( ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)
ஜெனிவா பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கு முன்னைய அரசாங்கம் அனுசரணை வழங்கியமை இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாகும். எனவே எமது அரசாங்கம் 30/1, 34/1 மற்றும் 40/1 ஆகிய பிரேரணைகளுக்கான அனுசரணையிலிருந்து விலகுகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நேற்று ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் அறிவித்தார்.
எனினும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து ஆராய்ந்த முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கையை ஆராய உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் அனுமதியின்றியே இந்தப் பிரேரணைக்கு முன்னைய அரசாங்கம் அனுசரணை வழங்கியது எனவும் அவர் கூறினார்.
43 ஆவது ஜெனிவா கூட்டத் தொடரில் நேற்றைய மூன்றாவது நாள் அமர்வில் இலங்கை சார்பில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உரையாற்றுகையிலேயே இதனை அறிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை மக்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை பாரிய ஆதரவளித்து ஜனாதிபதியாக்கினர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டனர். இது அனைத்து இனமக்களுக்கும் பாதுகாப்பையும் பெற்றுக்கொடுத்தது. 2009 ஆண்டிலிருந்து இதுவரை பிரிவினைவாத பயங்கரவாதிகளினால் ஒரு தோட்டாக்கூட வெடிக்கப்படவில்லை.
யுத்தம் முடிவடைந்தவுடன் ஒரே இரவில் நிரந்தர அமைதியை காண முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். எப்படியிருப்பினும் நிலைபேரான தன்மை மற்றும் நல்லிணக்க விடயத்தில் ஒரு மறுசீரமைப்பு எமக்கு தேவை. முன்னைய மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இலங்கை காயங்களை ஆற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது. 2014 ஆம் ஆண்டு ஆகும் போது நாம் பல்வேறு முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருந்தோம். கண்ணிவெடி அகற்றல், மீள்குடியேற்றம், காணிமீள் அளிப்பு, யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் இராணுவத்தை குறைத்தல், முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு உட்படுத்தல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாக்குரிமையை வழங்குதல், மனித உரிமை மற்றும் பொறுப்புக்கூறல்களுக்கு உள்ளக பொறிமுறையை வழங்குதல் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
எப்படியிருப்பினும் ஐ.நா. மனித உரிமை பேரவையில் 2012,2013,2014 ஆம் ஆண்டுகளில் இலங்கை தொடர்பாக பிரேரணைகள் கொண்டுவரப்பட்டன. முன்னைய நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டு இலங்கை குறித்த பிரேரணைக்கு அனுசரணை வழங்கியது. இந்த பிரேரணையின் ஊடான எந்த நடவடிக்கையையும் இலங்கை அரசியலமைப்பின் ஊடாக முன்னெடுக்க முடியாது.
இது இலங்கை அரசியலமைப்பையும் மக்களின் இறைமையையும் மீறுகின்றது. இந்த 30/1 பிரேரணைக்கு அனுசரணை வழங்கியதன் மூலம் இலங்கை முன்னைய அரசாங்கம் உள்ளக ஒழுங்கு விதிகளை மீறியிருக்கிறது. அமைச்சரவையின் அனுமதி பெறப்படவில்லை. பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவில்லை. ஜனாதிபதியின் ஆலோசனையும் பெறப்படவில்லை. இலங்கையின் இறைமையையும் மதிப்பையும் அவமதிப்பதாக அமைந்திருக்கிறது.
இது இலங்கையின் சர்வதேச கட்டமைப்பு மீதான நம்பிக்கையை சீர்குலைத்தது. அத்துடன் எமது அணிசேரா கொள்கை மற்றும் தெற்காசிய ஒற்றுமையை குழப்பியது. அத்துடன் 30/1 பிரேரணையானது இலங்கையின் தேசிய அக்கறையை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்தது. தேசிய உளவுத்துறையின் செயற்பாடுகள் பலவீனப்படுத்தப்பட்டன. அதன் காரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றன.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் தெரிவுடன் இலங்கை மக்கள் அவருக்கு ஒரு வித்தியாசமான பாதையில் நாட்டை கொண்டுசெல்ல ஆணை வழங்கியுள்ளனர். மக்களின் விருப்பப்படியும் எமது அணிசேரா வெளிவிவகார கொள்ளையின் அடிப்படையிலும் இலங்கை செயற்படுவதற்கு தயாராக இருக்கிறது. அந்த வகையிலேயே இலங்கை நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல் என்ற பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து இலங்கை விலகுகின்றது என்பதை அறிவிக்கின்றேன்.
ஆனால் இலங்கையானது பொறுப்புக்கூறல் மனித உரிமை , நிரந்தர சமாதானம், நல்லிணக்கம் போன்றவற்றை அடைய அர்ப்பணிப்புடன் செயற்படும். உள்ளக ரீதியிலான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல்களை முன்னெடுப்போம். அந்தவகையிலேயே உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் ஒரு விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும். அந்த ஆணைக்குழுவானது கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்கள் சர்வதேச மனதாபிமான சட்டமீறல்கள் தொடர்பாக ஆராய்ந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிக்கும். அத்துடன் நிலைபேரான அபிவிருத்தி இலக்குகளை அடைய நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இலங்கையானது ஐக்கியநாடுகள் சபை கட்டமைப்புடன் தொடர்ந்து இணைந்து செயற்படும். மேலும் அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இணைந்து இந்த பிரேரணையை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் செயற்படும்.
இலங்கை அரசாங்கத்தை விட எமது மக்கள் மீது யாரும் அக்கறையுடன் செயற்பட முடியாது. எனவே அனைத்து தரப்பினரும் எம்முடன் இணைந்து செயற்படவேண்டும் என நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM