித்து இலங்கை...

2025-03-16 15:03:08
news-image

ஈரான் மூலோபாயம்

2025-03-16 13:25:56
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரொட்ரிகோ டுட்டர்த்தே

2025-03-16 13:07:00