ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனிவா நேரப்படி காலை 9 மணிக்கு ஆரம்பமாகவிருக்கின்ற நிலையில் அரசாங்கம் 30/1 பிரேரணையிலிருந்து விலகப் போவதாக உத்தியோகபூர்வமாக நாளை மறுதினம் புதன்கிழமை அறிவிக்கவிருக்கிறது.
இந்த அறிவிப்புடன் அடுத்த கட்டமாக என்ன நடக்கும் என்பதும் அரசாங்கத்தின் இந்த நகர்வு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளும் சர்வதேச சமூகமும் என்ன பதிலளிக்கப் போகின்றன என்பதே இன்றைய நிலையில் மிக முக்கிய விடயமாக ஆராயப்படுகிறது.
அரசாங்கத் தரப்பினர், தமிழர் தரப்பினர், பாதிக்கப்பட்ட மக்கள், சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் ஜெனிவாவுக்கு வருகை தந்துள்ள நிலையில் இவ்வாறு சர்வதேச சமூகத்தின் பதில் தொடர்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்நாள் உரைகள்
இன்றைய தினம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமானதும் முதலாவதாக பேரவையின் தலைவர் உரையாற்றவிருக்கிறார். அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்ரஸ் உரையாற்றவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் உரையாற்றவிருக்கிறார். அதன் பின்னர் பொதுவான மனித உரிமை தொடர்பான தலைப்பில் விவாதம் நடைபெறவிருக்கிறது. இதில் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளன.
அமைச்சர் தினேஷின் அறிவிப்பு
அதனடிப்படையிலேயே எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உரையாற்றவிருக்கிறார். ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் அமர்வின்போது முதல் மூன்று நாட்களில் பொதுவான தலைப்பில் விவாதம் நடைபெறும். அதில் சர்வதேச நாடுகளின் அமைச்சர்கள் மட்ட பிரதிநிதிகள் உரையாற்றுவது வழக்கமாகும். அதனடிப்படையிலேயே புதன்கிழமை அமைச்சர் தினேஷ் குணவர்தன உரையாற்றவிருக்கிறார். அதன்போது இலங்கை அரசாங்கம் ஜெனிவா பிரேரணையான 30/1 யோசனையிலிருந்து விலகுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரின் அறிவிப்பு பேரவையில் உறுப்பு நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையிலேயே இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்புக்கு மனித உரிமைப் பேரவையும் உறுப்பு நாடுகளும் என்ன பதில் கூறப்போகின்றன என்பது முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு முன்னைய இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் இந்த 30/1 என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தது. அதில் 20 பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன. மிக முக்கியமாக யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பாக விரிவான சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த விசாரணைப் பொறிமுறையில் பொதுநலவாய வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன.
அதேபோன்று காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண காணாமற்போனோர் குறித்த அலுவலகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக இழப்பீட்டு அலுவலகம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு அரசியல் கைதிகள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றும் யுத்தத்தின்போது பொதுமக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமன்றி அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதும் மிக முக்கியமான பரிந்துரையாக 30/1 என்ற பிரேரணையில் இடம்பெற்றிருந்தது.
ஐந்து வருடங்களில் நடந்தது என்ன?
2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டிருந்த பிரேரணை 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இந்தப் பிரேரணைக்கு அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியமையே அப்போதைய சூழலில் திருப்புமுனையாக காணப்பட்டது. காரணம் அதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட அனைத்துப் பிரேரணைகளையும் பதவியிலிருந்த அரசாங்கம் நிராகரித்திருந்தது. இந்தப் பின்னணியிலேயே 30/1 என்ற பிரேரணை முக்கியத்துவம் பெறுகிறது. ஆனாலும் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆகும்போது 30/1 என்ற பிரேரணை முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. அதனால் மீண்டும் 34/1 என்ற தலைப்பில் திருத்தப் பிரேரணை மீண்டும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டது. அதன்படி 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆகும்போது இந்தப் பிரேரணை அமுல்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் அக்காலப்பகுதியிலும் பிரேரணை அமுல்படுத்தப்படவில்லை. காணாமல் போனோர் அலுவலகம் மட்டும் நிறுவப்பட்டிருந்தது. அது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் முழுமையான நம்பிக்கை இருக்கவில்லை என்பதுடன் பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
34/1 என்ற தலைப்பில் மீள் புதுப்பிக்கப்பட்ட ஜெனிவா பிரேரணை 2019 ஆம் ஆண்டு வரையில் அமுல்படுத்தப்படாமையினால் மீண்டும் 40/1 என்ற தலைப்பில் மீண்டும் 2 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டது. அதனடிப்படையில் 2021 ஆம் ஆண்டுவரை இந்தப் பிரேரணை அமுலில் இருக்கும் எனக்கூறப்பட்டது. இந்தச் சூழலிலேயே புதிதாக ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் பிரேரணையிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறது. 30/1 என்ற பிரேரணை ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படும் என சர்வதேச சமூகம் எதிர்பார்த்தது. ஐக்கிய நாடுகள் சபையில் நம்பிக்கை வைத்தது. எனினும் தற்போது எந்தவிதமான பரிந்துரைகளும் முழுமையாக அமுல்படுத்தப்படாத நிலையில் பிரேரணையிலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அதனாலேயே அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு தொடர்பில் சர்வதேச நாடுகளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் என்ன கூறப்போகின்றன என்பது முக்கியத்துவம்மிக்கதாக அமைகின்றது.
ஆணையாளரின் புதிய அறிக்கை
இதேவேளை கடந்த புதன்கிழமை இலங்கை தொடர்பான அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட் வெளியிட்டிருந்தார். அதில் அவர் கீழ் வரும் முக்கிய விடயங்களை முன்வைத்திருந்தார்.
அமைதியான சமூகத்தை உருவாக்கவும் அனைத்து மக்களுக்கும் நிரந்தர முன்னேற்றத்தை வழங்கவும் 30/1 என்ற ஐ.நா. பிரேரணையை முழுமையாக அமுல்படுத்தவேண்டியது அவசியமாகும்.
காணாமல் போனோர் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள அலுவலகத்துக்கு சுயாதீனத்துவமும் தேவையான வளங்களும் வழங்கப்படவேண்டியது அவசியமாகும். சிவில் சமூகம் மற்றும் ஊடகங்களுக்கான உரிமை உறுதிப்படுத்தப்படுவது அவசியமாகும்.
மனித உரிமை காப்பாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கண்காணிப்புக்கள், சித்திரவதைகள், பழிவாங்கும் தன்மை போன்ற விடயங்களை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன். கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்தவிதமான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலைமை மக்களுக்கு அரசாங்கத்தின் மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்தும். எனவே நிலுவையிலுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான சம்பவங்கள் குறித்து விரிவான சுயாதீனமான பொறுப்புக்கூறல் விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும். நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கவேண்டும். அதற்கு பதிலாக சர்வதேச தரத்துக்கு அமைவான சட்டத்தை கொண்டுவரலாம்.
இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 30/1 என்ற பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை நெருக்கமான கண்காணிப்பை இலங்கை மீது மேற்கொள்ளவேண்டும். 2015 ஆம் ஆண்டில் வழங்கிய வாக்குறுதிகளை மீளப்பெறுவதானது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். 30/1 பிரேரணையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டும் என்று வலியுறுத்துகின்றது. உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதில் முன்னேற்றத்தை காண முடியவில்லை. 30/1 பிரேரணையில் குறிப்பிட்டுள்ளமைக்கு அமைவாக மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து ஆராய ஒரு நீதிமன்ற கட்டமைப்பை உருவாக்குவதிலும் முன்னேற்றமில்லை.
சர்வதேசத்தின் பதில் என்ன?
இவ்வாறு பல்வேறு முக்கிய விடயங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்டிருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் ஒரு ஜெனிவா கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகப் போகிறது. அனைத்துத் தரப்பினரதும் பார்வை தற்போது ஜெனிவாப் பக்கம் திரும்பியிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் ஜெனிவாவில் முகாமிடத் தொடங்கியுள்ளனர். பல்வேறு தரப்பினரின் அறிவிப்புக்களும் வெளியாகவிருக்கின்றன. எனவே பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் இம்முறை சர்வதேச மேடையில் எவ்வாறான புதிய நிலைமை ஏற்படப் போகிறது என்பதையும் அரசாங்கத்தின் அறிவிப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பதில் எவ்வாறு இருக்கும் என்பதையும் வரும் நாட்களில் அறிந்துகொள்ள முடியும்.
- ஜெனீவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன் -
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM