ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என்பதும் அவர்களுக்கு நீதி எவ்வாறு கிடைக்கப்போகிறது என்பதும் தற்போதைய சூழலில் ஆராயப்பட்டு வருகின்ற மிக முக்கிய விடயமாக மாறியிருக்கிறது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த 30/1 என்ற பிரேரணையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெ ளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன 26ஆம் திகதி ஜெனிவா பேரவையில் இலங்கை சார்பில் உரையாற்றும்போது வெளியிட விருக்கிறார்.
இந்த நிலையில், இலங்கை உத்தியோகபூர்வமாக பிரேரணையிலிருந்து விலகுவதாக வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மனித உரிமை பேரவையில் அறிவித்ததும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் மற்றும் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் எவ்வாறான பிரதிபலிப்பை வெளியிடுவார்கள் என்பது தொடர்பில் பாரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தனர். 2015ஆம் ஆண்டு வரை ஜெனிவா மனித உரிமை பேரவையில் பல்வேறு பிரேரணைகள் சர்வதேச நாடுகளினால் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. ஆனால் முன்னைய அரசாங்கம் அவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என நிராகரித்திருந்தது. இந்த நிலையிலேயே 2015ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் இந்த 30/1 என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரேரணைக்கு முன்னைய இலங்கை அரசாங்கம் அனுசரணை வழங்கியமையின் காரணமாக அது ஒரு திருப்புமுனையாக காணப்பட்டது. இதனூடாக தீர்வு கிடைக்கும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் கடந்த நான்கரை வருடங்களாகவே இந்தப் பரிந்துரைகள் பெரிதாக நிறைவேற்றப்படவில்லை. இந்த சூழலில் நவம்பர் மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்தப் பிரேரணையிலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன எதிர்வரும் 26 ஆம் திகதி நான் ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் உரையாற்றவுள்ளேன். அதாவது இலங்கையானது 30/1 என்ற பிரேரணையிலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறுகின்றது என்பதனை நான் ஜெனிவா பேரவையில் அறிவிக்கவுள்ளேன். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையில் இலங்கை அரசாங்கம் இனி பங்குதாரர் இல்லை என்பதனை நான் ஜெனிவாவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது அரசியலமைப்புக்கு விரோதமானது. அப்போது பதவியில் இருந்த ஜனாதிபதி தனக்கு இது குறித்து தெரியாது என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்த பிரேரணைக்கு மக்கள் அங்கீகாரமளிக்கவுமில்லை. அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறப்படவுமில்லை. எனவே இது சட்ட விரோதமானது என்றும் ஜனநாயகத்துக்கு புறம்பானது எனவும் நான் ஜெனிவா பேரவையில் அறிவிக்கவிருக்கின்றேன் எனவும் வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியிருக்கிறர்.
இதேவேளை இந்த பிரேரணைக்கு எதிராகவே மக்கள் கடந்த தேர்தலில் ஆணை வழங்கினர். எனவே மக்களின் அங்கீகாரம் 30/1 பிரேரணைக்கு கிடைக்கவில்லை. எனவே அதிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்தோம். என்ன பிரச்சினையாக இருந்தாலும் நாங்கள் உள்ளக ரீதியில் அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்வோம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அந்தவகையில் அரசாங்கம் ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகுவது உறுதியாகியுள்ளது. எனினும் அரசாங்கத்தின் அறிவிப்பு ஜெனிவாவில் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தப்பட்ட பின்னரே ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உறுப்புநாடுகளின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். அது எவ்வாறான தன்மையுடன் இருக்கும் என்பதை அரசாங்கம் அறிவிப்பு விடுக்கும்வரை பார்க்கவேண்டியிருக்கிறது.
எப்படியிருப்பினும் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் அந்த மக்கள் தமக்கான நீதியைத் தொடர்ந்து எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு நீதி வழங்கவேண்டியது அவசியமாகும். கடந்த 10 வருடங்களாக அந்த மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவில்லை. இந்தநிலையில் தற்போது அமுலில் இருக்கின்ற பிரேரணையிலிருந்தும் அரசாங்கம் விலகுவதாக அறிவித்திருக்கின்றது. எனினும் ஜெனிவா பிரேரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகினாலும் அந்தப் பிரேரணை ஒருபோதும் செயலிழக்காது. அரசாங்கம் விலகினால் சர்வதேச ரீதியிலான கடும் நெருக்கடி மற்றும் அழுத்தங்களை சந்திக்க வேண்டி வரும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.
நிறைவேற்றப்பட்ட பிரேரணையிலிருந்து ஒருவர் விலகலாம். அது அவர்களின் விருப்பம். ஆனால் அந்த விலகலானது பிரேரணையை ஒருபோதும் பாதிக்காது. அது நிறைவேற்றப்பட்ட பிரேரணையாகவே இருக்கும். ஒருபோதும் செயலிழக்காது என்றும் இரா. சம்பந்தன் குறிப்பிட்டிருக்கிறார்.
இதேவேளை இவ்வாறானதொரு செயற்பாட்டை அரசாங்கம் செய்யும் என்று நாங்கள் ஏற்கனவே சந்தேகப்பட்டோம். அதனால் நான் அண்மையில் ஜெனிவா சென்றிருந்தபோது இது தொடர்பில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு தெரிவித்திருந்தேன். அரசாங்கம் விலகினால் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பது தொடர்பிலும் நான் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் உரையாடியிருக்கிறேன். மாற்று வழிகள் தொடர்பாக நாம் பேசியிருக்கிறோம். இவ்வாறான சூழலில் உலகளாவிய நியாயாதிக்கத்தை உறுப்பு நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக பயன்படுத்த வேண்டும் என்று இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறியிருக்கின்றார்.
அரசாங்கம் இந்தப் பிரேரணையிலிருந்து விலக முடியாது. உலகளாவிய நியமங்களில் இலங்கைக்கு பல பொறுப்புகள் இருக்கின்றன. அவற்றிலிருந்தும் இலங்கை விலக வேண்டும். அவ்வாறாக விலகினால் இலங்கை கடும் பாதிப்பை சந்திக்கும். சர்வதேச சட்டங்களுக்கு இணைந்து செயற்படவேண்டும் என்றும் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அந்தவகையில் புதிய அரசாங்கம் ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகுமிடத்து எவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பது என்பது தொடர்பாக கூட்டமைப்பு ஆராய்கிறது. எப்படியிருப்பினும் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் பாரிய வேதனைகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாமலுள்ளன. குறிப்பாக காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியாமல் அந்த மக்கள் தவித்து வருகின்றனர். அதேபோன்று பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் வார்த்தைகளால் விபரிக்கமுடியாதவைகளாக இருக்கின்றன. எனவே யுத்தம் முடிவடைந்து 11 வருடங்கள் நிறைவடையப்போகின்ற சூழலில் இன்னும் அந்த மக்கள் நீதிக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து இவ்வாறு இந்த மக்கள் வேதனையுடன் காத்துக்கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல. தமது நாட்டுப் பிரஜைகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர்ந்து அரசாங்கம் அவர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும். தற்போது ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக என்ன நடக்கும் என்பது பாரிய கேள்வியாகவிருக்கிறது. எவ்வாறு இருந்தபோதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி விடயத்தில் இலங்கை அரசாங்கம், சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன பொறுப்புடன் செயற்படவேண்டியது அவசியமாகும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
(24.02.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM