மாற்றுத் தலைமையாகுமா மாற்று அணி ?

Published By: Digital Desk 3

17 Feb, 2020 | 04:58 PM
image

‘’தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் தலை­மையில் மாற்று அணி எப்­போது உரு­வாகும் என்ற வடக்கு, கிழக்கில் உள்ள எல்லா மக்­க­ளி­னதும் புத்­தி­ஜீ­வி­க­ளி­னதும் பொது அமைப்­பு­க­ளி­னதும் ஊட­கங்­க­ளி­னதும் எதிர்­பார்ப்பு இன்று நிறை­வே­றி­யுள்­ளது” என தமிழ் மக்கள் தேசியக் கூட்­ட­ணியின் அங்­கு­ரார்ப்­பண நிகழ்வில் சி.வி.விக்­னேஸ்­வரன் உரை­யாற்­றிய போது குறிப்­பிட்­டி­ருந்தார்.

தேர்­தலை வெற்றி கொள்ளும் நோக்­கத்­துடன் கூட்­ட­ணியை தாம் உரு­வாக்­க­வில்லை என்றும் அவர் கூறி­யி­ருந்தார்.

விக்­னேஸ்­வரன் தலை­மையில் உரு­வா­கி­யி­ருக்கும் மாற்று அணி என்­பது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றான அணியே தவிர, கூட்­ட­மைப்பு தற்­போது வகிக்கும் தலை­மைத்­து­வத்­துக்கு மாற்­றா­னது அல்ல.

மாற்று தலை­மைத்­துவம் என்­பதை வெறு­மனே மாற்று அணி­களின் உரு­வாக்­கங்கள் தீர்­மா­னிக்க முடி­யாது.

கடந்த 20 ஆண்­டு­களில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றான அணி என்று தேர்­தல்­களில் போட்­டி­யிட்ட பல அணிகள், வெற்­றியைப் பெற­வில்லை. அவ்­வப்­போது தேர்­தல்­களில் தோல்­வியை சந்­தித்த பின்னர் காணா­மலும் போயி­ருக்­கின்­றன. மாற்றுத் தலை­மையா இது என்­பதை மாற்று அணி­களின் உரு­வாக்­கத்தின் மூலம், கணிக்க முடி­யாது. அதனை மக்கள் தான் தீர்­மா­னிக்க முடியும். தேர்­தல்­களில் மக்கள் வெளிப்­ப­டுத்தப் போகின்ற ஆத­ரவு தான் அதனை முடிவு செய்யும்.

தம்மை மாற்று அணி என்று சி.வி.விக்­னேஸ்­வரன் குறிப்­பிட்­டி­ருக்­கின்ற போதும், அவர் தேர்தல் வெற்­றியை இலக்­காக கொண்டு தாங்கள் இந்தக் கூட்­ட­ணியை உரு­வாக்­க­வில்லை என்று கூறி­யி­ருப்­பது கவ­னிக்க வேண்­டி­யது.

பத­வி­களும் சலு­கை­களும் தமக்கு முக்­கி­ய­மில்லை என்று அவர் குறிப்­பிட்­ட­தி­லி­ருந்தே, அவர் ஏன் அவ்­வாறு கூறினார் என்­பதை புரிந்து கொள்ள முடிந்­தது.

அர­சியல் கட்­சிகள், கூட்­ட­ணி­களைப் பொறுத்­த­வ­ரையில் தேர்தல் என்­பது முக்­கி­ய­மா­னது. தேர்­தலை எதிர்­கொள்­வதும் அதில் வெற்றி பெறு­வ­தற்கு வெறித்­த­ன­மாக உழைக்க வேண்­டி­யதும் அவ­சி­ய­மா­னது.

அர­சியல் கட்­சிகள் என்­பது தேர்­தலின் மூலம் மக்­க­ளுக்கு தலைமை தாங்­கு­வ­தற்­காக உரு­வாக்­கப்­ப­டு­ப­வையே. தேர்தல் வெற்றி முக்­கி­ய­மல்ல, மக்­களின்  நல­னுக்­காக செயற்­ப­டு­வதே இலக்கு என்றால், மக்­களின் கொள்­கை­க­ளையே முன்­னெ­டுத்துச் செல்­வது என்றால், அதற்கு அர­சியல் கட்­சிகள் தேவையும் இல்லை.

ஜன­நா­யக அர­சி­யலில், கட்­சிகள் தேர்­தல்­களில் வெற்­றி­யீட்­டு­வது முக்­கி­ய­மா­னது. அதன் மூலம் தான் மக்­க­ளுக்குத் தலைமை தாங்க முடியும். மக்­களின் பிர­தி­நி­தி­க­ளாக செயற்­ப­டவும் முடியும்.

இவ்­வா­றான நிலையில், தேர்தல் வெற்றி முக்­கி­ய­மல்ல என்ற விக்­னேஸ்­வ­ரனின் கருத்து  மாற்று அணியின் பலம் மீது அவர் கொண்­டுள்ள நம்­பிக்­கை­யீ­னத்தை தான் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

தேர்­தல்­களில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இம்­முறை, முன்­னரைப் போன்று வெற்றி பெற­மு­டி­யாது என விக்­னேஸ்­வரன் முன்னர் ஒரு சந்­தர்ப்­பத்தில் கூறி­யி­ருந்தார்.

ஒரு­போதும்  அவர், தமிழ்த் தேசியக்  கூட்­ட­மைப்பு முற்­றாக தோல்வி காணும் என்றோ அதனை தாங்கள் தோற்­க­டிப்போம் என்றோ கூற­வில்லை.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கடந்த இரண்டு தசாப்­தங்­க­ளாக, தமிழ் மக்கள் மத்­தியில் அர­சியல் செய்­கி­றது. அதனைத் தோற்­க­டிப்­பது இல­கு­வா­ன­தல்ல என்­பது அவ­ரது கணிப்­பாக இருக்­கலாம்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களில் முக்­கி­ய­மா­ன­தாக உள்ள தமி­ழ­ரசுக் கட்சி வலு­வான கட்சி கட்­ட­மைப்­பு­களை வடக்கு, கிழக்­கிலும் கொழும்­பிலும் கொண்­டி­ருக்­கி­றது. இதுவும், கூட்­ட­மைப்பை தோற்­க­டிப்­ப­தற்கு சிர­ம­மான காரியம் என்­பது அவ­ருக்கு தெரிந்­தி­ருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றான அணி என்று பிர­க­டனம் செய்த தமிழ் மக்கள் தேசிய கூட்­டணி, அதனைத் தோற்­க­டிப்போம் தேர்­தலில் வெற்றி பெறுவோம் என்று நம்­பிக்கை கொடுக்க வேண்­டி­யது தான் முக்­கி­ய­மா­னது.

அவ்­வா­றான நம்­பிக்­கையை கொடுக்க முனை­யாத ஒரு மாற்று அணி­யினால், எவ்­வாறு மக்­க­ளிடம் மாற்றுத் தலை­மை­யாக உரு­வெ­டுப்போம் என்ற நம்­பிக்­கையை உரு­வாக்க முடியும் என்ற கேள்வி எழு­கி­றது.

அதை­விட, இந்த மாற்று அணி நேர­டி­யா­கவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு சவால் விடுத்­தி­ருக்­கி­றது. அதன் குறை­பா­டு­களை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றது. கூட்­ட­மைப்பின் தவ­று­களை திருத்த முடி­யா­ததால் தான், அதி­லி­ருந்து வில­கி­ய­தா­கவும் ஒற்­றுமை என்ற பெயரில் மீள இணைய விடுத்த அழைப்பை நிரா­க­ரித்­த­தா­கவும் கூறு­கி­றது.

அவ்­வா­றான மாற்று அணி, தேர்தல் வெற்­றியை இலக்­காக கொண்­டது அல்ல என்று கூறு­வது வியப்பு.

தலை­மைத்­துவம் தவ­றா­னது என்­பதை சுட்­டிக்­காட்­டு­வதோ குற்­றம்­சாட்­டு­வதோ மாத்­திரம் மாற்று அணியின் பொறுப்பு அல்ல. அந்த தவறைத் திருத்­தவோ அல்­லது அதற்கு மாற்­றான தலை­மைத்­து­வத்தை அளிக்­கவோ தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். அது தான் பொறுப்பு வாய்ந்த செயல்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை குற்­றம்­சாட்டி அர­சியல் செய்­வது யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து புது­டெல்லி வரைக்கும் போய் விட்­டது.

டக்ளஸ் தேவா­னந்­தாவும் சி.வி.விக்­னேஸ்­வ­ரனும் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லமும் ஆனந்­த ­சங்­க­ரியும் சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரனும் சிவா­ஜி­லிங்கம், சிறி­காந்தா, அனந்தி சசி­தரன் போன்­ற­வர்­களும் கூட்­ட­மைப்பை குறை கூறி  அர­சியல் செய்­வது வழக்கம். ஆரம்­பத்தில் இருந்தே அவர்கள் அதனைத் தான் செய்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ, உதய கம்­மன்­பில, விமல் வீர­வன்ச போன்ற சிங்­களத் தலை­வர்­களும் கூட்­ட­மைப்பை குறை சொல்லித் தான் அர­சியல் நடத்­து­கி­றார்கள்.

அண்­மையில் பிர­தமர் மஹிந்த புது­டெல்­லியில் கூட அதனைச் செய்­தி­ருக்­கிறார்.            

எல்லாத் தரப்­பு­களும் கூட்­ட­மைப்பை விமர்­சிக்­கின்­றன, குறை சொல்­கின்­றன. அப்­ப­டி­யி­ருக்­கையில், கூட்­ட­மைப்பை தோற்­க­டிக்கும் அர­சி­யலை அதற்­கே­யு­ரிய வீச்­சுடன் முன்­னெ­டுக்க வேண்­டி­யது தான் மாற்று அணியின் இலக்­காக இருக்க வேண்டும்.

வரும் பொதுத்­தேர்­தலில் விக்­னேஸ்­வரன் தலை­மை­யி­லான தமிழ் மக்கள் தேசிய கூட்­டணி ஒன்று தான் மாற்று அணி என்ற அடை­யா­ளத்­துடன் போட்டி போடும் என்­றில்லை. இன்னும் பல அணிகள், மாற்று அணிகள் கள­மி­றங்­கவும் கள­மி­றக்­கப்­ப­டு­வ­தற்கும் திட்­ட­மி­டப்­பட்­டி­ருக்­கின்­றன.

இவ்­வா­றான அணிகள், கூட்­ட­ணிகள் எல்­லாமே போட்டி போடும்­போது தமிழ் மக்­களின் வாக்­குகள் சிதறிப் போகும். அது வடக்கில் காலூன்­றவும் வடக்­கி­லுள்ள மக்­களின் வாக்­கு­களை சித­ற­டிக்­கவும் காத்­தி­ருக்கும் சக்­தி­க­ளுக்கு சாத­க­மா­ன­தாக அமையும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தான், தமிழ் மக்­களின் ஏக பிர­தி­நி­தி­க­ளாக இருக்க வேண்டும் என்ற அர­சியல் நியதி கிடை­யாது. அதனை மாற்ற வேண்­டிய தேவை தமிழ் மக்­க­ளுக்கு உரு­வானால், அவர்கள் அதனை செய்தே ஆவார்கள்.

அவ்­வா­றான மாற்றம் என்­பது, வலு­வான ஒன்­றாக இருக்க வேண்டும்.  கூட்­ட­மைப்பும் மாற்று அணி­களும் மோதிக் கொண்­டி­ருக்க, பின்னால் நிற்கும் வேறு தரப்­புகள் ஆச­னங்­களைப் பங்­கிட்டுக் கொண்டு போய் விடு­வ­தற்கு வழி­வ­குத்து விடக்­கூ­டாது.

அந்த விட­யத்தில் தமிழ்த் தேசிய அர­சியல் பரப்பில் உள்ள எல்லா கட்சிகளுமே தவறிழைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரித்து தம்மைப் பலப்படுத்திக் கொள்ள இந்த அணிகள் முயற்சிக்கின்றனவே தவிர, தமிழ் மக்களின் வாக்குகளை ஒருங்கிணைத்து, தமிழரின் அரசியல் பலத்தை அதிகரித்துக் கொள்ள முனையவில்லை.

இந்தக் கோணத்தில் இருந்து பார்த்தால், மாற்று அணிகளின் உருவாக்கம், தமிழ் மக்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

மாற்று அணிகள் என்று புறப்படும் தரப்புகள், தமிழரின் அரசியல் பலம் சிதைந்து விடாதபடி தமது வியூகங்களை வகுத்து, தமிழரின் அரசியல் பிரதிநிதித்துவம் தவறான தரப்புகளின் கைகளுக்கு சென்று விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது முக்கியமானது.

- கபில்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணில் தரப்புடன் கூட்டு ; காலை...

2025-02-18 13:26:36
news-image

கறுப்பு பைலுடன் சபைக்கு வந்த ஜனாதிபதி...

2025-02-17 21:09:44
news-image

மிக மோசமான கொலை! : ஜனநாயகத்தின்...

2025-02-18 11:22:36
news-image

இலங்கையராகவும் தமிழராகவும் இருந்து தமிழில் தேசிய...

2025-02-17 14:25:08
news-image

‘தோட்ட மக்களாகவே’  அவர்கள் இருப்பதற்கு யார்...

2025-02-16 16:19:01
news-image

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக் கட்சியின் அஸ்தமித்துப்போன...

2025-02-16 15:54:02
news-image

இந்தியா, சீனாவை இலங்கை ஜனாதிபதி எவ்வாறு...

2025-02-16 15:08:22
news-image

நமீபிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர் சாம்...

2025-02-16 15:01:55
news-image

'வார்த்தை தவறும் அரசாங்கமும் பலவீனமான எதிர்க்கட்சியும்'

2025-02-16 14:24:02
news-image

'இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்' என்ற...

2025-02-16 12:44:24
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறந்த வேட்பாளர்கள்...

2025-02-16 12:03:58
news-image

தையிட்டி விகாரை இனஅழிப்பின் குறியீடு

2025-02-16 12:03:38