பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க எமது புதிய அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை வெற்றியளித்துள்ளதோடு வாக்குறுதி வழங்கப்பட்டதை போல் ஆயிரம் ரூபா சம்பளம் நிச்சயமாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்று பெருந்தோட்ட பயிர்ச்செய்கை விவசாய ஏற்றுமதி அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்தார்.
"மலையக மக்களுக்கு வழங்கப்படவேண்டிய அனைத்து உரிமைகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் இணைந்து அதிஉச்ச ஒத்துழைப்பை வழங்குவேன் என்றும் அவர் குறிப்பிட்டார். -
இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடமைப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அட்டன் வெலிஓயா தோட்டம் மேற்பிரிவில் நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 50 வீடுகளை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் ரமேஷ் பத்திரண கூறியதாவது,
நான் சிறுவனாக இருக்கும்போது, மலையக மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கை நிலை மேம்பாடு தொடர்பில் கதைக்கும்போது சௌமியமூர்த்தி தொண்டமான் என்ற நபர் தவிர்க்கமுடியாத இடத்தைப்பிடிப்பார். எனவே, செளமிய மூர்த்தி தொண்டமான் மற்றும் மலையக மக்கள் தொடர்பில் எனது தந்தையான அமரர் ரிச்சட் பத்திரணவின் மனதில் சிறந்த நன்மதிப்பு, கௌரவம் இருந்தது.
அவர் கல்வி அமைச்சராக இருந்தபோது இப்பகுதியிலுள்ள மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக தன்னால் முடிந்த நடவடிக்கைகளை அன்று முன்னெடுத்தார். இன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தில் பெருந்தோட்டத்துறை அமைச்சராக இருக்கும் நான் உங்களுக்கு (மலையக மக்களுக்கு) வழங்கவேண்டிய அனைத்துவித ஒத்துழைப்புகளையும் அமைச்சர் தொண்டமானுடன் இணைந்து வழங்குவேன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இந்த அரசாங்கம் பதவியேற்ற நாளிலிருந்து இரவு, பகல் பாராது மலையக மக்களுக்காக அமைச்சர் தொண்டமான் தீவிரமாக செயற்பட்டுவருகிறார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடினார். இதற்கு எமது அரசாங்கம் சாதகமான பதிலை வழங்கியது. நிச்சயம் அந்த தொகை கிடைக்கும். அதுமட்டுமல்ல உங்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்து உரிமைகளையும் வழங்குவதற்கு இந்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும். அதற்காக தொண்டமான் சிறந்த தலைமைத்துவத்தை மக்கள் சார்பில் வழங்கிவருகிறார்.
அதேவேளை, எமது நாட்டின் தேசிய பொருளாதாரத்தை சிறந்த இடத்துக்கு கொண்டு வருவதற்கு கடந்த 100 வருடங்களாக பெருந்தோட்ட மக்கள் பெரும் பங்களிப்பை வழங்கிவந்துள்ளனர். தேயிலை பொருளாதாரம் மூலம் நாட்டுக்கு வருடாந்தம் 231 பில்லியன் ரூபா கிடைக்கின்றது. அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதியில் தொழிலாளர்களின் பங்களிப்புடன் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலாபம் இரட்டிப்பாகும்பட்சத்தின் அதன் நன்மையை கம்பனிகள் மட்டும் அனுபவிக்கமுடியாது. கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களுக்கே அதன் பிரதிபலன்கள் சென்றடையவேண்டும். எனவே, இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு இணைந்து செயற்படுவோம் என அழைப்பு விடுக்கின்றேன். " - என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM