ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம்.
இறுதிக்கட்டப் போரின் போது லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான 58 ஆவது டிவிசன் படையினர், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கிடைத்த நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது.
வெளிநாடுகளில் உள்ள அதிகாரிகள் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்களில் ஈடுபட்டதற்கான நம்பகமான ஆதாரங்களை அமெரிக்க இராஜாங்க செயலர் கொண்டிருந்தால், அந்த நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழையத் தகுதியற்றவர்கள் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் வெளிநாட்டு செயற்பாடுகளுடன் தொடர்புடைய 7031 (சி) இலக்க சட்டத்தில் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையிலேயே, இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஐ.நா மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்ட லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், தீவிரமானவை, நம்பகமானவை என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இலங்கை அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிவிப்பு வெளியானவுடன், வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருந்த அறிக்கையில் இருந்தே அதனைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில், கூறப்பட்டிருப்பதைக் கொண்டே, இவ்வாறானதொரு அறிவிப்பை அதுவும் தற்போதைய தருணத்தில் இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கவில்லை என்று கருத முடிகிறது.
லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, கடந்த ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டவுடனேயே அமெரிக்கா அதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. கொழும்பில் அமெரிக்க தூதரகமும் வொஷிங்டனில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன. அத்துடன், இந்த நியமனத்தினால் இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை செய்திருந்தது. அந்த அறிவிப்பை அப்போதைய அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. இது புதிய அரசாங்கத்துக்கு ஊக்கமளிப்பதாகவே இருந்தது.
அதனால் தான், கடந்த டிசம்பர் 31ஆம் திகதியுடன், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக இருந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணவரத்ன ஓய்வுபெற்றதை அடுத்து, பதில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை, நியமித்திருந்தார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ.
இந்த நியமனத்தின் மூலம், அவர், ஐ.நா.வுக்கும் ஒரு செய்தியை வழங்கியிருந்தார். ஐ.நா அல்லது சர்வதேச நெருக்குதல்களுக்கு அடிபணியப் போவதில்லை என்பதே அந்த செய்தி. அந்த செய்தியை அமெரிக்கா புரிந்து கொண்ட பின்னரே, இலங்கையின் இராணுவத் தளபதி மற்றும் குடும்பத்தினருக்கு தமது நாட்டுக்குள் நுழைவதற்குத் தடை விதித்திருக்கிறது.
இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், பாதுகாப்பு மறுசீரமைப்பு போன்றவற்றுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக கூறியுள்ள அமெரிக்கா, போர்க்குற்றச்சாட்டுகள் விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கூறியிருக்கிறது.
இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பின்னர் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு, வந்திருப்பதை கேள்விக்குட்படுத்தியிருக்கிறது அரசாங்கம்.
இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதும் அமெரிக்கா எதிர்ப்பை வெளிப்படுத்தியது. ஆனாலும், அதனை இலங்கை அரசாங்கம் கருத்தில் கொள்ளாமல் தான், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை பாதுகாப்பு அதிகாரிகளின் பதில் பிரதானியாக நியமித்திருந்தார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ.
அந்த நியமனம், இடம்பெற்று 45 நாட்களுக்குள் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறது அமெரிக்கா.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு எதிர்வரும் 24ஆம் திகதி தொடங்கப் போகிறது. இந்த அமர்வில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.
ஏற்கனவே இலங்கைக்கு வழங்கிய கால அவகாசம் முடிவடையும் நிலையில், இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
இந்தநிலையில், தற்போதைய அரசாங்கம் காலக்கெடுக்களுக்கு அமைய செயற்படத் தயாரில்லை என்று கடந்த வியாழக்கிழமை, ஐ.நா பாதுகாப்புச் சபையில், “அமைதியைக் கட்டியெழுப்புதல் மற்றும் நிலையான அமைதி: மோதல்கள் மற்றும் மோதல்களுக்குப் பிந்திய நிலைமைகளில், நிலைமாறுகால நீதி” என்ற தலைப்பில் நடந்த திறந்த அமர்வில், உரையாற்றிய இலங்கைப் பிரதிநிதி சேனுகா செனிவிரத்ன அறிவித்திருக்கிறார்.
எனவே, ஜெனீவாவில் இம்முறை இலங்கை அரசாங்கம், பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை ஏற்றுச் செயற்படும் என்று கருத இடமில்லை. இவ்வாறான நிலையில், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அல்லது இம்முறை கூட்டத்தொடர் விடயத்தில் கடும்போக்கு நீடிக்கும் என்ற செய்தியைக் கொடுக்க முயன்றிருக்கலாம் அமெரிக்கா.
இலங்கையில் போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் அல்லது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள் என்ற அடிப்படையில், அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டவர்கள் பலர். இராணுவ அதிகாரிகள் மாத்திரமன்றி, விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரமுகர்கள் பலரும் கூட, அவ்வாறான தடையில் இருக்கின்றனர்.
ஆனாலும், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பற்றி, இவ்வாறானதொரு பகிரங்க தடை அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டிருப்பது இது தான் முதல் முறை. ஏற்கனவே தற்போதைய பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, ஜெனரல் ஜெகத் ஜயசூரிய உள்ளிட்ட பல இராணுவ அதிகாரிகளுக்கு, அமெரிக்கா வீசா வழங்க மறுத்திருந்தது. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் கூட அமெரிக்காவுக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
இவர்கள் அனைவருக்கும் வீசா மறுக்கப்பட்டதே தவிர, அது பற்றி அமெரிக்கா பகிரங்கப்படுத்தவில்லை. தனிப்பட்ட நபர்களின் வீசா கோரிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்துவதற்கு சட்டத்தில் இடமில்லை என்றே அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தனர்.
அத்துடன், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இராணுவ அதிகாரிகளுக்கு மாத்திரம் வீசா மறுக்கப்பட்டதே தவிர, அவர்களின் குடும்பத்தினருக்கு மறுக்கப்படவில்லை. ஆனால், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு பகிரங்கமாகவே தடை அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதுடன், அவரது நேரடி குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
இது, இலங்கையில் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை அணுகுகின்ற விடயத்தில் அமெரிக்கா இன்னுமொரு படி முன்னே சென்று முடிவெடுத்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. அதனால் தான், “பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காக பல வருடங்கள் போராடியதன் விளைவால் இடம்பெற்ற சிறியதொரு முன்னேற்றமாக இதை நாம் காண்கின்றோம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியிருக்கிறது. ஆனால், இது இலங்கைக்கு எதிரான கடுமையானதொரு நடவடிக்கை அல்ல. இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான முடிவுகளையும் அமெரிக்கா எடுக்கவில்லை. இராணுவத் தளபதிக்கு எதிராக, அவரது குடும்பத்தினருக்கு எதிராகவே அமெரிக்கா முடிவுகளை எடுத்திருக்கிறது. அதேவேளை இலங்கையுடன் உறவுகள், ஒத்துழைப்புகள் தொடருவதற்கான சமிக்ஞைகளையும் காட்டியிருக்கிறது.
அமெரிக்காவின் இந்த முடிவை, இலங்கை அரசாங்கம் கடுமையாக எதிர்த்திருக்கிறது. இது குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தகவல், ஆதாரங்களை சரிபார்த்து இந்த முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியிருக்கிறது.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று வழக்கம்போலவே தட்டிக்கழிக்க முனைந்திருப்பதுடன், ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு இராணுவத் தளபதியை நியமிக்கும் உரிமையை வெளிநாடு ஒன்று கேள்விக்குட்படுத்தும் விடயமாகவே பார்ப்பதாகவும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் குறுக்கீடு என்றே கருதுவதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த காலத்திலிருந்தே, புறச் சக்திகளின் தலையீடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் நாட்டின் இறைமை, சுதந்திரம் போன்ற விடயங்களில் யாருக்கும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும் கூறிவந்திருக்கிறது.
அதனையே தான் வெளிவிவகார அமைச்சின் அறிக்கை சற்று வேறுபட்ட மொழிநடையில் வெளிப்படுத்தியிருக்கிறது.
லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை, ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள சூழலில், இந்த விவகாரத்தை இன்னும் பரபரப்புக்குள்ளாக்கியிருக்கிறது.
சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் விடயத்தில் அமெரிக்கா ஒருபோதும் தடுமாறாது” என்று கூறியுள்ளதானது, நீதியை எதிர்பார்த்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய தெம்பைக் கொடுப்பதாகவும் அமைந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM