தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கத்தினை கட்டுப்படுத்தும் அதிகாரமற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினுள் முடக்குவதனால் எவ்விதமான பயனும் ஏற்படப்போவதில்லை. ஆகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இந்த விடயத்தினை நகர்த்துவதன் ஊடாகவே நீதியைப் பெற முடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு:
கேள்வி:- தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் உங்களுடைய தரப்பின் மீது வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டுகளுக்கான உங்களின் பதில் என்ன?
பதில்:-- விக்னேஸ்வரன் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எமது கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி சுகாஸ் முழுமையான பதில்களை அளித்துள்ளார். ஆகவே அப்பதில்களுக்கு மேலதிகமாக எதனையும் கூறுவதற்கில்லை.
கேள்வி:- கட்சியின் தலைவர் என்ற வகையில் உங்களின் பிரதிபலிப் பினையே கோருகின்றேன்?
பதில்:- எமது கட்சி சார்ந்து அப்பட்டமான பொய்களுடன் அவர் வெளியிட்ட அறிக்கையின் மூலம் மிகக் கீழ்த்தனமான அரசியலுக்குள் விக்னேஸ்வரன் காலடியெடுத்து வைத்துவிட்டார் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணியென்ற பெயரில் கூட்டமைப்பின் பாணியிலேயே செயற்படுவதை நாம் அம்பலப்படுத்துவதை சகிக்க முடியாது எம்மீது அப்பட்டமான பழிகளை சுமத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் தமக்கான நியாயமான அரசியல் சக்தியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஏற்றுக்கொண்டுவிடக்கூடாது என்பதையே விக்னேஸ்வரன் இலக்காக வைத்து செயற்படுகின்றமையின் வெளிப்பாடாகவே அறிக்கை உள்ளிட்ட அவரின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. எமது தரப்பு தொடர்பில் அப்பட்டமான பொய்களை வெளிப்படுத்தியதன் மூலம் விக்னேஸ்வரன் தரப்பின் அரசியல் வங்குரோத்து நிலைமையும் அம்பலமாகியுள்ளது என்றே கருதுகின்றேன்.
கேள்வி:- ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனை தவிர்த்து மாற்று அணியொன்று அமைக்கப்ப டுகின்றபோது நிபந்தனையற்ற ஆதர வளித்து விக்னேஸ்வரனை
தலைவராக ஏற்கத்தயாராக உள்ளதாக கூறிய நீங்கள் அவருடன் முரண்பட்டதேன்?
பதில்:-- முதலாவதாக விக்னேஸ்வரன் எமது தரப்புடன் இணைவதை இந்தியா விரும்பவில்லை என்று எம்மிடத்தில் கூறினார். அத்துடன் கொள்கைக்கு முன்னுரிமை அளிக்காது வெறுமனே மாற்று அணியொன்றை உருவாக்க முடியாது என்று நாம் 2010இலிருந்து கூறிவருகின்ற நிலையில் மாற்று அணியை கொள்கை பற்றற்ற கூட்டமைப்பு போன்ற அரசியல் கூட்டணியாக உருவாக்குவதனையே விக்னேஸ்வரன் இலக்காக கொண்டிருந்தார் முனைந்திருந்தார்.
நாம் அவருடன் இணைந்து செயற்படுவதற்கு முனைந்தபோதும் ஆக்கபூர்வமான நிலைமைகளை முற்றாக நிராகரிக்கும் வகையிலான செயற்பாடுகளை விக்னேஸ்வரனே முன்னெடுத்திருந்தார். கொள்கை பற்றுறுதியற்ற தவறான பாதையில் அவருடைய நகர்வானது அவருடன் இணைந்து பயணிக்க முடியாது என்ற தீர்மானத்தினை தவிர்க்க முடியாது எடுக்கும் சூழலுக்குள் நாம் தள்ளப்பட்டோம்.
உதாரணமாக, ஜனாதிபதித் தேர்தலின்போது பல்கலைக்கழக மாணவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் ஆறு கட்சிகள் கூட்டிணைந்து நிபந்தனைகளை தயாரித்தபோது புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை ஒற்றாட்சிக்கு உட்பட்டது என்று பகிரங்கமாக கூறிய விக்னேஸ்வரனே சுமந்திரனுடன் இணைந்து அதனை நிபந்தனை பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை அவருடைய மாறுபட்ட நிலைமையை கூறமுடியும்.
கேள்வி:- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சீனத் தரப்புடன் இரகசிய சந்திப்புகளை நடத்தியிருந்ததா?
பதில்:- இதுவொரு அப்பட்டமான பொய்யாகும். விக்னேஸ்வரன் அரசியல் ஆதாயத்துக்காகவே ஆதாரமற்ற வகையில் இவ்வாறான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். அதாவது, தான் இந்திய அரசாங்கத்தின் கைப்பொம்மையாக மாறிக்கொண்டு வருவது அம்பலப்படுத்தப்படுவதை மறைக்கும் வகையிலேயே எம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
எமக்கு யாரையும் இரகசியமாக சந்திக்க வேண்டிய தேவை இல்லை. இரகசிய சந்திப்புகளை நடத்தும் அளவுக்கு நாம் அரசியல் ரீதியாக பலவீனமானவர்கள் அல்லர். தமிழ்த் தேசிய முன்னணியினராக நாம் சீனா சார்பானவர்கள் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கின்ற பட்சத்தில் அரசியலிலிருந்து விலகுவதற்கு தயாராக இருக்கின்றோம் என்பதை திட்டவட்டமாக கூறுகின்றோம்.
கேள்வி:- இந்திய எதிர்ப்புவாத போக்கில் பயணிக்கின்றமைக்கு விசேட காரணங்கள் ஏதும் உள்ளனவா?
பதில்-:- எமது தரப்பு இந்திய எதிர்ப்புவாதிகள் அல்ல. இந்தியாவினுடைய நலன்களும் எமது நலன்களும் ஒரு புள்ளியில் சந்திக்கச் செய்வதற்கான அடிப்படையில் தான் நகர்வுகள் அமைய வேண்டும் என்றே கூறுகின்றோம். வெறுமனே இந்தியா தனது நலன்களை மட்டும் பேணி எமக்கு தீமை வரக்கூடிய வகையிலான நிலைப்பாடுகளை நாம் கொண்டிருக்க முடியாது என்பதில் தெளிவாக இருக்கின்றோம்.
உதாரணமாக கூறுவதானால், 13ஆவது திருத்தச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகள் ஏகோபித்து ஒற்றையாட்சிக்குள் அதனை ஏற்க முடியாது என்றே கூறியிருந்தன. ஆனால் தற்போது இந்தியாவின் நலனுக்காக முழுமையில்லாத 13ஆவது திருத்தச் சட்டத்தினை தீர்வாக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுத்தப்படுகின்றபோது எமது மக்களின் நலன்களை கைவிட்டு இந்தியாவைப் பகைத்துவிடக்கூடாது என்பதற்காக சாதகமான முடிவை எடுப்பதற்கு நாம் தயாரில்லை.
இந்தியா கூறுகின்ற அனைத்தையும் கண்ணை முடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாம் கூறுவதற்காக நாம் இந்திய எதிர்ப்புவாதிகள் என்று சொல்லப்படுவது போலிக்குற்றச்சாட்டாகும். இந்தியாவின் நலன்களுக்குள் எமது நலன்களையும் உள்ளீர்த்து அதில் வெற்றிபெறும் நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது முயற்சியாக இருக்கின்றது.
கேள்வி:- தமிழ்த் தேசிய பரப்பில் கூட்டமைப்புக்கு எதிரான அரசியலை முன்னெடுத்து வந்த நீங்கள் தற்போது விக்னேஸ்வரன் தலைமையிலான அணியுடன் முரண்பட்டுக் கொண்டதையடுத்து, கள அரசியலில் சவாலான நிலைமைகள் அதிகரித்துள்ளன என்று கருதுகின்றீர்களா?
பதில்:-- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை நாம் கடந்த பத்து வருடங்களாக அம்பலப்படுத்தி வருகின்றோம். நாங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூறிய விடயங்களை தற்போது தமிழ் மக்கள் சரியென ஏற்றுக்கொள்கின்ற சூழல் உருவாகியுள்ளது. அவ்வாறான நிலையில் கூட்டமைப்புக்கு மாற்றான கொள்கையில் உறுதிப்பாடான தரப்பாக தமிழ் மக்கள் எம்மை அடையாளம் காண விளைகின்றமை கடந்த தேர்தல்களில் வெளிப்பட்டு வருகின்றது.
ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாற்று அணியாக வந்து விடக்கூடாது என்பதற்காக தொடர்ச்சியாக திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2010ஆம் ஆண்டில் கூட்டமைப்பிலிருந்து ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் வெளியேறிவந்து மாற்று அணியென்று போட்டியிட்டார்கள். 2015இல் ஜனநாயகப் போராளிகள் என்றொரு கட்சி உருவாகி களமிறக்கப்பட்டது. 2018இல் சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியேறி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து மாற்று அணியென்று போட்டியிட்டார்.
இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டு நாம் தீவிரமாக வளர்ந்து கொண்டு வருகின்ற நிலையில், தற்போது விக்னேஸ்வரனை முன்னிலைப்படுத்தி மாற்று அணியென்ற போர்வையில், எமக்கு எதிரான செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. அந்த முயற்சியும் தோல்வியடையும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. தமிழ் மக்களுக்கான உண்மையான தலைமைத்துவத்தினை வழங்கக் கூடிய தரப்பாக தமிழ்த் தேசிய முன்னணியே இருக்கின்றது என்ற புரிதலை தமிழ் மக்கள் கொண்டிருக்கின்றார்கள் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. அடுத்த தேர்தல் அதனை நிரூபிக்கும்.
கேள்வி:- ஜெனீவா தீர்மானத்திலி ருந்து இலங்கை அரசாங்கம் வெளியேறப்போவதாக
அறிவித்துள்ளமையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எவ்வாறு பார்க்கின்றது?
பதில்:-- ஜெனீவா தீர்மானங்களை நிராகரித்து அதிலிருந்து வெளியேறுவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் முடிவுகளைத் தாண்டி தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறும் செயற்பாட்டினை நகர்த்த முடியாது முடக்கப்பட்டுள்ள நிலைமையே ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான தருணத்தில் அதிகாரமில்லாத ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்களின் பொறுப்புக்கூறும் விடயத்தினை தொடர்ந்தும் தக்கவைத்திருப்பதால் எவ்விதமான பயனும் கிடைக்கப்போவதில்லை. வெறுமனே அரசாங்கத்துக்கு அழுத்தங்களை மட்டுமே வழங்க முடியுமே தவிர பொறுப்புக்கூறலை நடைமுறை சாத்தியமாக்க முடியாது.
ஆகவே தான் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அதனுடன் இணைந்து பணியாற்றும் அமைப்புகளும் இலங்கை அரசாங்கத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக இலங்கை விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதிலும் எவ்விதமான விட்டுக்கொடுப்புகளையும் செய்யக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கின்றதோடு இதனை வல்லரசு நாடுகளுக்கு ஏகோபித்த அழுத்தமாக வலியுறுத்த வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றோம்.
கேள்வி:- சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது விசேட தீர்ப்பாயத்தின் முன்னால் இலங்கையை நிறுத்துவதென்பதோ சாத்தியமான விடயமா?
பதில்:-- முதலாவதாக பாதுகாப்பு சபையில் தீர்மானமொன்றை நிறைவேற்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினை நோக்கி இலங்கையை நகர்த்தலாம். அதற்கு வல்லரசு நாடுகளின் அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
அவ்வாறில்லாது விட்டால், பாதிக்கப்பட்ட மக்கள் தமிழர் தாயகத்தில் இனஅழிப்பு நடந்தது என்பதை அதிதீவிரமாக வலியுறுத்துவதோடு அதற்கான நீதியைப் பெறுவதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையே அவசியம் என்பதில் எவ்விதமான விட்டுக்கொடுப்பற்ற இறுக்கமான கருத்துருவாக்கத்தினை சர்வதேசத்தில் உருவாக்க வேண்டும்.
உதாரணமாக கூறுவதானால், மியன்மாரின் ரோஹிங்கியா விடயத்தினை எடுத்துக்கொண்டால் அந்நாடு ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாது இருந்தாலும் கூட அங்கு நடந்த சம்பவங்களுக்கான சான்றுகளின் பிரகாரம் சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கு மாற்றுவழியொன்று அடையாளம் காணப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஆகவே, இதனை முன்னுதாரணமாகக் கொண்டு நாமும் எவ்விதமான விட்டுக்கொடுப்புகளுமின்றி ஏகோபித்து செயற்பட வேண்டும். அவ்வாறில்லாது தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்களே, இங்கு இனப் படுகொலை நடந்தது என்பதற்கு சான்றுகள் இல்லை, சர்வதேச விசாரணை நிறைவடைந்து விட்டது என்று கூறி கடந்த காலத்தில் மூன்று தடவைகள் காலஅவகாசத்தினை பெற்றுக் கொடுத்து தாம் சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சிக்காக செயற்படுபவர்கள் இருக்கும் வரையில் குற்றவியல் நீதிமன்றம் நோக்கிய நகர்வு பின்னடைவுகளையே சந்தித்துக்கொண்டிருக்கும். ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு முழுமையான தடையாக இருக்கின்றது.
கேள்வி:- இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதன் பிரகாரம் ஜெனீவா தீர்மானத்திலிருந்து இலகுவாக விலகிக் கொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளனவா?
பதில்:- ஆம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருக்கும் மிகப்பெரும் பலவீனமாக காணப்படுவது இறைமையுள்ள எந்தவொரு நாட்டினதும் விருப்பத்தினை மீறி அப்பேரவையினால் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது என்பதேயாகும். ஆகவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் தாம் விரும்பிய எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு எந்த தடைகளும் இல்லை.
கேள்வி:- இலங்கை அரசாங்கம் அறிவித்ததன் பிரகாரம் ஜெனீவா தீர்மானத்திலிருந்து வெளியேற முடியும் என்று நீங்கள் கூறுகின்றபோதும், மக்களின் ஆணைபெற்ற தரப்பான கூட்டமைப்பின் சார்பில் இந்த விடயங்களை தொடர்ச்சியாக கையாண்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவ்வாறு எழுந்தமானமாக அரசாங்கத்தினால் வெளியேற முடியாது என்றும் அழுத்தங்களை வழங்குவதற்கான மாற்றுவழிகளை தாம் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றாரே?
பதில்:- -வல்லரசு நாடுகளோ அல்லது சர்வதேச சமூகத்தினரோ ஜெனீவா தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேற முடியாது என்று கூறவில்லை. சுமந்திரன் மட்டுமே அவ்வாறு கூறிக்கொண்டிருக்கின்றார். ஜெனீவா விடயத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக சுமந்திரன் கூறிய எந்தவொரு விடயமும் சரியாக நடைபெற்றிருக்கின்றதா?
மேலும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் ஜனாதிபதி கோத்தாபய தலைமையிலான அரசாங்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அதிலொன்றாகவே இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கான தடையை அமெரிக்கா விதித்துள்ளது. இவ்வாறான தடைகள் உள்நாட்டில் செல்வாக்கு செலுத்துமே தவிர ஐ.நா. அரங்கில் எவ்விதமான தாக்கத்தினையும் ஏற்படுத்தாது.
ஆகவே, அத்தடைகளுக்கு காரணமாக இருந்தோம் என்று கூறிக்கொண்டு இருப்பதெல்லாம் வெறுமனே தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளாகும். இது தொடர்பிலான தெளிவினை தமிழ் மக்கள் கொள்ள வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக இருக்கின்றது.
-நேர்காணல் - ஆர்.ராம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM