(செ.தேன்மொழி)
அரசாங்கம் உகந்த பொருளாதார கொள்கையின்றி செயற்படுவதன் காரணமாகவே நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது என்று கூறியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும, ஜனாதிபதி தேர்தலில் இழைத்ததைப் போன்ற தவறை மக்கள் மேலும் செய்யாமல் எதிர்வரும் பொதுத் தேர்தலில் விவேகத்துடன் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அவர் குறிப்பிட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது,
அரசாங்கம் உகந்த பொருளாதார கொள்கையின்றி செயற்பட்டுவருகின்றது. இதன்காரணமாகவே இன்று அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளன. எமது ஆட்சிக்காலத்தில் 52 நாட்கள் அரசியல் நெருக்கடி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் போன்ற சம்பவங்களுக்கு மத்தியில் நாங்கள் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இவ்வாறு மக்களுக்கு சுமை ஏற்படுத்தும் வகையில் அதிகரிக்கவில்லை, இவ்வாறான சந்தர்ப்பத்தில்கூட சர்வதேச கடனை செலுத்த முடியாது என்று குறிப்பிட்டு இந்தியாவுக்கோ அல்லது ஏனைய நாட்டுக்கோ சென்று கையேந்தி நிற்கவில்லை. பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இந்தியாவுக்குச் சென்று இந்திய பிரதமர் நரேந்திரமோடியிடம் கடனை கட்டுவதற்காக 3 வருட கால அவகாசத்தை பெற்றுக்கொடுக்குமாறு கூறி யாசகம் பெற்று வந்துள்ளார். இந்த நிலைமைக்கு ஒருபோதும் நல்லாட்சி அரசாங்கம் சென்றிருக்கவில்லை. எத்தனை சிக்கல்கள் வந்தபோதிலும் சர்வதேச நாடுகளுக்கு செலுத்த வேண்டியுள்ள கடன்களை ஒழுங்கான முறையில் செலுத்தி வந்தது.
அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விட்டால், மஹிந்த அதற்கு இந்தியாவின் விளைச்சல்கள் அறுவடை செய்யப்பட்டதன் பின்னர் அந்த பொருட்களை இந்திய பிரதமரிடம் கலந்துரையாடி பெற்றுக்கொண்டு உணவுப்பயிர்களுக்கான சலுகையை பெற்றுக்கொடுக்கலாம் என்று தெரிவிக்கின்றார். இவ்வாறு இந்திய பிரதமரின் உதவியை நாடவா மக்கள் இவருக்கு வாக்களித்தார்கள்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நியமனங்கள் மற்றும் அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் 24 ஆயிரம் பேரின் நியமனங்களை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது . இவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது அதற்கான நிதியும் ஒதுக்கிவைக்கப்படும். இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களுடன் தொடர்பு கொண்டுள்ள ஒப்பந்ததாரர்களுக்கான கொடுப்பனவுகள் இன்னும் வழங்கப்படாமல் இருக்கின்றன இந்த அபிவிருத்தி செயற்றிட்டங்கள் ஐக்கிய தேசியக் கட்சியினதோ, ஐ.தே.க. கூட்டணியினரின் நலன்களுக்கோ முன்னெடுக்கப்படவில்லை. நாட்டு மக்களின் நலனுக்காகவே முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்திற்கு பெரிதும் ஆதரவளித்த அரச ஊழியர்கள் இன்று விமர்சிக்கப்படுகின்றனர். அவர்களுக்காக இந்த அரசாங்கம் எந்தவித நலனையும் பெற்றுக்கொடுக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் அரச ஊழியர்கள் சிந்திக்க வேண்டும். 2015ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதிகளில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சிலருக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் இவ்வாறு தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக குழுவொன்றை நியமித்துள்ளது. இது முறையற்ற செயற்பாடாகும். நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணைகள் தொடர்பில் யாருக்கும் குழு அமைத்து ஆராய்ந்து பார்க்க முடியாது.
இன்று வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள குற்றவாளிகள் அனைவரும் அச்சமின்றி நாடுதிரும்புகின்றனர். வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த உதயங்க வீரதுங்க போன்றோர் இன்று நாட்டுக்கு திரும்பியுள்ளமைக்கு காரணம் தற்போதைய அரசாங்கத்தில் தமக்கு இலகுவில் சட்டத்திடமிருந்து தப்பிக்கொள்ளலாம் என்ற அவர்களின் நம்பிக்கையேயாகும். ஆட்சிக்கு வந்து மூன்று மாதகாலமாகியுள்ள நிலையில் தாம் வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாது இருக்கும் அரசாங்கம் தொடர்பில் மக்கள் நன்கு அவதானத்துடன் செயற்பட வேண்டும். தொடர்ந்தும் பிழையை விடாது எதிர்வரும் பொதுத்தேர்தலிலாவது சிறந்த தீர்மானத்தை எடுக்கவேண்டும் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் சந்திப் சமரசிங்க குறிப்பிடுகையில்,
அரசாங்கம் நாட்டின் அபிவிருத்திக்காகவும், மக்களுக்கான சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்காகவும் தீர்மானமொன்றை எடுத்திருந்தால் நாங்கள் அதற்கு எமது பூரண ஒத்துழைப்பை வழங்கியிருப்போம். ஆனால் குறைநிரப்பு பிரேரணை ஒன்றை கொண்டு வந்து அதன்மூலம் மேலும் கடனைப்பெறவே அரசாங்கம் முயற்சித்தது. இதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதி கொடுக்கமாட்டோம். பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ மக்களுக்கான சலுகையை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் எடுத்த முயற்சிக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இவர்களால் முன்வைக்கப்பட்டிருந்த குறைநிரப்பு பிரேரணையில் மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் மக்களின் நலனுக்காக பல்வேறு சலுகைகளை பெற்றுக் கொடுத்திருந்த போதிலும் தற்போதைய அரசாங்கம் அதனைச் செய்யாமல் இருப்பதுடன், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றாமல் இருக்கின்றது.இந்நிலையில் ராஜபக் ஷக்களின் முன்னைய ஆட்சியில் எவ்வாறு செயற்பட்டார்களோ அதேபோன்றே தற்போதும் செயற்படு கின்றனர் என்பது தற்போது வெளிப் படையாகின்றது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி பழமையான கட்சி என்பதுடன், அது வரலாற்று சிறப்புமிக்கது. இவ்வாறான கட்சியையோ, அதன் சின்னத்தையோ விமர்சிப்பது தொடர்பில் எமக்கு விருப்ப மில்லை. பொதுத்தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பில் சட்டசிக்கல்கள் காணப்படுவதால் அதனை நிவர்த்தி செய்து கொண்டு செயற்குழுவின் அனுமதியுடன் தேர்தலில் போட்டியிடுவோம். இந்நிலையில் மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நன்கு அவதானம் செலுத்தி சரியான தீர்மானமொன்றை எடுக்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM