மலேசிய பிரதமர் மஹாதிர் மொஹமட் கடந்த திங்கட்கிழமை திடீரென்று பதவியை இராஜிநாமா செய்ததையடுத்து பெரிய அரசியல் நெருக்கடி மூண்டிருக்கிறது.
2018 பொதுத் தேர்தலுக்குப் பிறகு அந்த நாட்டில் மூண்டிருக்கக் கூடிய இந்த முதலாவது அரசியல் நெருக்கடி கூட்டரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சீர்திருத்த செயன்முறைகளையும் தலைகீழாக்கி விடக் கூடும்.
மஹாதிர் தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பதற்கான ஆதரவை ஆளும் பகதான் ஹரபான் கூட்டணி மீள உறுதிப்படுத்திய பின்னரும் கூட இராஜிநாமாவை சமர்ப்பித்ததற்கான காரணத்தை 90 வயதைக் கடந்துவிட்ட அவர் கூறவில்லை என்ற போதிலும் , அன்வர் இப்ராஹிமுக்கு அதிகாரத்தை கையளிப்பதை தடுப்பதற்கான திட்டமிட்ட ஒரு செயற்பாடாகவே பிரதமரின் தீர்மானம் தோன்றுகிறது.
அன்வர் இப்ராஹிம் முன்னர் மஹாதிரின் நெருங்கிய சகாவாக இருந்து பிறகு அரசியல் எதிரியாக மாறி இறுதியில் கூட்டணி பங்காளியாக வந்தார்.
1981 தொடக்கம் 2003 வரை அதிகாரத்திலிருந்த மஹாதிரின் அமைச்சரவையில் அன்வர் இப்ராஹிம் ஒரு தடவை அங்கம் வகித்தார். 1990 களின் பிற்பகுதியில் முறைகேடான பாலியல் நடத்தைக்காக சிறைக்கு செல்லும் வரை அமைச்சராக இருந்தார் அன்வர். பிறகு 6 தசாப்தங்களாக மலேசியாவை ஆட்சி செய்த மலாய் ஐக்கிய தேசிய இயக்கத்துக்கு எதிராக 2018 பொதுத் தேர்தலில் அன்வர் மஹாதிருடன் கரம் கோர்த்தார்.
மலேசிய சமுதாயத்தின் பன்முகத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்திய தேசியவாத, மத்திய போக்கு மற்றும் சீன இனத்துவக் கட்சிகளை உள்ளடக்கிய பகதான் ஹரபான் கூட்டணி ஊழல் அற்ற ஒரு தாராளவாத அரசாங்கமொன்றை அமைப்பதாக வாக்காளர்களுக்கு உறுதியளித்தது.
தேர்தலில் அதிர்ச்சியான வெற்றியைப் பெற்ற பிறகு மஹாதிர் மீண்டும் பிரதமராக வந்தார். ஆனால் அன்வர் இப்ராஹிமின் மக்கள் நீதிக் கட்சி மற்றும் ஜனநாயக நடவடிக்கை கட்சி ஆகியவற்றின் ஆதரவுடனேயே அவரால் அவ்வாறு வர முடிந்தது. மஹாதிர் அரசாங்கத்தை அமைத்து பிறகு ஒரு கட்டத்தில் அன்வருக்கு அதிகாரத்தை கையளிப்பார் என்பதே இதன் பின்னணியில் இருந்த புரிந்துணர்வாகும்.
இந்த சஞ்சலமான அதிகாரப் பகிர்வு இணக்கப்பாடே தற்போதைய நெருக்கடியின் தோற்றுவாயாகும். அன்வரின் கட்சி தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்த போதிலும் கூட அவருக்கு அதிகாரத்தைக் கையளிப்பது குறித்து ஒரு உறுதியான வாக்கையோ அல்லது நேரஅட்டவணையையோ கொடுப்பதற்கு மஹாதிர் மறுத்தார். மஹாதிரை பதவி கவிழ்ப்பதற்கு அன்வர் இப்ராஹிம் முயற்சிப்பதாக அவரின் கட்சிக்குள்ளிருக்கும் ஒரு போட்டிக் குழு குற்றஞ்சாட்டிய நிலையில் ஆளுங் கூட்டணி நெருக்கடிக்குள்ளானது.
நெருக்கடி தீவிரமடைந்த நிலையில் மஹாதிர் தனது பதவி இராஜிநாமாவை அறிவித்தார். அவரது மலேசிய ஐக்கிய சுதேச கட்சியும் கூட்டணியிலிருந்து வெளியேறியது. பகதான் ஹரபான் நிலைகுலைந்து விட்டது என்பதே இப்போது உண்மை நிலை. மஹாதிரினதும் அன்வரினதும் அடுத்த நடவடிக்கைகள் எத்தகையவையாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர்கள் இருவரில் எவருக்கும் பாராளுமன்றத்தில் சொந்தத்தில் பெரும்பான்மை பலம் இல்லை.
222 ஆசனங்களைக் கொண்ட மலேசிய பாராளுமன்றத்தில் புதிய கூட்டணி ஒன்று அரசாங்கம் அமைக்க 112 ஆசனங்கள் தேவை. மஹாதிர் கட்சிக்கு பாராளுமன்றத்தில் 26 உறுப்பினர்கள் மாத்திரமே இருக்கிறார்கள். 2018 பொதுத் தேர்தலில் அன்வர் கட்சி 50 ஆசனங்களை வென்றது. ஆனால் அவரது கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்களா என்பது தெளிவில்லை. இதனால் அடுத்துவரும் நாட்களில் மலேசியாவில் சில கீழ்த்தரமான அரசியல் சண்டைகளைக் காண முடியும்.
இரு தரப்பினரில் எவருமே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை வென்றெடுக்க முடியாமல் போகுமேயானால் நாடு தேர்தலொன்றுக்கு போகும். பகதான் ஹரபான் தலைவர்கள் தங்களுக்கு தாங்களே அளித்துக் கொண்ட வாக்குறுதிகளையும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் மதித்து செயற்பட்டிருப்பார்களேயானால் இந்த நெருக்கடியை தவிர்த்திருக்க முடியும். சிறுபான்மை குழுக்களின் பரந்தவொரு பிரதிநிதித்துவத்துடன் நம்பிக்கை தரும் புதிய யுகம் ஒன்றை தோற்றுவிக்கப் போவதாகவும் ஊழல் மோசடிகளை வேரோடு களையப்போவதாகவும் கூட்டணி அரசாங்கம் கூறியது.
மஹாதிர் தனது பங்காளிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வை நிச்சயம் மதித்து கூட்டணி அரசாங்கம் அதன் பதவி காலத்தை பூர்த்தி செய்ய அனுமதித்திருக்க வேண்டும். ஆனால் இனிமேலும் அது அவரது முன்னுரிமைக்குரிய விவகாரமாக இல்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM