(எம்.மனோசித்ரா)
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்குவதில் தோட்ட உரிமையாளர்கள் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்ற நிலையில், மார்ச் முதலாம் திகதியிலிருந்து சம்பளத்தை அதிகரித்து கொடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் விடாமுயற்சியுடன் செயற்பட்டு வருவதாக அரசாங்க பேச்சாளரும் புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் மின்சக்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் வழங்குவது தொடர்பில் முத்தரப்பு உடன்படிக்கை 13 ஆம் திகதி புதன்கிழமை கைச்சாத்திடப்படவிருந்தது. எனினும் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென ஒப்பந்த கைச்சாத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மார்ச் முதலாம் திகதி முதல் அரசாங்கத்தால் ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட படி சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பிலும், மீண்டும் ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான தினம் தீர்மானிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் வினவிய போதே இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்க பிரதிநிதிகள் , பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் , அரசாங்க தரப்பினர் என மூன்று தரப்புகளும் இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவிருந்தன. எனினும் சில கம்பனிகள் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்ததன் காரணமாகவே ஒப்பந்தம் கைச்சாத்திடுவது ஒத்தி வைக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டிலேயே இருக்கிறது.
வியாழக்கிழமையும் இவ்விடயம் தொடர்பில் தோட்ட உரிமையாளர்களை சந்தித்து பேசியிருந்தோம். மீண்டும் அடுத்த வாரத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நிச்சயம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். அத்தோடு திட்டமிட்டபடி மார்ச் முதலாம் திகதி முதல் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும். இதில் யாரும் கலவரமடையத் தேவையில்லை என்றார்.