இலங்கை தமிழர்களின் நலன் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் இலங்கை வசமுள்ள கச்சதீவை விரைந்து மீட்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று டில்லிக்கு விஜயம் செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியை அவரது டில்லி ரேஸ் கோர்ஸ் இல்லத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் இடையே 50 நிமிடங்கள் வரை நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழக நலன் அடங்கிய 29 அம்சங்கள் கொண்ட 96 பக்கக் கோரிக்கை மனுவை முதல்வர் பிரதமரிடம் வழங்கினார்.
அம் மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும், தற்போது இலங்கை வசம் உள்ள 21 மீனவர்களையும் 92 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீண்டும் இந்தியா மீட்க வேண்டும். கச்சதீவில் தற்போது கட்டப்பட உள்ள அந்தோனியார் தேவாலயம் தமிழக மீனவர்களின் பங்களிப்போடு அமைக்கப்பட வேண்டும்.
மேலும் காவிரியம் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும், பறக்கும் ரயிலையும், மெட்ரோ ரயிலையும் இணைக்க வேண்டும், சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், நதி நீர் இணைப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும், முல்லைப்பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும், மாநில அரசு பரிந்துரைக்கும் இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண் டும், மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க வேண்டும், ஜி.எஸ்.டி. மசோதாவில் அ.தி.மு.க. கோரியுள்ள திருத்தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், உணவு தானியங்கள் வழங்குவதை குறைக்க கூடாது, மருத்துவ நுழைவுத்தேர்வை அமுல்படுத்த மாநில அரசை கட்டாயப்படுத்தக்கூடாது. மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்க எடுக்க வேண்டும், தமிழக கேபிள் டிவிக்குடிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும், தமிழகத்திற்கான மண் ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைக் கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அம்மனுவில் உள்ளடக்கப் பட்டுள்ளன.